அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1558 லிஸ்பன், போர்த்துகல் இராச்சியம் |
இறப்பு | 1611 (அகவை 52–53) போர்த்துகல் இராச்சியம் |
தேசியம் | போர்த்துக்கீசர் |
Military service | |
பற்றிணைப்பு | போர்த்துக்கீசியப் பேரரசு |
போர்கள்/யுத்தங்கள் | மலாக்கா முற்றுகை (1606) பாண்டம் போர் (Battle of Bantam) பிளோரெசு போர் (Battle of Flores) (1592) |
அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா (André Furtado de Mendonça, 1558 – ஏப்ரல் 1, 1611) போர்த்துக்கேய இந்தியாவில் படைத்தளபதியும் ஆளுனரும் ஆவார்[1][2]. இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மலாக்கா ஆகிய நாடுகளுக்குள் போர்த்துக்கேயரின் ஆட்சி விரிவாக்கம் பெற்ற காலத்தில் இவர் படைகளின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.
இவர் பேஜா, ரியோ மையோர் ஆகியவற்றின் கட்டளை அதிகாரியாக இருந்த அபோன்சோ பூர்த்தாடோ மென்டோன்சா, யொவானா சோசா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சண்டை தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பிய அந்தரே பூர்த்தாடோ தனது 18 ஆவது வயதில் சண்டை, காலநிலையியல், கடலியல், நிலப்படவியல் ஆகியவற்றைக் கற்கத் தொடங்கினார். இவர் பின்னர் படைகளில் சேர்ந்து 25 வயதிலேயே ஒரு வெற்றிகரமான படைத்தலைவர் ஆனார். இவர் புளோரசுப் போர் உட்படப் பல குறிப்பிடத்தக்க போர்களில் பங்குபற்றியுள்ளார். இவர் போர்த்துக்கேயப் பேரரசுக்காக, இந்தியப் பெருங்கடற்பகுதியின் பல குடியேற்ற நாடுகளில் பணியாற்றினார். உடல்நலக் குறைவினால் 1611 ஆம் ஆண்டு காலமான இவர் லிசுபனில் உள்ள கிரேஸ் குருமடத் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, 1591 ஆம் ஆண்டில் 1,400 போர்த்துக்கேயரையும், 3,000 சிங்களவர்களையும் உள்ளடக்கிய படையுடன், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூரைத் தாக்கி அதை வெற்றிகொண்டான். அரசன் புவிராச பண்டாரத்தைக் கொன்றுவிட்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்த எதிர்மன்னசிங்கன் என்பவனை மன்னனாக்கினான். இதனூடாக யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் கீழான ஒரு சிற்றரசு ஆனது. இது போர்த்துக்கேயக் குருமார் யாழ்ப்பாணத்தில் தடையின்றிக் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கான வாய்ப்பையும் வழங்கியது. அத்துடன் 1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வருவதற்கான வழியையும் திறந்துவிட்டது.