இலிம்பாங் மாவட்டம் | |
---|---|
Limbang District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 4°15′0.00″N 115°10′0.01″E / 4.2500000°N 115.1666694°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | இலிம்பாங் பிரிவு |
மாவட்டம் | இலிம்பாங் மாவட்டம் |
நிர்வாக மையம் | இலிம்பாங் நகரம் |
மாவட்ட அலுவலகம் | இலிம்பாங் |
உள்ளாட்சி | லிம்பாங் மாவட்ட மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,978.10 km2 (1,535.95 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 90,990 |
• அடர்த்தி | 23/km2 (59/sq mi) |
இனக்குழுக்கள் | |
• புரூணை மலாய்; கெடாயான் | 30.3% |
• இபான் | 24.7% |
• சீனர்கள் | 21.3% |
• இதர மக்கள் | 23.7% |
மலேசிய அஞ்சல் குறியீடு | 98700 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60-85 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QL |
உரிமை கோரல் | புரூணை |
இணையதளம் | www |
இலிம்பாங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Limbang; ஆங்கிலம்: Limbang District; சீனம்: 林梦县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; இலிம்பாங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[1]
இந்த மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கில் புரூணை நாடு (Brunei Darussalam); தென்கிழக்கில் லாவாசு மாவட்டம் (Lawas District); தெற்கு மற்றும் தென்மேற்கில் மிரி மாவட்டம் (Miri District) ஆகிய நிலப் பகுதிகள் எல்லைகளாக உள்ளன.
புரூணையின் வடக்குப் பகுதியும் மற்றும் கடலோரப் பகுதிகளும் லிம்பாங் மாவட்டத்துடன் மிக நெருக்கமாக இருப்பதால், குடியேற்றச் சாவடிகளின் வழியாக மட்டுமே லிம்பாங் பகுதிகளை அணுக முடியும்.
லிம்பாங் மாவட்டம்; புரூணை சுல்தானகத்தை இரண்டாகப் பிரிக்கின்றது. இந்த லிம்பாங் நிலப்பகுதி, புரூணை சுல்தானகத்தால் ஆளப்பட்ட போது, அதை புரூணையின் "அரிசிக் கிண்ணம்" (Rice Bowl of Brunei) என்று அழைத்தார்கள்.
இலிம்பாங் மாவட்டம்; புரூணை சுல்தானகத்திற்கு சவ்வரிசி மற்றும் அரிசியை வழங்கி வந்த ஒரு பெரிய வேளாண் பகுதியாகும். வெள்ளை ராஜா சார்லஸ் புரூக் (Charles Anthoni Johnson Brooke) என்பவர், 1890-ஆம் ஆண்டில், லிம்பாங்கைக் கைப்பற்றுவதற்கு லிம்பாங் மாவட்டத்தின் நெல் சாகுபடியே முக்கியக் காரணியாக இருந்தது.
சார்லஸ் புரூக் என்பவர் வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில் இரண்டாவது மன்னராக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்; 1868 ஆகஸ்டு 3-ஆம் தேதி தொடங்கி 1917 மே 17-ஆம் தேதி வரையில் 49 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[2]
1853 மற்றும் 1868-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சார்லஸ் புரூக், சரவாக்கின் துவான் மூடா பதவியில் இருந்தவர். 1868-ஆம் ஆண்டில் சரவாக் ராஜா என்கிற பட்டத்தைப் பெற்றார்.
இலுண்டு (Lundu) என்று முன்பு அழைக்கப்பட்ட கூச்சிங் பிரிவின் ஆளுநர் பதவியை (Resident at Lundu) சார்லஸ் புரூக் ஏற்றார். அதன் பின்னர் 1868-ஆம் ஆண்டில், சரவாக் இராச்சியத்தின் மன்னராக நியமிக்கப்பட்டார்.[3]
சரவாக்கின் இரண்டாவது மன்னரான (Rajah of Sarawak) சார்லஸ் புரூக் 1890-இல் புரூணை சுல்தானகத்தில் இருந்து லிம்பாங் நிலப்பகுதியைக் கைப்பற்றி, சரவாக்கின் ஐந்தாவது பிரிவாக (Fifth Division of Sarawak) இணைத்தார். இந்த இணைப்பு புரூணை சுல்தானகத்தால் இன்று வரையிலும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.[4]
இப்போதைய நடைமுறை புரூணை-மலேசியா எல்லை (Brunei–Malaysia Border) எல்லையானது (De Facto Boundary); லிம்பாங் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் புரூணை ஆறு, லிம்பாங் ஆறு மற்றும் கிழக்குப் பகுதியில் பாண்டருவான் ஆறு (Pandaruan River) ஆகிய ஆறுகளின் ஆற்றுப் படுகைகளில் செல்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை ஒப்பந்தங்கள் புரூணை-மலேசியா எல்லையை வரையறுத்துள்ளன.[5]
1890-இல் வெள்ளை ராஜா சார்லஸ் புரூக், லிம்பாங் பகுதியை சரவாக்குடன் இணைத்தக் கட்டத்தில் இருந்து புருணை, அந்தப் பகுதியை உரிமை கோரி வருகிறது. மற்றும் அதன் ஒருங்கிணைந்த பிரதேசத்தின் ஒரு பகுதியாக 1967-ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகவும் உரிமை கோரி வருகிறது.
இலிம்பாங் மாவட்டம், புரூணையை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதால் (Limbang separates Brunei territorially into two parts), அதுவே புரூணை-மலேசியா எல்லைப் பிரச்சினைகளின் (Brunei–Malaysia Border Disputes) முக்கியப் பிரச்சினையாக விளங்குகிறது. 2009-ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதாக புரூணை ஊடகங்கள் தெரிவித்தன.[6]
எவ்வாறாயினும், இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இந்த பிரச்சினை ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று புரூணையின் இரண்டாவது வெளியுறவு அமைச்சர் (Bruneian Second Minister of Foreign Affairs) லிம் சொக் செங் (Lim Jock Seng) மறுத்து உள்ளார்.