மார்கசு பர்ட்லி | |
---|---|
பிறப்பு | 22 ஏப்ரல் 1917 |
இறப்பு | 14 மார்ச்சு 1993 | (அகவை 75–76)
பணி | ஒளிப்பதிவாளர் |
மார்கசு பர்ட்லி (Marcus Bartley) (22 ஏப்ரல் 1917 – 14 மார்ச் 1993) [1] ஆங்கிலோ-இந்தியரான இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் ஒரு சில பாலிவுட், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களுடன் தெலுங்குத் திரைப்படங்களிலும் முக்கியமாகப் பணியாற்றினார். சௌகாரு (1950), பாதாள பைரவி (1951), மிஸ்ஸம்மா (1955), மாயா பஜார் (1957), குண்டம்மா கதா (1962), செம்மீன் (1965), ராம் அவுர் சியாம் (1967) போன்ற சிறந்தத் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். 1970 இல் சாந்தி நிலையம் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான கான் திரைப்பட விழாவில் தங்கப் பதக்கத்தைப் பெற்று விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.[2]
மார்கசு பர்ட்லி ஏற்காட்டில் புகழ்பெற்ற மருத்துவர்களைக் கொண்ட ஆங்கிலோ-இந்திய குடும்பத்தில் பிறந்தார்.[2] பள்ளியில் படிக்கும்போதே, பர்ட்லி ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருந்தார்.
1940 ஆம் ஆண்டில், பர்ட்லி மும்பைக்குச் சென்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக சேர்ந்தார். பின்னர் பிரித்தானிய மூவிடோனின் செய்திப் பிரிவின் புகைப்பட நிபுணரானார். பர்ட்லி புகைப்படம் எடுப்பதில் முறையான பயிற்சி பெறவில்லையென்றாலும் இவர் கடினமாக உழைத்து, தனது பணியை தானேக் கற்றுக்கொண்டார்.[2]
பின்னர், சென்னை வந்த பர்ட்லி பிரகதி ஸ்டுடியோவில் சேர்ந்தார். 1945 இல் வெளிவந்த சுவர்க சீமா இவரது முதல் படமாகும். கறுப்பு மற்றும் வெள்ளை புகைப்படம் எடுப்பதில் இவரது மேதைமையை இந்தப் படம் காட்டியது. இத்திரைப்படம் இவருக்கும் பி. என். ரெட்டி, கதிரி வெங்கட ரெட்டி மற்றும் பொம்மிரெட்டி நாகிரெட்டி ஆகியோருக்கு இடையேயான நட்பை வலுப்படுத்தியது. தொடர்ந்து, நேஷனல் ஸ்டுடியோஸ், நியூடோன் ஸ்டுடியோஸ் மற்றும் வாகினி ஸ்டுடியோஸ் போன்ற பல நிறுவனங்களில் பர்ட்லி பணியாற்றினார்.
யோகி வேமனா (1947), குணசுந்தரி கதா (1949), சௌகாரு (1950), பாதாள பைரவி (1951), பெல்லி சேசி சூடு (1952), சந்திரஹாரம் (1954), மிஸ்ஸம்மா (1955), மாயா பஜார் (1957), அப்பு சேசி பப்பு கூடு (1958), குண்டம்மா கதா (1962), ஸ்ரீ ராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப் (1976) போன்ற திரைப்படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பெரும்பாலானத் திரைப்படங்களில் நிலவொளியின் கீழ் ஒளிப்பதிவை மேற்கொண்டது இவரது சிறப்பாகும்.[3]
செம்மீன் (1965) என்ற மலையாளப் படத்திற்காக இராமு கரியத் இவரை ஒப்பந்தம் செய்தார். இத்திரைப்படம் 1965 ஆம் ஆண்டு வெளியாகி உலகளாவிய விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இத்திரைப்படத்தில் பர்ட்லியின் ஒளிப்பதிவு மிகவும் பாராட்டப்பட்டது. படத்தின் சில பகுதிகளை வேறொரு ஒளிப்பதிவாளர் முடிக்க வேண்டியிருந்ததால், பர்ட்லி அந்த ஆண்டு தேசிய விருதைப் பெறவில்லை.[2]
தெலுங்கையும் தமிழையும் பேசிய இவருக்கு இந்தி தெரியாது.[2] பர்ட்லி நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மருத்துவரிடம் செல்ல மறுத்து தானே சிகிச்சை செய்து கொண்டார். ஜெர்மனியைச் சேர்ந்த திரைப்பட உபகரணங்களைத் தயாரிக்கும் , அர்ரிபிளக்சு என்ற நிறுவனம் இவரை தங்களின்ள் அங்கீகரிக்கப்பட்ட சேவை நபராக அறிவித்தனர். பர்ட்லி ஒளிப்பதிவு கருவிகளை பழுதுபார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவார். உடல்நிலைப் பாதிக்கப்பட்ட நாகி ரெட்டியால் இவர் விஜயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.[2]