ஜோரவர்சிங் ஜாதவ் | |
---|---|
பிறப்பு | 10 சனவரி 1940 அக்ரு, தன்துக்கா, பிரித்தானிய இந்தியா |
தொழில் | சங்கீதா நாடக சபையின் துணைத்தலைவர், நாட்டுப்புறவியலாளர் |
மொழி | குஜராத்தி |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பத்ம ஸ்ரீ (2019) |
துணைவர் | சஞ்சன்குன்வர் (1963-மே 1968) இறப்பு,ஹேம்குன்வர் மார்ச்சு 1969 |
கையொப்பம் | |
ஜோரவர்சிங் ஜாதவ் (பிறப்பு- 10 ஜனவரி 1940) ஒரு இந்திய நாட்டுப்புறவியலாளர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக்கலைகளின் சார்பாளர் ஆவார். குழந்தைப் பருவத்திலேயே நாட்டுப்புற கலாச்சாரம் சார்ந்த திறமைகளை வெளிப்படுத்தியப்பிறகு அகமதாபாத்திலுள்ள வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான கல்வியைக் கற்றார். நாட்டுப்புற கலைகளின் முன்னேற்றத்திற்காக குஜராத் லோக் கலா என்னும் அமைப்பை நிறுவினார். 2019ம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தற்போது சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.[1]
ஜாதவ் ஜனவரி 10 1940இல் தன்துக்கா அருகில் ஆர்க்கு என்னும் கிராமத்தில் (தற்போதைய அகமதாபாத் மாவட்டம், குஜராத்) காரடியா ராஜபுத்ர ஜாகிர்தார் குடும்பத்தில் பிறந்தவர். தனுபாய் மற்றும் ஹலுபாய் ஆகியோர் இவரது பெற்றோராவர். ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர். இவர் தனது சிற்றன்னை கங்காபாயால் வளர்க்கப்பட்டவர்.[2] ஜாதவ் சிறுவயதில் கிராமப்பகுதியில் வசிக்கும்போது நாட்டுப்புற இலக்கியம் மற்றும் நாட்டுப்புற கலைகள் குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.[2] தனது ஆரம்பக்கல்வியை தோல்க்காவில் உள்ள ஸ்கேத் ஹாசனாலி உயர்நிலைப்பள்ளியில் கற்றார். 1956- 1957இல் குஜராத் வித்யாபித்தியில் மேல்நிலைப் பள்ளிக்கல்வியைக் கற்றார். 1961ம் ஆண்டு அகமதாபாத்தில் இவர் புனித சேவியர் கல்லூரியில் குஜராத்திய மொழி மற்றும் வரலாற்றில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.[2] ஜாதவ் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள காலவி என்னும் மேட்டில் ஹரப்பா நகரத்தின் எஞ்சிய பகுதிகளைக் கண்டுபிடித்தார்.[2] இந்த நிகழ்வு தொல்லியல், வரலாற்றுத் துறைகளில் அவரது அர்வததை அதிகப்படுத்தியது.1963இல் அகமதாபாத்தில் உள்ள போலபாய் ஜேசிங்பாய் கற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பண்டைய இந்திய கலாச்சாரத்தில் தனது முதுகலைப்படிப்பை முடித்தார்.[2]நாட்டுப்புற இலக்கியங்கள், கலைகள் ஆகியவற்றில் இவரது ஆர்வம் இந்த ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றது எனலாம்.[2]
ஜாதவ் தனது முதுகலைப்படிப்பை முடித்த பிறகு, அகமதாபாத்தில் உள்ள சரஸ்பூரில் உள்ள பள்ளியில் குஜராத்திய மொழி ஆசிரியராக பணியிலமர்ந்தார். பின்னர், புனித சேவியர் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1964 இல் குஜராத் மாநில கூட்டுறவுத்துறையில் சக்கார் என்னும் வார இதழில் பதிப்பாசிரியராக பணியாற்றினார். பின்னர், 1994ல் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்று 1998இல் பணி ஓய்வு பெற்றார். ஜாதவ், கிராமசுயராஜ் என்னும் மாத இதழில் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்தார்.[2] மேலும், ஜின்மாங்கினி என்னும் மாத இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] ஜாதவ் நாட்டுப்புற கலைகளைப் பிரபலப்படுத்தியதுடன் தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்களில் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்கப்படுத்தினார். 1978இல் குஜராத் லோக் கலா என்னும் அமைப்பை நாட்டுப்புற கலைகள் மற்றும் குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக நிறுவினார். இந்த அமைப்பு தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு களம் அமைத்து தந்தது.[2][3]
2019 ஆம் ஆண்டு வரை, ஜாதவ் நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற கலைகள் தொடர்பாக 94 படைப்புகளை எழுதி தொகுத்துள்ளார்.[3] 1958 முதல், நாட்டுப்புற இலக்கியம் மற்றும் நாட்டுப்புற கலைகள் பற்றிய அவரது கட்டுரைகள் புத்திபிரகாஷ், நூதன் குஜராத், ரங் தரங், அகந்த் ஆனந்த், சந்தேஷ் மற்றும் குஜராத் சமாச்சார் உட்பட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன.[2]
மரட் கசும்பல் ரங் சேட் (1968), மரதாய் மாதா சேட் (1970), லோக்சாஹித்யானி சதுர்காதாவ் (1974), மற்றும் ராஜ்புத் கதாவ் (1979). பதிகல் லோகத்தாவோ (1973) மற்றும் மனோரஞ்சக் கதைமாலா (1977) ஆகியவை அவரது குழந்தைகளுக்கான கதைத் தொகுப்புகளாகும். ஆப்னா கசாபியோ (1972), லோக்ஜீவன்னா மோதி (1975), குஜராத்னி லோக்சன்ஸ்கிருதி (1976), லோக்சன்ஸ்கிருதினா பசுவோ (1979) மற்றும் பிரச்சின் பரத்னா சாஸ்த்ரசாஸ்த்ரோ (1981) ஆகியவை நாட்டுப்புற இலக்கியம் மற்றும் கலைகள் பற்றிய அவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆகும்.
ஜாதவ் 1978இல் லோக்சங்கரதி சோத் சந்த்ஸன் எனும் அமைப்பால் இவரது லோக்கிவன மோதி எனும் படைப்பிற்காக மேகனி சுவர்ண சந்தரக் எனும் விருது வழங்கப்பட்டது. குஜராத் சாகித்ய அகாதெமி லோக்சன்ஸ்கிருதினா பசுவோ எனும் படைப்பிற்கு பரிசு வழங்கி கௌரவித்தது.[2] 2019ம் ஆண்டில், இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3][4][5]
ஜாதவ் 1963 ஆம் ஆண்டு மே மாதம் வதன்சிங் சாவ்தாவின் மகளான சஜ்ஜன்குன்வரை மணந்தார். 1968 இல் அவரது மனைவி விபத்தில் இறப்பதற்கு முன் அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஜாதவ் பின்னர் 1969 இல் பெத்தாபாய் சோலங்கியின் மகளான ஹேம்குன்வரை மணந்தார்; அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர்.[6]