1985 ஆம் ஆண்டை அனைத்துலக இளைஞர் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71 ஆவது கூட்டத்தில் இதற்கான தீர்மானம் (இல.A/RES/39/22) நிறைவேற்றப்பட்டது. "பங்கேற்பு, வளர்ச்சி, அமைதி" என்பது இந்த இளைஞர் ஆண்டின் கருப்பொருள்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1978 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதன் முதலாக அனைத்துலக இளைஞர் ஆண்டு ஒன்றை அறிவிக்கவேண்டும் எனத் தீர்மானம் (33/7) நிறைவேற்றியது. 1979 ஆம் ஆண்டு ஆகத்து 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மன்றம் அனைத்துலக ஆண்டுகள் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தையும் கருத்தில் கொண்டு, 1979 டிசம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1985 ஆம் ஆண்டை அனைத்துலக இளைஞர் தினமாக அறிவிக்கவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பின்னர் 1980, 81, 82, 83 ஆம் ஆண்டுகளிலும் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1984 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இது குறித்த இறுதித் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் நேரடிப் பங்கேற்பின் இன்றியமையாமையையும்; நேர்மை, நீதி என்பவற்றின் அடிப்படையில் புதிய அனைத்துலகப் பொருளாதார ஒழுங்கைச் செயற்படுத்துவதில் இளைஞர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு இந்த அனைத்துலக ஆண்டு அறிவிக்கப்பட்டது[1].
அனைத்துலக இளைஞர் ஆண்டு அறிவிக்கப்பட்டதில் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட விடயங்களாகப் பின்வருவனவற்றை இதுகுறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானம் குறிப்பிடுகிறது[1]:
அனைத்துலக இளைஞர் ஆண்டின் நோக்கங்களை அடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும், பல்வேறு மட்டங்களிலும் நிகழும் ஒன்றியைந்த செயல்பாடுகளின் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும்; உறுப்பு நாடுகளையும், சிறப்பு நிறுவனங்களையும், ஐக்கிய நாடுகளின் நிதியங்கள், திட்டங்கள் போன்றவற்றையும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.