பல்தேவ் சிங் | |
---|---|
1949இல் அம்பேத்கர் மற்றும் கன்காயிலால் எம். முன்சியுடன் பல்தேவ் சிங் | |
பாதுகாப்பு அமைச்சகம் | |
பதவியில் 1946–1952 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | கைலாசு நேத் கத்சு |
நாடாளுமன்ற உறுப்பினர் - மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1959 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரூப்நகர், பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போது இந்தியா) | சூலை 11, 1902
இறப்பு | 29 சூன் 1961[1] தில்லி | (அகவை 58)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு சிரோமணி அகாலி தளம் சிரோமணி அகாலி தளம் |
முன்னாள் கல்லூரி | கால்சா கல்லூரி |
பல்தேவ் சிங் (Baldev Singh) (1902 சூலை 11 - 1961 சூன் 29 ) இவர் ஓர் இந்திய சீக்கிய அரசியல் தலைவராக இருந்தார். மேலும் இவர் ஓர் இந்திய சுதந்திர இயக்கத் தலைவராகவும், இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார். இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணமான பேச்சுவார்த்தைகளின் செயல்முறைகளிலும், 1947 இல் இந்தியப் பிரிவினையிலும் இவர் பஞ்சாபி சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, பல்தேவ் சிங் முதல் பாதுகாப்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் உலகின் "முதல் சீக்கிய பாதுகாப்பு மந்திரி" ஆனார். மேலும் இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையிலான முதல் காஷ்மீர் போரின் போது இந்த பதவியில் பணியாற்றினார். "சர்தார்" என்ற தலைப்பில் இவர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். இது பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் தலைவர் என்று பொருள்.
பல்தேவ் சிங் 1902 சூலை 11 அன்று பஞ்சாபின் ரூபர் மாவட்டத்தில் தும்னா கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சர் இந்திரா சிங், புகழ்பெற்ற தொழிலதிபர், இவரது தாயார் நிகால் கவுர் சிங் (மன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்) ஆவார். ஆரம்பத்தில் கைனௌரிலும் பின்னர் அமிர்தசரசில் உள்ள கால்சா கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் எஃகு துறையில் தனது தந்தையின் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய இவர் நிறுவனத்தின் இயக்குநர் பதவிவரை உயர்ந்தார். இவர் பஞ்சாபில் ஜல்லன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஹர்தேவ் கவுர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சர்ஜித் சிங் மற்றும் குர்திப் சிங் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
1937இல் இந்திய அரசு சட்டம் 1935 இன் கீழ் பஞ்சாப் மாகாண சட்டமன்றத்தில் நடந்த தேர்தலில் பல்தேவ் சிங் வெற்றி பெற்றார். பாந்திக் கட்சியின் வேட்பாளராக. இவர் சீக்கிய அரசியல் மற்றும் மதத் தலைவராக இருந்தா மாஸ்டர் தாரா சிங் மற்றும் சிரோமணி அகாலிதளத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.
இந்தியர்களுக்கு ஒருவித சுயராஜ்யத்தை வழங்குவதற்காக கிரிப்சு குழு 1942 இல் இந்தியா வந்தபோது, நடந்த பேச்சுவார்த்தையில் சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த பல்தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதில் முக்கிய இந்திய அரசியல் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் முஸ்லீம் லீக் கட்சியும் அடங்கும். ஆனால் எந்தவொரு முன்னேற்றத்தையும் இக்குழு செய்யத் தவறிவிட்டது.
காங்கிரசு கட்சி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தாலும், பல்தேவ் சிங் மற்றும் பிற சீக்கிய தலைவர்கள் அதை ஆதரிக்கவில்லை. பஞ்சாபில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒன்றிய முஸ்லீம் லீக்கின் தலைவரான சர் சிக்கந்தர் அயத் கானுடன் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 1942 கோடையில் சிறுது காலத்திற்கு மாகாண மேம்பாட்டு அமைச்சரானார்.
இந்திய அரசியல் சுதந்திரத்திற்கான திட்டங்களை விவாதிக்க வந்த அமைச்சரவை குழுத் திட்டத்திற்கு சீக்கிய கண்ணோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த பல்தேவ் சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு சிறப்பு பாதுகாப்புடன் இந்தியா ஒரு ஐக்கிய நாடாக இருக்க வேண்டும் என்ற சீக்கிய கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். பிரிவினை தவிர்க்க முடியாததாக மாற வேண்டும் என்றால், பஞ்சாபின் பிளவு சீக்கியர்களுக்கு முஸ்லீம் ஆதிக்கத்திலிருந்து பிராந்திய பாதுகாப்பை வழங்கும் வகையில் நடக்க வேண்டும் என்றும் சிங் வலியுறுத்தினார்.
