உதயாதித்தன் | |||||
---|---|---|---|---|---|
மால்வாவின் அரசன் | |||||
ஆட்சிக்காலம் | அண். 1070 – அண். 1093 CE[1] | ||||
முன்னையவர் | முதலாம் செயசிம்மன் | ||||
பின்னையவர் | இலட்சுமதேவன் அல்லது நரவர்மன் | ||||
துணைவர் |
| ||||
குழந்தைகளின் பெயர்கள் | |||||
| |||||
அரசமரபு | பரமாரப் பேரரசு | ||||
தந்தை | சிந்துராசன் | ||||
தாய் | இராணி சாவித்திரி | ||||
மதம் | இந்து சமயம் |
உதயாதித்தன் (Udayaditya) (ஆட்சி காலம் 1070-1093கள்) என்பவன் மத்திய இந்தியாவின் மால்வா பகுதியை ஆட்சி செய்துவந்த முதலாம் செயசிம்மனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பரமார ஆட்சியாளராவான். இவனுக்குப்பின் இவனது மகன் இலட்சுமதேவன் அல்லது நரவர்மன் ஆட்சிக்கு வந்தான்.
உதயாதித்தன் பரமார வம்சத்தின் மிகவும் புகழ்பெற்ற அரசரான போஜனின் சகோதனாவான். போஜனின் மரணத்தின் போது, பரமார இராச்சியம் அதன் அண்டை நாடுகளான சோலாங்கிப் பேரரசிடமிருந்தும், கலச்சூரியிடமிருந்தும் ஒரே நேரத்தில் படையெடுப்புகளை சந்தித்தது. போஜனின் வாரிசான செயசிம்மன், (ஒருவேளை அவருடைய மகன்) மேலைச் சாளுக்கிய இளவரசன் ஆறாம் விக்ரமாதித்தனின் ஆதரவுடன் பரமார சிம்மாசனத்தில் ஏறியதாகத் தெரிகிறது. விக்ரமாதித்தனின் எதிரியான சகோதரன் இரண்டாம் சோமேசுவரனால் அவன் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம். செயசிம்மனுக்குப் பிறகு உதயாதித்யன் பரமார சிம்மாசனத்தில் ஏறினான். [2]
உதயாதித்தனின் ஆட்சியின் போது, அப்போது மேலைச் சாளுக்கிய அரியணையை வைத்திருந்த ஆறாம் விக்ரமாதித்தன் - பரமார நாட்டின் மீது படையெடுத்து, கோதாவரி ஆற்றின் தெற்கே உள்ள பகுதியைக் கைப்பற்றினான். சோலங்கிய மன்னன் முதலாம் கர்ணதேவன் படையெடுப்பை உதயாதித்தன் முறியடித்தான். அவன் தனது நிலையை வலுப்படுத்த தனது குகிலா, கலச்சூரி, வகேலா , சோலாங்கி போன்ற அண்டை நாட்டாருடன் திருமண உறவுகளை உருவாக்கினான். [2]
உதயாதித்தன் போஜனின் சகோதரன் என சைனத் கல்வெட்டு மூலம் சான்றளிக்கப்பட்டது. இது உதயாதித்தனை செகதேவரின் தந்தை என்றும் போஜனை செகதேவரின் தந்தைவழி மாமா என்றும் குறிப்பிடுகிறது. [3] இவனுக்கு இலட்சுமதேவன், நரவர்மன், செகதேவன் என்ற மூன்று மகன்களும், சியாமளாதேவி என்ற ஒரு மகளும் இருந்தனர். சியாமளாதேவி மேவார் ராவல், குகிலா இளவரசர் விஜய்சின்ஹாவை மணந்தாள். மேலும் அல்ஹன்தேவியைப் பெற்றெடுத்தார். இவள் கலாச்சூரி மன்னன் கயகர்ணனை மணந்தார்.
இலட்சுமதேவன், நரவர்மன் ஆகிய இருவரின் இராணுவ சாதனைகளையும், மானியங்களையும் பதிவு செய்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரமாரக் கல்வெட்டுகள் நரவர்மன் பற்றியும் இவனது சகோதரர் இலட்சுமதேவன் ஆகிய இருவரின் இராணுவ படையெடுப்பைப் பற்றியும் மானியங்களை பற்றியும் விவரிக்கின்றன. ஆனால் இலட்சுமதேவன் ஒருபோதும் அரியணை ஏறவில்லை. நரவர்மன் உதயாதித்தனுக்குப் பிறகு அரியணை ஏறியதாக தேவாஸ் மானியக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இலட்சுமதேவன் 1082க்கு முன்பே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, பொ.ச.1082 காமத் கல்வெட்டில் நரவர்மன் தனது சகோதரனின் நினைவாக வழங்கிய நில மானியத்தைப் பதிவுசெய்கிறது. [4][2]
உதயாதித்தனுக்கு இலக்கியத்திலும், கலைகளின் மீதும் நாட்டம் இருந்ததாகவும், தனது மகன்களை அறிஞர்களாக வளர்த்ததாகவும் தெரிகிறது. மேலும் இவரது மகன் நரவர்மன் ஒரு கவிஞராக இருந்தான். மேலும் பல்வேறு தெய்வங்களின் மீதான பாடல்களையும், தனது முன்னோர்களின் புகழ்ச்சிகளையும் இயற்றினான். நாக்பூர் பிரசஸ்தி இவனால் இயற்றப்பட்டிருக்கலாம். [5]
உதயாதித்தன் வெளியிட்ட தங்க நாணயங்கள் 4.05 கிராம் எடை கொண்டவை. இந்த நாணயங்களின் முகப்பில் அமர்ந்திருக்கும் இலட்சுமியின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில், தேவநாகரி எழுத்து முறையில், சிறீமத் உதயதேவன் என் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. [6]