அகத்தியமலை உயிரிக்கோளம் | |
---|---|
அமைவிடம் | கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கன்னியாகுமரி, திருநெல்வேலி |
அருகாமை நகரம் | திருவனந்தபுரம் |
ஆள்கூறுகள் | 8°52′30″N 77°11′17″E / 8.8749°N 77.188°E |
பரப்பளவு | 3,500.36 km2 (1,351.50 sq mi) |
நிறுவப்பட்டது | 2001 |
நிருவாக அமைப்பு | Ministry of Environment & Forests கேரள வனத்துறை |
அகத்தியமலை உயிரிக்கோளம்அல்லது அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் (ஆங்கிலம்:ABR = Agasthyamala Biosphere Reserve) 2001 ஆண்டு, 3,500.36 km2 (1,351.50 sq mi) பரப்பளவு கொண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இது யுனெஸ்கோவின் மனிதனும், உயிரிக்கோளமும் திட்டம் என்பதில் அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது. [1] மேலும் இது உலகப் பாரம்பரியக் களம் என்பதிலும் அறிவிக்கப்பட, முன்மொழியப்பட்டுள்ளது. [2] இப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அகத்தியமலை அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் உறுப்பினர்கள் கூட்டம், பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி, 2016 ஆண்டு நடைபெற்றது. இதில் உலக உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் புதிதாக 20 இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் பரந்து விரிந்துள்ள அகத்திய மலையும் இடம்பெற்றது. அகத்திய மலை உலக உயிர்க்கோள் காப்பகமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள நீலகிரி, மன்னார் வளைகுடா, சுந்தரவன காடுகள், நிகோபார் உள்ளிட்டவை யுனெஸ்கோவின் உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் ஏற்கெனவே இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதி புவியியல் வரைபட அடிப்படையில், 8° 8' முதல் 9° 10' அளவுள்ள வட நிலகுறுக்கோட்டிற்கும், 76° 52' முதல் 77° 34' அளவுள்ள கிழக்கு நிலநெடுங்கோட்டிற்கும் இடையே அமைந்துள்ளது. இதன் நடுஇருப்பிடமானது 8°39′N 77°13′E / 8.650°N 77.217°E ஆகும். அரசியல் வரைபட அடிப்படையில், இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்குப்பகுதியில், தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு இந்திய மாநிலங்களின் எல்லைகளுக்குள் அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்லைகளையும், கேரளத்தில் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மாவட்ட எல்லைகளையும் கொண்டதாகப் பரவி அமைந்துள்ளது.
அகத்திய மலையில், 1,600 மீட்டர் முதல் 5,200 மீட்டர் உயரம் கொண்ட 26 சிகரங்கள் உள்ளன, தாமிரபரணி ஆறு, கரமனை ஆறு மற்றும் நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இங்கு உலகின் மிகத் தொன்மையான ’கண்ணிக்காரன்’ என்ற பழங்குடியினத்தவர்கள் 3,000 பேர் வாழ்ந்து வருகின்றனர், மேலும், 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களும், பல அரிதான காட்டு விலங்குகளின் வாழ்விடமாகவும் அகத்திய மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
முட்புதர்க்காடு, ஈர இலையுதிர்க்காடு, பகுதி பசுமைமாறா காடுகளை உள்ளடக்கிய காப்பகத்தில் பல்லுயிர் வளம்மிகுந்து காணப்படுகிறது. அகத்திய கூடத்தை சுற்றியுள்ள இக்காப்பகத்தில் 35க்கும் மேற்பட்ட அழியும் தருவாயில் உள்ள தாவரங்கள் காணப்படுகின்றன. இதுவரை 2000 தாவர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடத்திற்கே உரித்தான 100 வகைகளும், அரியனவான 50 வகைகளுடன் 30 புதிய தாவர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆடு திண்ணாபாலை, முடக்கற்றான், செங்காந்தள், பாம்புகளா போன்ற மூலிகைகள் காணப்படுகின்றன.
புலி, சிங்கவால் குரங்கு, மலைமொங்கான் மற்றும் தேவாங்கு போன்ற விலங்குகள் இக்காப்பகத்தில் காணப்படுகின்றன.
இப்பகுதியில் நெய்யார் உயிரினவளச் சரணாலயம்[3], பெப்பாறை உயிரினவளச் சரணாலயம்[4],செந்தூர்னா உயிரினவளச் சரணாலயம்[5] அச்சன்கோயில் சுற்றுலாவிடம்[6] தென்மலை(வனச்சுற்றுலா), கோனி (யானைப் புகலிடம்)[7] புனலூர், அகத்தியவனம்[8] போன்ற கேரள பகுதிகளும், தமிழகத்தின் முண்டந்துறை புலிகள் சரணாலயம் பகுதியும் இதில் அடங்குகின்றன.