சாகிதுல் ஆலம் ( Shahidul Alam பிறப்பு 1955) ஒரு வங்காளதேசப் புகைப்பட பத்திரிகையாளர், ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். அவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார், மேலும் அவரது புகைப்படங்கள் பரவலாக அறியப்பட்ட மேற்கத்திய ஊடகங்கள் பலவற்றில் வெளியிடப்பட்டுள்ளன".[1]
ஆலம் 1989 இல் டிரிக் பிக்சர் நூலகத்தையும், 1998 ல் டாக்காவில் உள்ள பத்ஷாலா தெற்காசிய ஊடக நிறுவனத்தையும் நிறுவினார், இந்த நிறுவனம் நூற்றுக்கணக்கான புகைப்படக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. மேலும் 1999 ஆம் ஆண்டில் சோபி மேளா சர்வதேச புகைப்பட விழாவினை நடத்தியது . ஆலம் இங்கிலாந்தின் சுந்தர்லேண்ட் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக உள்ளார். அவரது புத்தகங்களில் நேச்சர்ஸ் ப்யூரி (2007) மற்றும் மை ஜர்னி அஸ் எ சாட்சி (2011) ஆகியவை குறிப்பிடத்தகுந்தன ஆகும்.
2014 ஆம் ஆண்டில் அவருக்கு பங்களாதேஷ் குடியரசுத் தலைவரால் ஷில்பகலா படக் மற்றும் 2018 இல் லூசி விருதுகளில் சிறந்த மனித நேயம் கொண்டவருக்கான விருது வழங்கப்பட்டது.
5 ஆகஸ்ட் 2018 அன்று, அல் ஜசீராவுக்கு ஒரு நேர்காணல் கொடுத்தார். அந்த நேர்காணல்முகநூலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சிறிது நேரத்திலேயே இவர் கைது செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற போராட்டித்தினை அடக்கும் விதமாக காவல் அதிகாரிகள் செயல்பட்டதாக அவர் அந்த நேர்காணலில் தெரிவித்தற்காக இவர் கைது செய்யப்பட்டார்.[2] பல சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் செய்தி ஊடகங்களும் அவரை குற்றச்சாட்டு இன்றி விடுவிக்க அழைப்பு விடுத்தன. அவருக்கு 20 நவம்பர் 2018 அன்று பிணை வழங்கப்பட்டது. 2018 இல் டைம் இதழ் தேர்ந்தெடுத்த ஆண்டின் மனிதரில் இவரும் ஒருவர் ஆவார்.
ஆலம் டாக்கா, கிழக்கு பாக்கிஸ்தானில் 1955 ஆம் ஆண்டில் பிறந்தார். தற்போது இந்தப் பகுதில் வங்காளத்தில் உள்ளது.
இவர் அதே நகரத்தின் தன்மோடி குடியிருப்பு பகுதியில் வளர்ந்தார். நடுத்தர வர்க்க பெற்றோருக்கு இவர் மகனாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ள்னர். அவரது தந்தை ஒரு விஞ்ஞானி மற்றும் அவரது தாய், குழந்தை உளவியலாளர். இவர் ஜெனிதா கேடட் கல்லூரியில் கல்வி பயின்றார்.
ஆலம் தனது இளங்கலை கல்வியை லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பயின்றார். லிவர்பூலில் இருந்த காலத்தில், தெற்காசிய பாரம்பரியமான ஒரு ஆடையான தனது லுங்கியில் தெருக்களில் நடப்பதை அவர் ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது கல்லூரி ஆண்டில் அவர் சோசலிச தொழிலாளர் கட்சியுடனான ஈடுபட்டிருந்தார்.[3] உயிர் வேதியியல் மற்றும் மரபியல் துறையில் 1976 ஆம் ஆண்டில் இவர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4][5]
லண்டன் பல்கலைக்கழகத்தின் பெட்ஃபோர்ட் கல்லூரியில் டாக்டர் தத்துவ ஆய்வுப் படிப்பில் கல்வி கற்பதற்காக இவர் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். ஆலம் லண்டனில் இருந்த காலத்தில் புகைப்படத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். பெட்ஃபோர்டில், புகைப்படங்களுக்கான மாற்று அச்சிடும் செயல்முறைகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி வேதியியலாளராகவும் பணியாற்றினார்.[6] 1983 ஆம் ஆண்டில், அவர் எடுத்த புகைப்படத்திற்காக லண்டன் ஆர்ட்ஸ் கவுன்சிலிலிருந்து ஹார்வி ஹாரிஸ் கோப்பையினை வென்றார். இது புகைப்படம் எடுத்தல் துறையில் ஈடுபடுவதில் அவரது நம்பிக்கையை அதிகரித்தது.[3][4] அதே ஆண்டில், கரிம வேதியியலில் முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.