அகனேசு கில்பெர்னே | |
---|---|
பிறப்பு | பெல்காம், கருநாடகம், இந்தியா | 19 நவம்பர் 1845
இறப்பு | 20 ஆகத்து 1939 ஈசுட்டுபவுர்னே, கிழக்கு சூசெக்சு, இங்கிலாந்து | (அகவை 93)
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | ஆங்கிலேயர் |
காலம் | 19 ஆம் நூற்றாண்டு |
வகை | குழந்தை இலக்கியம் |
அகனேசு கில்பெர்னே (Agnes Giberne, 19 நவம்பர் 1845, பெல்காம், இந்தியா – 20 ஆகத்து 1939, ஈசுட்டுபவுர்னே, இங்கிலாந்து) ஒரு பெயர்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவர் அற, சமயக் கருப்பொருள்களில் குழந்தைப் புனைவிலக்கியப் படைப்பாளரும் மக்கள் வானியல் எழுத்தாளரும் ஆவார்.[1]
ஐரோப்பிய, இலண்டன் பள்ளிகளில் கல்விகற்ற இவர், தனது தந்தையான படைத் தளபதி சார்லசு கில்பர்னே இந்தியாவில் இருந்து பணிவிடை பெற்றதும், அறவியல் புதினங்களையும் சிறுகதைகளையும் ஏ. ஜி. என்ற பெயரில் சமயநெறிக் கழகத்துக்காக வெளியிட்டார். பின்னர் இவர் தன் புனைவு எழுத்துகளுக்கும் வானியல், இயற்கையியல் நூல்களுக்கும் முழுப்பெயரையும் பயன்படுத்தலானார். இவர் குழந்தை எழுத்தாளராகிய சார்லத்தி மரியா தக்கர் வாழ்க்கை வரலாற்று நூலும் எழுதி வெளியிட்டார். இவரது எழுத்துகள் அனைத்துமே 1910 க்கு முன்பேவெளியாகின.
கில்பர்னே பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய வானியல் கழக உருவாக்கக் குழுவில் பணியாற்றினார். 1890 இல் அதன் நிறுவன உறுப்பினர் ஆனார். இவரது சூரியன், நிலா, விண்மீன்கள்: தொடக்கநிலை வானியல் (1879) எனும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்லசு பிரிச்சர்டுவின் அறிமுகத்துடன் வெளியிடப்பட்ட படவிளக்க நூல், 20 ஆண்டுகளில் பல பதிப்புகள் கண்டு, 25,000 படிகளுகளுக்கு மேல் விற்று இவருக்குப் பெரும்பெயர் ஈட்டித் தந்தது. பின்னர் இவர் "விண்மீன்களுக்கு இடையே" எனும் நூல், அவரே அறிமுகத்தில் கூறுவது போல, "சூரியன், நிலா, விண்மீன்கள்" என்ற நூலின் இளைஞருக்காக எழுதிய பதிப்பேயாகும். இந்நூல் வானியலில் ஆர்வம் கொண்ட இகோன் என்ற சிறுவனைப் பற்றிய நூலாகும். இகோன் ஒரு வானியல் பேராசிரியரைச் சந்திக்கிறான். அவர் இகோனுக்கு விண்மீன்களையும் சூரியக் குடும்பத்தையும் பற்றி விளக்குகிறார்.