அமலெந்து டே অমলেন্দু দে ![]() | |
---|---|
பிறப்பு | 2 சனவரி 1930 பரித்பூர் மாவட்டம் |
இறப்பு | 16 மே 2014 (அகவை 84) |
வேலை வழங்குபவர் | |
அமலெந்து டே (Amalendu De, 1929 - 16 மே 2014) என்பவர் வரலாற்றாசிரியர் ஆவார். ஜாதவ்பூர் பல்கலைக்கழக குருநானக் பேராசிரியராக இருந்தவர். வாணாளில் பெரும்பகுதியை ஜாதவ்பூர் பல்கலைக் கழக ஆசிரியராகப் பணியில் கழித்த அமலெந்து டே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்று ஆய்வில் வல்லுநராகக் கருதப்படுகிறார். கொல்கத்தா ஆசியாட்டிக் சொசைட்டியின் தலைவராகவும் இருந்தார்.
தற்போதைய வங்காளதேசத்தில் உள்ள மதரிபூர் என்னும் ஊரில் பிறந்தவர் அமலெந்து டே. நசீமா பானு என்னும் முசுலிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்[1].
மதத்தின் அடிப்படையில் இந்தியா பிளவுண்டதைக் கண்டு வருந்தினார்[1] . இந்திய சீன நட்புறவு வளர்ந்து தழைக்க வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார். இந்தியாவும் சீனாவும் இணக்கத்துடன் இருந்தால் உலக அமைதிக்கு வழி வகுக்க முடியும் 1938இல் இந்திய மருத்துவக் குழு சீனப் பயணம் செய்தது குறித்து ஒரு நூல் எழுதினார். 19 ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் இருந்த பிரிவினைவாதம், அதன் மூலக் காரணம், அந்தக் காலகட்டத்தில் வங்காளத்தில் நிலவிய அறிவார்ந்த நிலைமை ஆகியவற்றைப் பற்றி ஒரு நூல் எழுதினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அனுசீலன் சமிதி என்னும் அமைப்பின் பங்களிப்புக் குறித்தும் எழுதினார்.
இந்திய சீன நட்புறவுக் கழக பொதுச் செயலாளராகவும் துவாரகநாத் கோட்னிஸ் நினைவுக் குழுவின் தலைவராகவும் ஆனார். 1982 இல் அலிகாரில் நிகழ்ந்த இந்திய வரலாற்றுப் பேராயத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தா பல்கலைக் கழக தேசிய ஒருமைப்பாட்டு மையம், தாரா சிக்கோ ராம்மோகன் சொசைட்டி ஆகிய அமைப்புகளின் வாயிலாக மத நல்லிணக்கத்தையும் நாட்டு ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி நூல்கள் எழுதினார்.
மே 16, 2014 அன்று தனது 85ஆவது அகவையில் மரணமடைந்தார். இவருடைய விருப்பப்படி இவர் மறைவுக்குப்பின் இவரது உடல் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொடை அளிக்கப்பட்டது[2].