மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர். (பி. ஆகஸ்ட் 9, 1933) மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். ஞானபீட பரிசு பெற்றவர்.[1] திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
எம்.டி.வாசுதேவன் நாயர் கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒற்றப்பாலம் வட்டத்திற்கு உட்பட்ட கூடல்லூர் என்ற ஊரில் 1933 ஆக்ஸ்டில் பிறந்தார். தந்தை பெயர் டி.நாராயணன் நாயர். தாய் அம்மாளு அம்மா.[2]
திரிச்சூரில் உள்ள புன்னையூர்க்குளம் என்ற ஊரில் இளம்பருவத்தை செலவிட்டார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் 1953ல் ரசாயனத்தில் பட்டம்பெற்றார். சிறுவயதிலேயே மாத்ருபூமி வார இதழில் எழுத ஆரம்பித்த எம்.டி.வாசுதேவன் நாயர் கல்லூரி காலத்திலேயே ரத்தம் புரண்ட மாத்ருககள் என்ற சிறுகதை தொகுதியை வெளியிட்டார்.
உலக சிறுகதை வருடத்தை ஒட்டி மாத்ருபூமி நடத்திய போட்டியில் அவரது "வளர்த்துமிருகங்ஙள்" என்ற சிறுகதை பரிசு பெற்றதும் அவர் பிரபலமானார். 1958ல் எம்டி மாத்ருபூமியின் உதவியாசிரியரானார். எம்.டிவாசுதேவன் நாயரின் முதல் நாவல் பாதிராவும் பகல்வெளிச்சமும். இது தொடராக வெளிவந்தது. முதலில் நூலாக வெளிவந்தது ‘நாலுகெட்டு’ அதற்கு கேரள சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது. வாசுதேவன் நாயர் எழுதிய முறப்பெண்ணு என்ற சிறுகதையை 1963ல் அவரே திரைக்கதையாக எழுதினார். அது வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதி மலையாள சினிமா உலகத்தின் போக்கையே மாற்றியமைத்தார். நான்குமுறை சிறந்த திரைக்கதைக்கான ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார்.
1973ல் அவர் தன் முதல் படத்தை இயக்கினார். நிர்மாலியம் என்ற அந்தப்படம் ஜனாதிபதி விருது பெற்றது. நாயர் சிறுகதைக்கும் நாவலுக்கும் திரைக்கதைக்குமான விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். 1970ல் கேந்திர சாகித்ய அக்காதமி விருது பெற்றார். 1995ல் ஞானபீட விருதும் 2005ல் பத்ம விபூஷன் விருதும் கிடைத்தன.
அவருக்கு இருமுறை மணமானது. முதல் மனைவியை விவாகரத்து செய்ய நேர்ந்தது. முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகள் உண்டு. மீண்டும் கலாமண்டலம் சரஸ்வதியம்மா என்ற நடனமணியை மணம் புரிந்தார். இரு பெண்குழந்தைகள் பிறந்தன. வாசுதேவன் நாயரின் சொந்த வாழ்க்கைச் சிக்கல்களை சினிமாக்கள் காட்டுகின்றன. அக்ஷரங்ங்கள் என்ற சினிமா அவரது சொந்த வாழ்க்கையின் சித்திரம் என்று சொல்லப்படுகிறது. அதில் பணக்கார மனைவியால் கைவிடப்பட்டு நடனமணியை மணக்கும் எழுத்தாளனின் வாழ்க்கை உள்ளது.
உணர்ச்சிப்பூர்வமான யதார்த்தவாதத்தை எழுதியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவரது நடை மிக அழகானது. அழிந்துகொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப முறையையும் அங்கே விடுதலைக்காக தவிக்கும் அடுத்த தலைமுறையின் சோகத்தையும் கதையாக்கினார்.
வாசுதேவன் நாயர் எழுதிய பல நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. காலம், இரண்டாமிடம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. அவரது திரைக்கதைகள் நிர்மால்யம், மீரா ஆகியவற்றை கதிரவன் மொழ்பெயர்த்தார்.