இந்தியாவில் காப்புக் காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் (Reserved forests and protected forests of India) இந்தியாவில் மாநில அரசுகளின் வனத்துறையால பாதுகாக்கப்படும் காடுகளை, காப்புக் காடுகள் (Reserved forests) மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் (Protected forests) என்று அழைக்கப்படுகிறது.
தேசிய பூங்காக்கள் அல்லது வனவிலங்கு சரணாலயங்கள் போலல்லாமல், காப்புக் காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் எவை எவை என்பதை அந்தந்த மாநில அரசுகளால் அறிவிக்கப்படுகிறது. காப்புக் காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் ஒரு முக்கியமான வழியில் வேறுபடுகின்றன. குறிப்பிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படாவிட்டாலும் காப்புக் காடுகளில் வேட்டையாடுதல், மேய்ச்சல் போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாக்கப்பட்ட காடுகளின் விளிம்புகளில் வாழும் மலைவாழ் பழங்குடி மக்கள் கால்நடை மேய்ச்சல், காய், கனி, கிழங்கு, மூலிகைச் செடிகள் பறித்தல் போன்ற நடவடிக்கைகளை வனத்துறை அனுமதிக்கிறது. மலைவாழ் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஓரளவு அல்லது முழுவதுமாக வன வளங்களைச் சார்ந்து வாழ்கின்றனர்.
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் 1927-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய வனச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட காடுகள் குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்தச் ச்ட்டத்தால் காடுகளையும், காட்டு விலங்குகளை பாதுகாக்க இயலவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசு 1980-ஆம் ஆண்டில் காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1980 இயற்றியது.[2][3] இதனால் பாதுகாக்கப்பட்ட காடுகள் தனது தகுதியை தக்க வைத்துக் கொண்டதுடன், மற்ற காடுகளுக்கும் பாதுகாப்பை விரிவுபடுத்தியது.