பசவங்குடி குண்டப்பா லட்சுமிநாராயண சுவாமி (ஆங்கிலம்: Basavangudi Gundappa Lakshminarayana Swamy ) (1918-1980, பி. ஜி. எல். சுவாமி என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய தாவரவியலாளரும், கன்னட எழுத்தாளரும் ஆவார். அவர் பேராசிரியராகவும், தாவரவியல் துறையின் தலைவராகவும், சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார். இவர் இந்திய எழுத்தாளரும் தத்துவஞானியுமான டி.வி.குண்டப்பா என்பாரது மகனாவார்.
சுவாமி டி.வி.குண்டப்பா மற்றும் பாகீரதியம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பெங்களூரு மத்திய கல்லூரியில் படித்த இவர் தாவரவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், இவர் தனது தந்தையின் ஆலோசனையின் பேரில், ஒரு நுண்ணோக்கி மற்றும் நுண்ணோக்கிச் சோதனைக்காகத் திசுக்களை வெட்டும் கருவி மற்றும் சில அடிப்படை ஆய்வக கருவிகளைக் கொண்டு வீட்டிலுள்ள ஆர்கிட் மலரின் கருவியலைப் படிக்கத் தொடங்கினார். இவர் 1947 இல் மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்றார். இர்விங் விட்மார் பெய்லியின் மேற்பார்வையின் கீழ் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1]
1953 முதல் , சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகவும், பின்னர் முதன்மைப் பேராசியராகவும் பணியாற்றினார். [1]
சுவாமியின் முதன்மை ஆராய்ச்சி பகுதி தாவர உடற்கூறியல் என்பதாகும். குறிப்பாக தாவரங்களின் வேர்கள் மற்றும் தண்டுக்கு இடையிலான தொடர்புகளின் அமைப்பு பற்ற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவர் அஸ்கரினா மகேஸ்வரி மற்றும் சர்காண்ட்ரா இர்விங்பைலி போன்ற ஒரு சில தாவர இனங்களை கண்டுபிடித்தார். அதற்கு இவரது இரண்டு ஆசிரியர்களின் பெயரிடப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டில், தாவரவியல் துறையில் பணியாற்றியதற்காக இவருக்கு இந்திய அரசு பீர்பால் சகானி தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. [2]
சுவாமியின் இலக்கியப் படைப்புகள் பரந்த அளவிலான தலைப்புகளை உள்ளடக்கியது. அவற்றில் பல தாவரவியலுடன் தொடர்புடையவை மற்றும் தாவரவியல் கருத்துக்களை லேபர்சனுக்கு அறிமுகப்படுத்துகின்றன. இவரது புத்தகங்களில் சில அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் தாவரங்களை விஞ்ஞான முறையில் உள்ளடக்குகின்றன. எ.கா- நம்ம ஹொத்தேயல்லி தச்சிண அமெரிக்கா ("தென் அமெரிக்கா நம்முடைய வயிற்றில்").
சுவாமியின் பிற படைப்புகள் இலக்கியம் தொடர்பானவை. அவற்றில் சில ஓரளவு சுயசரிதை, பேராசிரியர் மற்றும் முதல்வராக இவரது அனுபவங்களைக் கையாளுகின்றன. பாராட்டப்பட்ட தாவரவியலாளர் என்பதைத் தவிர, பி. ஜி. எல் சுவாமி வரலாறு மற்றும் இலக்கிய வட்டாரங்களில் பரவலாக மதிக்கப்பட்டார்.
கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளின் வரலாறுகள் மற்றும் இலக்கியங்களை விரிவாக ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்தார். இவரது புத்தகம் தமிழ் தலேகல நாடுவே ("தமிழ் தலைவர்களுக்கிடையில்") மொழியின் தோற்றம் தொடர்பான கோட்பாடுகளை ஆராய்வதற்கும் (அந்த நாட்களில் திராவிடக் கட்சிகளால் கூறப்பட்ட கூற்றுக்களை ஆராய்வதற்கும்) பெரும்பாலும் அவற்றை நீக்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் தமிழ் மொழியியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களான ஐராவதம் மகாதேவன் மற்றும் நீலகண்ட சாத்திரி முன்வைத்த சில கோட்பாடுகளை இவர் வெளியிட்டார். அவற்றின் கோட்பாடுகளில் உள்ள இடைவெளிகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து இவர் கேள்விகளை எழுப்பினார்.
இவரது புத்தகமான கசிரு கொன்னு [3] ("பச்சைத் தங்கம்") என்பது இவருக்கு 1978 ஆம் ஆண்டில் இந்திய அரசு வழங்கிய சாகித்ய அகாதமி விருதை பெற்றுத் தந்தது. [4] அதனுடன், இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் தந்தை மற்றும் மகன் என்ற இரட்டையர்கள் ஆனார்கள்.( குண்டப்பா மற்றும் சுவாமி.) [5] [6]