ஆரிசு ஆண்டே (Harish Hande) என்பவர் தொழில் முனைவோர் ஆவார். 1995 இல் இவர் தொடங்கிய செல்கோ என்ற தொழில் நிறுவனம் வாயிலாகச் சூரிய ஒளி மின்சார ஆற்றலைப் புதிய தொழில் நுட்பம் வாயிலாகச் சிற்றூர்ப்புற ஏழை மக்களுக்குப் பயன்படச் செய்தார். இந்தப் பணியைப் பாராட்டி 2011 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு ராமன் மகசேசே விருது வழங்கியது.[1]
கருநாடக மாநிலம், உடுப்பி வட்டம், அண்டாட்டு என்னும் ஊரில் பிறந்த ஆரிசு ஆண்டே ஒரிசா மாநிலம் ருர்கேலாவில் வளர்ந்தார். இஸ்பாத் ஆங்கிலப் பள்ளியில் படித்து கரக்பூர் இந்திய தொழில் நுட்பக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் மாசசூசட்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆற்றல் பொறியியலில் ஆய்வுப்பட்டம் பெற்றார்.
சோலார் மின்சார ஒளி குழுமம் என்ற நிறுவனத்தை (செல்கோ) 1995இல் தொடங்கினார். இந்த செல்கோ நிறுவனம் தொலைவில் உள்ள சிற்றூர்களுக்கும் ஏழைகளின் குடிசைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை மலிவு விலைக்கு விற்றது. அந்தக் காலத்தில் அரசு முயற்சியினால் ஏற்படுத்தப்பட்ட சூரிய ஆற்றல் தெரு விளக்குகள் சரிவரப் பயன் தரவில்லை. எனவே ஆரிசு ஆண்டே கருநாடகாவில் கிராமங்கள்தோறும் சென்று, செல்கோ உருவாக்கிய சூரிய ஒளி விளக்குகள் பற்றியும் அதன் பிற கருவிகளின் பயன்கள் பற்றியும் மக்களிடம் சொல்லிப் பரப்புரை செய்தார். மக்கள் சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்த வங்கிகளை அணுகி குறைந்த வட்டியில் கடன் பெற்றுப் பயன் அடையச் செய்தார். 120000 வீடுகளுக்கும் பிற வணிக நிறுவனங்களுக்கும் செல்கோ உருவாக்கிய மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஒளி மின்சாரம் விளக்குகள் மட்டுமல்லாமல் நீர் இறைக்கும் பம்புகளுக்கும் பயன்படுகிறது. இதனால் வெளிச் சூழல் மாசுபடாமல் உள்ளது.[2]