அ. ரா. கிருஷ்ணசாஸ்திரி | |
---|---|
பிறப்பு | அம்பாலே ராமகிருஷ்ண கிருஷ்ணசாஸ்திரி 12,பிப்ரவரி,1890 அம்பாலே, சிக்மகளூரு மாவட்டம் (முந்தையமைசூர் மாவட்டம்), கருநாடகம் |
இறப்பு | 1 பிப்ரவரி 1968 பெங்களூர், கருநாடகம் |
தொழில் | எழுத்தாளர், பேராசிரியர், பத்திரிக்கையாளர் |
தேசியம் | இந்தியா |
வகை | புனைவு, தொன்மவியல் |
இலக்கிய இயக்கம் | நவோதயா |
அம்பாலே ராமகிருஷ்ண கிருஷ்ண சாஸ்திரி (ஆங்கிலம்: Ambale Ramakrishna Krishnashastry) (1890-1968) (கன்னடம்: ಅಂಬಳೆ ರಾಮಕೃಷ್ಣ ಕೃಷ್ಣಶಾಸ್ತ್ರಿ) இவர் கன்னட மொழியில் ஒரு முக்கிய எழுத்தாளரும், ஆராய்ச்சியாளரும் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கிருஷ்ண சாஸ்திரி தனது 'வசன பாரதம்' என்ற படைப்பின் மூலமாகவும், கன்னட மொழியில் மகாபாரதத்தைப் பற்றிய கதை மூலமாகவும் இறந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் பிரபலமாக இருந்து வருகிறார்.
கிருஷ்ண சாஸ்திரி, 1890 பிப்ரவரி 12 அன்று, (கர்நாடகா, இந்தியா) சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள அம்பாலே என்ற இடத்தில் ஹொய்சலா கர்நாடக ஸ்மார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இலக்கணத்தில் புகழ்பெற்றவரும், மைசூரில் உள்ள சமசுகிருத பள்ளியின் முதல்வருமான இராமகிருஷ்ணா சாஸ்திரி என்பவருக்கும் சங்கரம்மா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். கிருஷ்ணசாஸ்திரி தனது பத்தாவது வயதில் தனது தாயார் சங்கரம்மாவை பிளேக் நோயால் இழந்தார். இவரது தந்தை இராமகிருஷ்ணா சாஸ்திரி அனைத்துக் குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர், ஒரு அறிவியலாளராக தனது வாழ்க்கையைத் தொடர விரும்பினார். வறுமை காரணமாக, தனது இளங்கலை பட்டப்படிப்பபில் (1914) கன்னடம் மற்றும் சமசுகிருதம் படிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். மைசூரில் உள்ள "அதாரா கச்சேரியில்" (தலைமைச் செயலகம்) எழுத்தராக இவரது வாழ்க்கை தொடங்கியது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுநிலை கலை பட்டப்படிப்பில் சேருவதற்கு முன்பு மைசூரில் கிழக்கத்திய நூலகத்தில் (பின்னர் கிழக்கத்திய ஆராய்ச்சி நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது) ஒரு ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றினார். இறுதியாக கன்னட பேராசிரியரானார். ஓய்வு பெறும் வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றினார். தனது பதினாறு வயதில் பத்து வயதான வெங்கடலட்சம்மா என்பவரைவை மணந்தார்.
பேராசிரியர் கிருஷ்ண சாஸ்திரி பிரபல கன்னட எழுத்தாளரும் நாட்டுப்புறவியலாளருமான ஹா என்பவரால் "கன்னட சேனானி" என்று அழைக்கப்பட்டார். பெங்களூரு மத்திய கல்லூரியில் கர்நாடக சங்கத்தை ஆரம்பித்தவர் இவர்தான். பின்னர் இந்த சங்கங்கள் கர்நாடகா முழுவதும் பரவியது.
இவரது பிரபலமான சீடர்களில் சிலர் குவெம்பு, டி. என். ஸ்ரீகாந்தையா, எம். வி.சீதாராமையா, ஜி. பி. ராஜரத்தினம் ஆகியோர் அடங்குவர்.
இவர், ஒரு பலமொழிகளை அறிந்திருந்த அறிஞராக இருந்தார். கன்னடம் (தாய்மொழி), சமசுகிருதம், ஆங்கிலம் தவிர, பாளி, பெங்காலி (சுயமாக கற்றது), இந்தி, இடாய்ச்சு போன்ற மொழிகளிலும் இவர் புலமை கொண்டிருந்தார். இவருக்கு ஆங்கிலம், இடாய்ச்சு மொழிகளில் நல்ல புலமை இருந்தது. அந்த மொழிகளில் இருந்து கன்னடத்திற்கு சில சிறந்த படைப்புக்களை மொழிபெயர்க்க இது இவருக்கு உதவியது. கன்னட மொழிபெயர்ப்பின் போது இவர் காளிதாசன், பவபூதி, பாசா ஆகியோரின் சிறந்த சமசுகிருத நாடகங்களின் பல நுணுக்கங்களை வெளிப்படுத்தினார். பிரபல வங்காள புதின எழுத்தாளரான பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வாழ்க்கை வரலாறு இவருக்கு மத்திய சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத்தந்தது.[1]
கிருஷ்ண சாஸ்திரி வசன பாரதம், நிர்மலபாரதி, கதாம்ருதா உள்ளிட்ட பல சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதினார். வசனபாரதமும், நிர்மலபாரதியும் இந்து காவியமான மகாபாரதத்தின் சுருக்கப்பட்ட பதிப்புகள் ஆகும். கதாம்ருதா கதாசரித்சாகரகத்தின் கதைகள், சமசுகிருதத்தில் நூற்றுக்கணக்கான கட்டுக்கதைகள், உவமைகள், பிற கதைகளின் பெரிய தொகுப்பு ஆகும். கதாம்ருதாவில் இந்தியாவின் பண்பாட்டையும், மேற்கத்திய நாகரிகத்தையும் நன்கு வெளிபடுத்தினார். 1918ஆம் ஆண்டில், "பிரபுத்த கர்நாடகா" என்ற கன்னட மொழி செய்தித்தாளை தொடங்கி அதன் முதன்மை ஆசிரியராக பணியாற்றினார்.