கன்னடக் கொடி இரு நிறங்களைக் கொண்டது. சம அளவில் பிரிக்கப்பட்டு மேல் பகுதியில் மஞ்சள் நிறமும், கீழே சிவப்பு நிறமும் கொண்டது. இக்கொடியை கர்நாடகக் கொடி என்றும் அழைக்கின்றனர், மஞ்சள் அமைதியையும் சிவப்பு வீரத்தையும் குறிக்கின்றன. இக்கொடி அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது அல்ல என்றாலும், பரவலாக அறியப்படுகிறது. மஞ்சள் நிறம் மஞ்சளையும் சிவப்பு குங்குமத்தையும் குறிக்கின்றன, [1][2]
1926இல் 60 க்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிதைகளைக் கன்னடத்துக்கு மொழிபெயர்த்ததற்காக நினைவுகூரப்படுபவரான, கன்னட எழுத்தாளர் பி. எம். ஸ்ரீகாந்தையாவின் கன்னடத பாவூடா (கன்னடக் கொடி/ பதாகை, 1938) என்ற கவிதையே கன்னடக் கொடி என்ற கருத்தாக்கத்தைத் தொடங்கிவைத்ததாக கருதப்படுகிறது. [3]
கர்நாடகத்தின் பல்வேறு கன்னட அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக 1966 இல் தொடங்கப்பட்ட கர்நாடக சம்யுக்த ரங்கா (கர்நாடக ஐக்கிய முன்னணி) என்ற அமைப்பின் செயலாளரான ராமமூர்த்தி, செயல்பாட்டாளர்களின் நோக்கங்களை வெளிப்படுத்துவதற்கும் கன்னடம் பேசும் மக்களை ஒன்றுதிரட்ட ஒரு கொடி அவசியம் என்று கருதினார். கன்னட அமைப்புகளுடன் நடந்த சில பேச்சுவார்த்தைகளுக்குப்பின், அவர் செவ்வக வடிவம் கொண்ட, கிடைமட்டவாக்கில் இரண்டாகப் பிரிந்த, மேல்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும் அடிப்பகுதி சிவப்பு நிறத்திலும் அமைந்த கொடியொன்றினை வடிவமைத்தார். பின்பு 1966 இல் ராமமூர்த்தி கன்னட பட்சா என்ற கட்சி துவங்கப்பட்டபோது தான் வடிவமைத்திருந்த இக்கொடியை பயன்படுத்தி்க்கொண்டார். அடுத்த ஆண்டில் விபத்து ஒன்றில் அவர் காலமானதையடுத்து, அவரது கட்சியும் முடிவுக்கு வந்தது. அதிலிருந்து, அவரது கொடி கன்னட ஆர்வலர்களால் தாராளமாகப் பயன்படுத்தப் பட்டுவருகிறது.பின்னாளில் கர்நாடக மாநிலம் உருவான நாளான கர்நாடக ராசோற்சவத்தின்போது இக்கொடி பயன்படுத்தப்படுகிறது. கர்நாடக அரசுக் கட்டிடங்களில் இந்திய அரசின் கொடியின் கீழே பறக்கவிடப்படும். அந்நாளில் கன்னட மொழி நூல்களை வெளியிட்டும், கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கியும் கொண்டாடுவர். [4]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)