பல்தேவ் சிங் மற்றும் பிற சீக்கியர்கள் ஆரம்பத்தில் குழுவின் மே 16 திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்த போதிலும், அது சீக்கிய சமூகத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கவில்லை என்ற அடிப்படையில், காங்கிரசு தலைவர்கள் ஜவகர்லால் நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோருடன் சீக்கிய உறுப்பினராக பல்தேவ் சிங் புதிய ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார். . பின்னர் சிங் பாதுகாப்பு உறுப்பினரானார். இந்த பதவியை இந்திய ராணுவத் தலைவராக பிரிட்டிசு இராணுவத் தளபதி வைத்திருந்தார். இருப்பினும், 1947 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், காங்கிரசு கட்சிக்கும் முஸ்லீம் லீக்கிற்கும் இடையிலான மோதல் காரணமாக இடைக்கால அரசாங்கம் செயல்படாது என்பது தெளிவாகத் தெரிந்தது.
1947 ஆகத்து 15, அன்று, இந்தியா ஒரு சுதந்திர தேசமானவுடன், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் கீழ் பல்தேவ் சிங் இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சராக ஆனார். சிங் இந்திய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் இருந்தார்.
புதிதாக உருவாக்கப்பட்ட பாக்கித்தானை விட்டு வெளியேறிய 10 மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் அடைக்கலம் வழங்குவதற்கான இந்திய இராணுவத்தின் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதற்கு உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலுடன் சேர்ந்து சிங் பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு மந்திரி சிங் காஷ்மீரில் போருக்கான ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். சில இராணுவ அதிகாரிகள் பழங்குடியினருடன் இணந்துகொண்டு காஷ்மீரை பாக்கித்தானுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில், இந்திய இராணுவம் போராளிகள் மற்றும் பாக்கித்தான் இராணுவத்துடன் உலகின் மிக உயரமான இடத்தில் போரிட்டது. சிறிநகர் மற்றும் பாரமுல்லா கணவாய்க்கு அப்பால் அவர்களை பின்னுக்குத் தள்ளுவதில் இராணுவம் வெற்றி பெற்றது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் போர்நிறுத்தத்தை நேரு அறிவித்தார். இப்பகுதியில் கணிசமான பகுதி இப்போது பாக்கித்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சினை பிறந்தது.
1948 செப்டம்பரில், உள்துறை மந்திரி வல்லபாய் படேலின் அறிவுறுத்தலின் பேரில், பல்தேவ் சிங் மற்றும் இவரது தளபதிகள் போலோ நடவடிக்கைக்கான திட்டங்களைத் தயாரித்தனர். இது ஒரு வார கால நடவடிக்கையாகும். இது ஐதராபாத் சுதேச மாநிலத்தை இந்திய ஒன்றியத்தில் இணைத்தது. காஷ்மீர் மோதலை நிர்வகிப்பது மற்றும் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு பிரச்சினைகள் குறித்து சிங் படேலுக்கு நெருங்கிய ஆலோசகராக இருந்தார்.
பின்னர், "பல்தேவ் சிங்கின் அரசியல் ஒருமைப்பாடு குறித்த நேரு நம்பிக்கையை இழந்ததால்." பல்தேவ் சிங் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[2]
1952ஆம் ஆண்டில், இந்தியாவின் புதிய அரசியலமைப்பின் கீழ் நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக பல்தேவ் சிங் இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், இவர் நேரு நிர்வாகத்தில் சேரவில்லை. சீக்கியர்களின் முக்கிய அரசியல் பிரதிநிதியாக சிங் இருந்தார். அகாலிதளத்தால் மதிக்கப்பட்டார். இவர் 1957இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீண்டகால நோயால் அவதிப்பட்ட சிங் 1961இல் தில்லியில் இறந்தார். இவருக்கு சர்ஜித் சிங் மற்றும் குர்திப் சிங் என்ற இரு மகன்கள் இருந்தனர். சர்ஜித் சிங், பிரகாஷ் சிங் பாதல் அரசாங்கத்தில் கூட்டுறவு அமைச்சராக இருந்தார்.