கோதண்டராமன் கோயில் | |
---|---|
![]() வொண்டிமிட்டா, கோதண்டராமன் கோயிலின் காட்சி | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம்: | கடப்பா |
அமைவு: | வொண்டிமிட்டா |
ஏற்றம்: | 151 m (495 அடி) |
ஆள்கூறுகள்: | 14°23′00″N 79°02′00″E / 14.3833°N 79.0333°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர், விஜய நகர அரசர்கள் |
கோதண்டராமன் கோயில் (Kodandarama Temple) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை வட்டத்திலுள்ள வொண்டிமிட்டா என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்துக் கடவுளான இராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோவிலாகும். விஜயநகரக் கட்டிடக்கலை பாணியின் உதாரணமான இந்த கோயில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியிலுள்ள மிகப்பெரிய கோயிலான இது கடப்பாவிலிருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது ராஜம்பேட்டைக்கு அருகில் உள்ளது. கோயிலும் அதன் அருகிலுள்ள கட்டிடங்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.[1]
உள்ளூர் புராணத்தின் படி, இந்த கோயில் நிஷாத (போயா) வம்சத்தைச் சேர்ந்த வொண்டுடு - மிட்டுடு என்ற இருவரால் கட்டப்பட்டது. கொள்ளையர்களாக இருந்த இவர்கள் பின்னர், இராமனின் பகதர்களாக மாறி இக்கோயிலை கட்டியதாக ஒரு கதை கூறப்படுகிறது.[2]
இந்தக் கோயில் 16 ஆம் நூற்றாண்டில் சோழர்களாலும், விஜயநகர மன்னர்களின் காலத்திலும் கட்டப்பட்டது.[3][4]
வொண்டிமிட்டாவில் வாழ்ந்த பம்மேரா பொட்டானா என்பவர் தெலுங்கு மொழியில் "மகா பாகவதம்" என்ற மகத்தான படைப்பை எழுதி இராமனுக்கு அர்ப்பணித்தார். வால்மீகியின் இராமாயணத்தை (இராமனின் கதையை விவரிக்கும் இந்துக் காவியம்) தெலுங்கில் மொழிபெயர்த்தற்காக 'ஆந்திர வால்மீகி' என்று அழைக்கப்படும் வாவிலகோலனு சுப்பா ராவும் இங்கு ராமரை வணங்குவதற்காக தனது காலத்தை செலவிட்டார். அன்னமாச்சாரியார் இக்கோயிலுக்கு வந்து இராமனைப் புகழ்ந்து பாடல்களையோ அல்லது கீர்த்தனைகளையோ இயற்றி பாடியதாகக் கூறப்படுகிறது. 1652ஆம் ஆண்டில் இந்த கோயிலுக்கு வருகை தந்த பிரெஞ்சு பயணி யீன்-பாப்டிஸ்ட் டேவர்னியர், கோவிலின் கட்டிடக்கலையின் நேர்த்தியைப் பாராட்டினார்.[2] பாவனாசி மாலா ஓபன்னா என்ற இராமனின் பக்தர் கோவிலுக்கு முன்னால் இராமனைப் புகழ்ந்து பாடல் அல்லது கீர்த்தனைகளை பாடியுள்ளார். கிழக்கு கோபுரத்தின் முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இவரது உருவம் செதுக்கபட்டுள்ளது.
தற்போது இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் வசமிருக்கும் இந்த கோயிலின் பராமரிப்பை மாநில அரசு ஏற்க முடிவு செய்துள்ளது. இந்த கோயில் ஒரு பண்டைய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5] இராம தீர்த்தம், இலட்சுமண தீர்த்தம் என்ற இரண்டு குளங்களும் கோயிலின் வளாகத்தில் அமைந்துள்ளன.[2]
கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆந்திர அரசு ஒப்படைத்துள்ளது. கோயிலை அதன் நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வாரியம் 29 ஜூலை 2015 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.[6]
தெலங்காணா மாநிலம் ஆந்திராவிலிருந்து 2014 இல் பிரிக்கப்பட்டது. இராமனின் பிறந்த நாளான இராம நவமி, தெலங்காணாவுக்குப் பிரிந்து சென்ற பத்ராச்சலம் கோயிலில் ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாடி வந்தது. தற்போது வொண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில் 2015 ஆம் ஆண்டிலிருந்து உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களின் மாற்று இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[5]