கே.எஸ். கோபாலகிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 1929 மல்லியம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | நவம்பர் 14, 2015 (அகவை 85–86) சென்னை |
மற்ற பெயர்கள் | கே.எஸ்.ஜி., இயக்குனர் திலகம் |
பணி | இயக்குனர், வசனகர்த்தா |
செயற்பாட்டுக் காலம் | 1960கள்-1980கள் |
வாழ்க்கைத் துணை | சுலோச்சனா |
பிள்ளைகள் | கே. எஸ். ஜி. வெங்கடேஷ், அசோக், குமார், ரவி, ராஜ்குமார், துரை |
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (K.S. Gopalakrishnan, 1929 - 14 நவம்பர் 2015),[1] 1950-ஆம் ஆண்டுகளில் திரையுலகில் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பின்னர் 1960-ஆம் ஆண்டுகள் துவங்கி 1980-ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரையிலும் வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
1938 ஆம் ஆண்டில் வெளிவந்த தேசமுன்னேற்றம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார்.[2] பின்னர் சக்ரதாரி (1948), பாரிஜாதம் (1950) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வைத்து பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, ஜெயசித்ரா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் இந்தியில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்தார்.
பின்னாட்களில் கமலஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத்தையும் இயக்கினார். ஆயினும், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் வரவால், கே.எஸ்.ஜி. பாணித்திரைப்படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. படிக்காத பண்ணையார், பேர் சொல்லும் பிள்ளை போன்ற அவர் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றன.