இராம்நாத் (Ram Nath) ( ஆர். நாத், பிறப்பு 9 மார்ச் 1933) முகலாய கட்டிடக்கலையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். இவர், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். இவர் இந்தியாவின் முன்னணி கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
ஆர். நாத் மார்ச் 9, 1933 இல் பிறந்து, ஆக்ராவின் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்த சூழலில் வளர்ந்தார்.[1]
ஆக்ராவில் உள்ள புனித ஜான்ஸ் கல்லூரியில் படித்த இவர், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை பெற்றார். இவரது ஆராய்ச்சி முகலாய -நினைவுச்சின்னங்களான ஆக்ரா கோட்டை பத்தேப்பூர் சிக்ரியில் உள்ள கட்டிடங்கள், தில்லியின் ஜாமா பள்ளிவாசல் ஆகியவற்றை உள்ளடக்கியது.[2]
இவர், ஆக்ரா கல்லூரியிலும் பின்னர் ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்திலும் கற்பித்தார். அங்கு இவர் வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரத் துறையில் வாசகராகவும், மற்றும் இணை பேராசிரியராகவும் இருந்தார். ஹெராஸ் நிறுவனம் (செயின்ட் சேவியர் கல்லூரி, மும்பை ) , ஆர்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற நிறுவனங்களிலும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார். இடைக்கால இந்திய கட்டிடக்கலைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், இந்தியாவின் முன்னணி கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவராகவும், முகலாய கட்டிடக்கலை குறித்த அதிகாரமாகவும் கருதப்பட்டார். [3] [2]
1990 ஆம் ஆண்டில், அயோத்தி பிரச்சினையின் பின்னணியில், அகில இந்திய பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு (AIBMAC), அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்ட இசுலாமிய முகலாய ஆட்சியாளர்கள் அங்கிருந்த இந்து கோவிலை அழிக்கவில்லை என்று வாதிடுவதற்காக இவரது முகலாய கட்டிடக்கலை வரலாற்றை மேற்கோள் காட்டினர். இந்தியன் எக்சுபிரசு செய்தித்தாளின் அறிக்கையிலிருந்து இதைப் பற்றி அறிந்தபோது, ஒரு கோவிலுக்கு மேல் மசூதி கட்டப்பட்டதாக தான் நம்புவதாக இவர் தெளிவுபடுத்தினார்.[4] அயோத்தியின் பாப்ரி மஸ்ஜித்தின் கட்டிடக்கலையும் தளமும் என்ற சிறு புத்தகத்தில் இவர் தனது நிலையை விளக்கி இந்துக்கள் அதிகமாக வருகைதரும் கடைவீதியில் ஒரு ஜாமா மஸ்ஜித் இருந்தாகக் கூறினார்.[5]
2015 ஆம் ஆண்டில், இந்துத்துவம் சார்பாக பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசாங்கத்தை நாட்டில் சகிப்பின்மை சூழலை வளர்த்ததாக 53 கல்வியாளர்கள் குழு விமர்சித்தபோது, அவர்களுடன் உடன்படாத 46 கல்வியாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார். இவரும் இவரது சகாக்களும் கல்வியாளர்களின் முதல் குழுவை " இடதுசாரிகள் " என்று முத்திரை குத்தினர். மேலும் அவர்களின் கடிதம் அறிவார்ந்த தன்மையைக் காட்டிலும் அரசியல்-கருத்தியல் என்று கூறினர்.[6]
2017 ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேச முதல்வரும் பாஜக தலைவருமான யோகி ஆதித்தியநாத் முகலாயர்களால் கட்டப்பட்ட தாஜ் மகால் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறியபோது, நாத் அவரை "இந்திய கலை, கலாச்சாரம் இலக்கியம் ஆகியவற்றிற்கு முகலாய ஆட்சியாளர்களின் பங்களிப்பை புறக்கணித்ததற்காக கண்டித்தார்.[7] தாஜ் மகால் "துரோகிகளால்" கட்டப்பட்டது என்ற பாஜக தலைவர் சங்கீத் சோம் கூறியதையும் நாத் விமர்சித்தார். நினைவுச்சின்னத்தை கட்டியவர் ஷாஜகான் ஓர் இந்திய பேரரசர்.[7] வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு எதிராக இந்தியாவை பாதுகாத்தவர். அரபு மொழியை விட இந்திய மொழிகளான சமசுகிருதம் , இந்துசுத்தானியை அதிகம் ஆதரித்தார். மேலும், இந்தியக் கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் ஓவியர்களை தாராளமாக ஆதரித்தவர். இந்தியப் பொருட்களையும், இந்திய நுட்பங்களையும் பயன்படுத்தி இந்த நினைவுச்சின்னம் இந்திய கைவினைஞர்களால் கட்டப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தை கட்ட ஷாஜகான் இந்து மன்னர் ஜெய் சிங்கிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்தியதாகவும், அதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட 20,000 கைவினைஞர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டதை இவர் நிராகரித்தார்.[8] தாஜ்மஹால் பகுதியில் முதலில் ஒரு சிவன் கோயில் என்று இந்து பேரினவாத கோட்பாட்டை இவர் விமர்சித்தார். இது "முற்றிலும் தவறானது, அபத்தமானது" என்று கூறினார்.[9] முகலாய சகாப்தத்தை "சுரண்டல், காட்டுமிராண்டித்தனம், ஒப்பிடமுடியாத சகிப்புத்தன்மையின் காலம்" என்று இந்து தேசியவாதிகள் கூறுவது முற்றிலும் தவறானது என்று இவர் கூறினார்.[8]
வாஷிங்டன் பலகலைக்கழக நூலகங்களின் கூற்றுப்படி, ஆர். நாத் "65 புத்தகங்கள், 13 கையெழுத்துப் பிரதிகள், 190 ஆராய்ச்சி ஆவணங்கள் , 300 பிரபலமான கட்டுரைகளை" எழுதியுள்ளார்.[2]
{{cite book}}
: Empty citation (help)