இஸ்டீபன் காலோங் நிங்கான் Stephen Kalong Ningkan | |
---|---|
1-ஆவது சரவாக் முதலமைச்சர் | |
பதவியில் 22 சூலை 1963 – 23 செப்டம்பர் 1966 | |
ஆளுநர் |
|
பின்னவர் | தாவி சிலி |
1-ஆவது சரவாக் தேசிய கட்சி | |
பதவியில் 1961–1974 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெத்தோங், சரவாக் இராச்சியம், சரவாக், மலேசியா) | 20 ஆகத்து 1920
இறப்பு | 31 மார்ச்சு 1997 கூச்சிங், சரவாக், மலேசியா | (அகவை 76)
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | சரவாக் தேசிய கட்சி |
துணைவர்(கள்) | எலிசபெத் சாண்டி (இ. 1984) ரோசலின் நிங்கான் |
பிள்ளைகள் | பால் மர்பி நிக் மெரினா சியூ லிங் நைட் புளோரா நைட் டயானா இனோய் வின்ஸ்டன் பெங் வை நைட் மார்கரெட் நிக் ஜெரால்ட் பாலா |
இஸ்டீபன் காலோங் நிங்கான் (ஆங்கிலம்; Stephen Kalong Ningkan; மலாய்: Tan Sri Datuk Amar Stephen Kalong Ningkan) (பிறப்பு: 20 ஆகஸ்டு 1920; – இறப்பு: 31 மார்ச் 1997) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; சரவாக் மாநிலத்தின் மிக முக்கியமான மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.[1]
இவர் 1963 முதல் 1966 வரை மலேசியா, சரவாக் மாநிலத்தின் 1-ஆவது முதலமைச்சர் பதவி வகித்தவர் ஆவார்.
இஸ்டீபன் காலோங் நிங்கான் 20 ஆகஸ்டு 1920 அன்று பெத்தோங் நகரில் பிறந்தார். அந்தக் கட்டத்தில் பெத்தோங் நகர்ப்பகுதி சரவாக்கின் இரண்டாவது பிரிவின் கீழ் (சிமாங்காங் பிரிவு) நிர்வகிக்கப்பட்டது.[2]
இவர் இபான் மற்றும் சீனப் பெற்றோருக்குப் பிறந்தவர். அவரின் சீனப் பெயர் மோக் டெக் பூன் (Mok Teck Boon). இஸ்டீபன் காலோங் நிங்கானின் வளர்ப்புத் தாத்தா மோக் பான் செங். அவர் 1870-இல் சீனாவின் குவாங்டொங் மாநிலத்தின் பொசன் நகர்ப்பகுதியில் பிறந்தார்.[2]
காலோங் நிங்கானுக்கு ஆறு வயதான போது, அவரின் வளர்ப்புத் தாத்தா இஸ்டீபன் காலோங் நிங்கானைச் சீனாவுக்கு அழைத்துச் சென்று; அங்குள்ள கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையைப் பல ஆண்டுகளுக்கு அறியச் செய்தார்.[3]
பின்னர் அவர் சிமங்காங் (Simanggang) பகுதியில் இருந்த செயின்ட் அகஸ்டின் பள்ளியில் மாணவராகச் சேர்ந்தார்.[3] தம் கல்வியை முடித்த பிறகு, 1938 முதல் 1939 வரை ரப்பர் நிதி எழுத்தராகப் பணியாற்றினார். அந்த வேலையைத் துறப்பு செய்துவிட்டு 1940 முதல் 1946 வரை சரவாக் காவலர் படையில் வேலை செய்தார். 1942-ஆம் ஆண்டு போலீஸ் காவலர் பதவியில் அமர்த்தப்பட்டார்.[4]
1944-இல், அவர் ஜெசல்டன் (தற்போது கோத்தா கினபாலு) நகரைத் தளமாகக் கொண்ட ஒரு தலைமறைவு இயக்கமான சேவைகள் உளவுத்துறையில் (Services Reconnaissance Department) சேர்ந்தார். அதன் பின்னர் 1947 முதல் 1950 வரை அவர், சரவாக் பெத்தோங்கில், தன் முன்னாள் பள்ளியில் ஆசிரியராகச் சேவை செய்தார்.
அதன் பின்னர் 1950 முதல் 1961 வரை புரூணை, கோலா பெலெய்ட் (Kuala Belait) பகுதியில் உள்ள செல் நிறுவனத்தின் (Shell Company) மருத்துவமனையில் பணிபுரிந்தார்.[4] அதே காலக்கட்டத்தில் அவர் இலண்டனில் உள்ள செயின்ட் அல்பான்சு கல்லூரி; மற்றும் மெட்ரோபாலிட்டன் கல்லூரி; ஆகிய கல்லுரிகளில் கடிதப் போக்குவரத்து மூலம் சட்டக்கல்வி பயின்றார்.
1958-இல் புரூணை தயாக் சங்கத்தின் (Brunei Dayak Association) தலைவர் ஆனார்.[4][3] இவரின் தாயார், குனி அனாக் கரோங் (Kuni anak Karong) (பிறப்பு 1898), 14 சூன் 1969 அன்று தம் 71-ஆவது வயதில், வயிற்று நோய்கள் காரணமாக இறந்தார்.[3]
1961-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி; பெத்தோங் பிரிவில் வாழ்ந்த இபான் மக்களை ஒன்றிணைத்து சரவாக் தேசிய கட்சியை (SNAP) நிறுவினார்.[4] மலேசியா எனும் கூடமைப்பை அமைப்பதற்கான துங்கு அப்துல் ரகுமானின் முன்மொழிவை அவர் தொடக்கத்தில் ஏற்கவில்லை; என்றாலும், இறுதியில் அவர் மலேசியக் கூட்டமைப்பின் வலுவான ஆதரவாளராக மாறினார்.
அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் சட்டப்படிப்பை முடிக்கவில்லை. அவரின் தாத்தா ஒரு சீனர்; அத்துடன் அவருடன் பல்வேறு இனங்களைச் சேர்ந்த நண்பர்கள் இருந்தார்கள்.
அந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அவரின் கட்சி பல இனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.[3] அக்டோபர் 1962-இல், சரவாக் மக்கள் கட்சியின் (SNAP) பொதுச்செயலாளராக இருந்த போது, கூட்டணிக் கட்சியின் சரவாக் கிளையைத் தொடங்கினார்.
அதில் சரவாக் பெசக்கா கட்சி (PESAKA), சரவாக் பாரிசான் ராக்யாட் ஜாத்தி கட்சி (BARJASA), சரவாக் தேசிய கட்சி (PANAS), சபா சீனர் சங்கம் (SCA) ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன.
1963 சரவாக் மாவட்டங்களின் தேர்தலில் (1963 Sarawak district council elections), சரவாக் கூட்டணியின் கீழ் சரவாக் தேசிய கட்சி பெரும்பான்மை உள்ளூராட்சி மன்றங்களைப் பெற முடிந்தது. இதன் தொடர்ச்சியாக இஸ்டீபன் காலோங் நிங்கான், சரவாக் மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.[2]
இஸ்டீபன் காலோங் நிங்கான், 31 மார்ச் 1997 அன்று தம்முடைய 76-ஆவது வயதில் கூச்சிங்கில் உள்ள நார்மா சிறப்பு மருத்துவ மையத்தில் இறந்தார். அவரின் இறுதிச் சடங்கு செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
கூச்சிங் பத்து கிடாங் ஆங்கிலிகன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். தெராங் புலான் பாடல் வரிகள் அவருடைய கல்லறையின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.[3]