எம். சந்திரசேகரன் M. Chandrasekaran | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | திசம்பர் 11, 1937 |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை, |
தொழில்(கள்) | வயலின் |
எம். சந்திரசேகரன் (M. Chandrasekaran) (பி: டிசம்பர் 11, 1937)[1] தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞரும், வாய்ப்பாட்டுக் கலைஞரும் ஆவார்.
இரண்டு வயதில் செங்கண்மாரி (jaundice) நோய் காரணமாக பார்வையை இழந்தார். மாத்ரு தேவோ பவ என்பதே இவரது தாரக மந்திரம். தெய்வத்திற்கு அடுத்தபடியாக தாயார் மீது பக்தி வைத்துள்ளார். அவரது தாயார் சாருபாலா மோகன் இவரை எல்லா விதத்திலும் வழிநடத்தி இன்றைய நிலைக்குக் கொண்டு வந்தார். வயலின், வாய்ப்பாட்டு என்பவற்றுடன் பிரெயில் முறையையும் கற்றுக்கொடுத்தார். சந்திரசேகரன் தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளை படிக்கவும் எழுதவும் கற்றிருக்கிறார்.[2]
மன்னார்குடி சாம்பசிவ பாகவதர், கும்பகோணம் எஸ். விசுவநாத ஐயர் (கும்பகோணம் சகோதரர்களில் ஒருவர்), வித்யால நரசிம்ம நாயுடு, டி. ஜயம்மாள் ஆகியோரிடம் இசை பயின்றார்.[1][2]
இவரது முதலாவது மேடை நிகழ்ச்சி வயலின் பக்கவாத்திய கலைஞராக மே 5, 1949ல் சென்னை மயிலாப்பூர் தியாகராஜ வித்வத் சமாஜத்தில் நடைபெற்றது.
1950ல் மியூசிக் அகாதெமி (சென்னை) நடாத்திய வயலின் போட்டியொன்றில் முதலாவது பரிசு பெற்றார்.
இசை உலகில் புகழ் பெற்ற வித்துவான்களாகிய ஜி. என். பாலசுப்பிரமணியம், மகாராஜபுரம் விசுவநாத ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், டி. ஆர். மகாலிங்கம் (புல்லாங்குழல் கலைஞர்), மதுரை மணி ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், மதுரை எஸ். சோமசுந்தரம் , டி. கே. ரங்காச்சாரி, இராமநாதன் கிருஷ்ணன், மகாராஜபுரம் சந்தானம், முனைவர் எஸ். இராமநாதன், செம்மங்குடி சீனிவாச ஐயர், பாலமுரளி கிருஷ்ணா, கே. வீ. நாராயணசாமி, நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, டி. என். சேசகோபாலன், டி. வி. சங்கரநாராயணன், முனைவர் என். ரமணி, திருச்சூர் வி. இராமச்சந்திரன் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்.
பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கும்போது பிரதான கலைஞரின் செயல்பாட்டை மதிப்பீடு செய்து, அதனை தனக்குள் உள்வாங்கி, பின்னர் தான் தொடர்ந்து வயலின் வாசிக்கும் போது கால்பங்கு நேரத்துக்குள் அதன் சாரத்தை குழைத்து கொடுப்பார்.
அவ்வப்போது வாய்ப்பாட்டு கச்சேரியும் செய்வார். தனி வயலின் கச்சேரி செய்யும் போது இடையிடையே சில கீர்த்தனைகளை வயலின் இசையோடு சேர்ந்து தானும் பாடுவார்.
நாதசுவரத்தில் இராக ஆலாபனம் செய்யும் நுட்பம் இவருக்கு மிகவும் பிடிக்கும். டி. என். ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் ஆகியோரின் நாதசுவர இசையை விரும்பிக் கேட்பார். தனது திருமணத்தின் போது டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசித்ததையும் அப்போது ராஜரத்தினம் பிள்ளை இவரையும் வயலின் வாசிக்கச் சொன்னதையும் இவர் வாசித்த கதனகுதூகல இராக ஆலாபனையை இராஜரத்தினம் பிள்ளை வெகுவாகப் பாராட்டி இவரை ஆசீர்வதித்ததையும் பெருமையுடன் நினைவு கூருகிறார் சந்திரசேகரன்.
மேலும் இரண்டு நிகழ்ச்சிகளை இவர் விரும்பி நினைவில் வைத்திருக்கிறார். முதலாவது வயலின் மேதை துவாரம் வேங்கடசுவாமி நாயுடுவுடன் சேர்ந்து வயலின் வாசித்தது. மற்றது முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்ற எம். டி. இராமநாதனின் இசைக் கச்சேரிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தது.
இந்தியாவின் பல இடங்களிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார்.[2]
சந்திரசேகரன் வெவ்வேறு மொழிகளில் வர்ணங்களும் கிருதிகளும் இயற்றியிருக்கிறார். பாலக்காட்டில் உள்ள இசைக் கல்லூரியின் வருகை பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.[2]
1998ல் சந்திரசேகரன் தனது தாயாரின் நினைவாக சாருபாலா மோகன் ட்ரஸ்ட் (ஆங்கிலம்: Charubala Mohan Trust) என ஒரு நிதியம் தொடங்கி ஒவ்வொரு வருடமும் வாய்ப்பாட்டு, வாத்திய கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருவதோடு இசை அரங்குகளையும் நடாத்தி வருகிறார்.[1]
இவரது மகள் பாரதி ஒரு வாய்ப்பாட்டு, வயலின் மற்றும் நாட்டியக் கலைஞர். மகன் முரளி ஒரு புல்லாங்குழல் கலைஞர்.[1][2]
{{cite web}}
: Unknown parameter |https://web.archive.org/web/20160304101059/http://www.musicacademymadras.in/fotemplate05.php?temp=
ignored (help)