சைனா கெய்டெட்சி (China Keitetsi, பிறப்பு: 1976) என்பவர் உகாண்டாவைச் சேர்ந்த ஒரு செயற்திறனாளரும், குழந்தைப் போராளிகளின் அவல நிலையை வெளிக்கொணரப் பெரிதும் பரப்புரை செய்து வருபவரும் ஆவார்.[1]. குழந்தைப் போராளியாக இருந்த இவரின் நினைவுக் குறிப்புகள் பிரெஞ்சு, இடாய்ச்சு, சப்பானிய, சீன, மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவர் தனது ஒன்பதாவது வயதில் அரசை எதிர்த்துப் போராடிய யோவேரி முசவேனியின் தலைமையிலான என்ஆர்ஏ என்ற தேசிய எதிர்ப்பு இராணுவத்தில் அரச எதிர்ப்புப் படையில் குழந்தைப் போராளியாக சேர்க்கப்பட்டார். அப்போது முதல் 1995 வரை அப்படையில் பணியாற்றியவர் பின்னர் உகண்டாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குத் தப்பியோடினார். அங்கும் உகாண்டாவின் உளவுப் படையினரால் வேட்டையாடப்பட்டவர் 1999 இல் டென்மார்க் நாட்டில் அகதியாகத் தஞ்சம் புகுந்தார். தற்போது உகண்டாவில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் குழந்தைப் போராளிகளுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.