பிறை | |
---|---|
Perai | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°22′40.263″N 100°23′56.9898″E / 5.37785083°N 100.399163833°E | |
நாடு | மலேசியா மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாநகர் | செபராங் பிறை |
மாவட்டம் | மத்திய செபராங் பிறை மாவட்டம் |
உருவாக்கம் | 1800 |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
• தலைவர் செபராங் பிறை | ரொசாலி முகமது |
• பிறை சட்டமன்ற உறுப்பினர் | ஜனநாயக செயல் கட்சி பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி |
• பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் | கஸ்தூரி பட்டு (ஜனநாயக செயல் கட்சி) |
ஏற்றம் | 4 m (13.1 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 14,433 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 136xx to 137xx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6043 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | www |
பிறை (ஆங்கிலம்: Perai; மலாய் Bandar Prai; சீனம்: 北賴}; ஜாவி: ڤراي) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில், அமைந்துள்ள ஒரு பெருநகர்ப் பகுதியாகும். துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு தொழில்துறை நகரமாகவும் விளங்கி வருகிறது.
18-ஆம் நூற்றாண்டில் பிறை ஆற்றங்கரையில் ஒரு சிறு குடியிருப்புப் பகுதியாக அமைந்து இருந்த இந்தப் பகுதி, பெருநகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. இந்தப் பிறை நகரம் தான் அதன் பெயரை செபராங் பிறை நகர்ப் பகுதிக்கும் வழங்கியது.
இன்றைய நிலையில், பிறை நகரம் ஒரு பெரிய தொழில்துறைப் பேட்டையின் தாயகமாக விளங்குகிறது. அதை ஒட்டிய மாநகரமான செபராங் ஜெயாவும் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.[1] பிறை நகரம் பினாங்கு பாலம் வழியாக பினாங்கு தீவுடன் இணைக்கப்பட்டு உள்ளது.[2]
பிறை ஆற்றின் முகத்துவாரத்தில் பிறை நகரம் அமைந்துள்ளது. பிறை அதன் பெயரை பிறை ஆற்று நீர்வழிப் பாதையில் இருந்து பெற்றது. 1800-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பிறை நிலப் பகுதியை கையகப்படுத்தியது.
1798-ஆம் ஆண்டில் வெல்லஸ்லி மாநிலத்தை (Province Wellesley) (இப்போதைய செபராங் பிறை) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் (British East India Company) ஒப்படைக்கும் போது ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
அப்போது, பிறை ஆறு தான், தெற்கில் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த வெல்லஸ்லி மாநிலத்தையும் வடக்கே இருந்த கெடா மாநிலத்தையும் பிரிக்கும் ஓர் எல்லையாக இருந்தது.[3]
இந்த பிறை நகரம் (தாய்: ปลาย; தமிழ்: "பிளை") என அறியப்பட்டது. தாய்லாந்து மொழியில் “பிளை” என்றால் ”முடிவு” என்று பொருள். பிறை என்பது ஒரு தாய்லாந்து மொழிச் சொல். முன்பு காலத்தில் சயாமியர்கள், இந்த ஆற்றுக்கு பிளை (Plai) என்று பெயர் வைத்தார்கள். பின்னர் வந்த ஆங்கிலேயர்களும் "பிறை" (Prye) எனும் சொல்லையே தொடர்ந்து பயன்படுத்தினார்கள்.[3]
இப்போது பிறை நகரம் அமைந்து இருக்கும் பகுதி, 1821-ஆம் ஆண்டில், தாய்லாந்து நாட்டின் சயாமிய இராச்சியத்தின் ((Rattanakosin Kingdom) கட்டுப்பாட்டில் இருந்தது. அதாவது கெடா சுல்தானகம் அயூத்தியா காலத்தில் சயாமின் துணை மாநிலமாக இருந்தது.[4][5] சயாமியரின் ஆளுமை பிறை ஆறு வரை இருந்தது. பிறை ஆறுதான் சயாமிய எல்லையை வரையறுத்தது.[6][7][8]
இப்போதைய காலத்தில் பிறை என்று அழைக்கப்படும் பகுதி, 1800-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்தியநிறுவனத்தால் (British East India Company) கெடா சுல்தானக்கத்திடம் இருந்து பெறப்பட்ட நிலப்பகுதியாகும்.[6][7][8]
புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட அந்தப் பிரித்தானிய நிலப் பகுதிக்கும்; வடக்கே கெடா மாநிலத்திற்கும் இடையே பிறை ஆறு எல்லையாகச் செயல்பட்டது; இன்றும் செயல்படுகிறது.
1890--ஆம் ஆண்டுகளில் பிறை நிலப்பகுதிக்கும் பேராக் மாநிலத்திற்கும் இடையே ஒரு புதிய இரயில் பாதை அமைக்கப்பட்டது. அதுவே பிறை நகரத்தை ஈயம் ஏற்றுமதி செய்வதற்கான ஒரு முக்கியப் போக்குவரத்து இடமாகவும் மாற்றி அமைத்தது.[9][10] 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறை பெரிய அளவில் தொழில்மய வளாகமாக மாறியது.[1][11]
தொடக்கக் காலத்தில், விவசாயம் தான் பிறையின் பொருளாதாரத்திற்குப் பிரதானமாக விளங்கியது. பின்னர் கரும்புத் தோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறைப் பட்டினம் ஒரு துறைமுகமாக உருவாக்கம் பெற்றது.[9] பேராக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட ஈயம், பிறை துறைமுகத்தில் இருந்து கப்பல்களில் ஏற்றப்பட்டு ஜார்ஜ் டவுன்க்கு அனுப்பப்பட்டது.[10]
1970-ஆம் ஆண்டில், பினாங்கு வளர்ச்சிக் கழகத்தால் (Penang Development Corporation - PDC) பிறை தொழிற்பேட்டை (Perai Industrial Estate) உருவாக்கப்பட்டது. அதில் இருந்து பிறை நகரமும் வளர்ச்சி பெறத் தொடங்கியது.
பினாங்கு துணை முதலமைச்சரான பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி ஜனநாயக செயல் கட்சியின் பிறை நகர சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிறை நகரம் பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. இதன் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு உள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் பாலமான பினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை நகரையும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரையும் இணைக்கின்றது. இந்தப் பாலம் அதிகாரப் பூர்வமாக செப்டம்பர் 14, 1985-இல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
1985-ஆம் ஆன்டுகளுக்கு முன்னர், பட்டர்வொர்த் மற்றும் ஜோர்ஜ் டவுன் மாநகர் இடையே நீர்வழிப் போக்குவரத்து அரசுக்கு சொந்தமான பினாங்கு படகு சேவையை மட்டும் சார்ந்து இருந்தது. பின் அதனைச் சீரமைக்கப் பினாங்கு பாலத்தை அமைக்க மலேசிய மத்திய அரசு பரிந்துரை செய்தது.
1985 ஆகஸ்டு 3-ஆம் தேதி, மலேசியாவின் 4-ஆவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது பினாங்கு பாலத்தை அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.
கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[12]
இனக்குழுக்கள் | ||
---|---|---|
இனம் | விழுக்காடு | |
மலாய்க்காரர்கள் | 28.07% | |
சீனர்கள் | 36.38% | |
இந்தியர்கள் | 27.31% | |
இதர பூமிபுத்ராக்கள் | 0.17% | |
மலேசிய அல்லாதவர் | 7.52% | |
மற்றவர்கள் | 0.55% | |
மொத்தம் | 100% |