இராமன் சுகுமார் (Raman Sukumar) என்பார் இந்தியச் சூழலியல் நிபுணர் ஆவார். இவர் ஆசிய யானை மற்றும் வனவிலங்கு-மனித மோதலின் சூழலியல் தொடர்பான பணிகளால் மிகவும் பிரபலமானவர். காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமண்டல வனசூழலியல் குறித்தும் இவர் பணியாற்றுகிறார்.[1] சுகுமார் 1955இல் இந்தியாவில் பிறந்தார். 1986ஆம் ஆண்டில், நீலகிரி உயிர்க்கோள வனச்சரகம் தோற்றுவிக்க உதவினார். இது இந்தியாவில் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டதாகும். 1997ஆம் ஆண்டில், ஆசிய யானை ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையத்தை உள்ளடக்கிய ஒரு பொது தொண்டு அறக்கட்டளையான ஆசிய இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை இவர் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் மூலம் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில் யானைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்துப் பல கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவரது சுற்றுச்சூழல் சேவைக்காக 2006ஆம் ஆண்டில், ஜப்பானின் சர்வதேச காஸ்மோஸ் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவராவார்.[2] 2007ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழுவுக்கு (ஐபிசிசி) பங்களித்ததற்காக இந்தியப் பிரதமரால் பாராட்டப்பட்டார்.
1977ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முதுநிலை படிப்பினை முடித்து, 1985ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1991இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முழு ஆய்வு நிதியுடன் முனைவர் பட்ட பின் ஆய்வினை மேற்கொண்டார். பின்னர் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக (2004–12) இந்திய அறிவியல் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் தலைவராக இருந்தார். இந்த மையத்தில் பேராசிரியராக இந்திய வனபாதுகாப்பில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறார். மேலும் சர்வதேச, தேசிய மற்றும் பிராந்திய அரசாங்கக் குழுக்களில் இந்திய வனவிலங்கு விஞ்ஞானிகளைப் பிரதிநிதியாகக் கலந்துகொள்கிறார்.[சான்று தேவை]