மஞ்சுளா குருராஜ் | |
---|---|
இயற்பெயர் | மஞ்சுளா |
பிறப்பு | சூன் 10, 1959 மைசூர், கருநாடகம், இந்தியா |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர், இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1983–தற்போது வரை |
இணையதளம் | www |
மஞ்சுளா குருராஜ் (Manjula Gururaj) ஒரு இந்திய பெண் பின்னணிப் பாடகியும், கன்னடத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணியாற்றும் குரல் கலைஞரும் ஆவார். வெற்றிகரமான ஒலிப்பதிவுகளுக்காக பல ஆயிரக்கணக்கான பாடல்களும் பல நூற்றுக்கணக்கான கன்னட மெல்லிசை பாடல்களும் இவர் பாடியுள்ளார். திரைப்படப் பாடல்களில் இவர் செய்த பங்களிப்புக்காக கர்நாடக மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றார். 1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும் மிக முக்கியமான பின்னணிப் பாடகர்களில் ஒருவராகவும் இவர் கருதப்பட்டார்.
இவர் "சாதனா இசைப்பள்ளி" என்ற பெயரில் ஒரு இசைப் பள்ளியை நடத்தி வருகிறார். இது பல இளைஞர்களுக்கு இசைத்துறையில் பயிற்சி அளிக்கிறது [1][2]
இவர், ஜி. சீதாலட்சுமி மற்றும் டாக்டர் எம். என். இராமண்ணா ஆகியோருக்கு 1959 சூன் 10 அன்று மைசூரில் பிறந்தார். இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பயின்றுள்ளார். பின்னர், பாரம்பரிய கருநாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
1983 நவம்பரில் வெளியான ரவுடி ராஜா என்ற படத்தில் இடம்பெற்ற " ஒலக சேரிதாரே குண்டு" என்ற பாடல் மூலம் கன்னட திரையுலகில் பின்னணிப் பாடகியாக நுழைந்தார். நடிகை மாலாஸ்ரீயின் பெரும்பாலான திரைப்படங்களில் இவர் பின்னணி குரல் கொடுத்தார். இவர், ஏழு மொழிகளில் 2,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், பக்தி, நாட்டுப்புற, பாரம்பரிய பாடல்கள் உட்பட 12,500க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். சுதாராணி, ராதிகா சரத்குமார், கீதா, ஷில்பா, குஷ்பூ, பூனம் தில்லான், மாதவி, பிரேமா, நிரோஷா, தாரா, சீதா, வினயா பிரசாத், அனு பிரபாகர் உள்ளிட்ட பல கதாநாயகிகளுக்காக இவர் பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார்.
எஸ். பி. பாலசுப்பிரமணியம், ராஜ்குமார், ராஜேஷ் கிருஷ்ணன், கே. ஜே. யேசுதாஸ், மனோ, உதித் நாராயண் போன்ற பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடல்களை பதிவு செய்துள்ளார்.
த. சீ. நாகாபரணா இயக்கிய ‘அஹூதி’ படத்திற்காக 1982ஆம் ஆண்டில் பின்னணிக் குரல் அளிக்கத் தொடங்கினார். அப்போதிருந்து பின்னணிக் குரல் அளிப்பதில் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தினார். பெலதிங்கலா பாலே படத்திற்கான சிறந்த குரலாக கர்நாடக மாநில அரசின் சிறப்பு நடுவர் விருது வழங்கப்பட்டது.
1983 முதல் 1998 வரை 14 ஆண்டுகள் பெங்களூர் தூர்தர்ஷனுக்கும், 1981-1983 முதல் அனைத்திந்திய வானொலிக்கும் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், "சாதனா இசைப் பள்ளி" யை 1991 சூன் 21 அன்று பெங்களூரில் உள்ள பசவனகுடியில் தொடங்கினார். பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டில் குருராஜ் என்பவரை மணந்த இவருக்கு சங்கீதா மற்றும் சாகர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.