அமல் அல்லானா | |
---|---|
பிறப்பு | 14 செப்டம்பர் 1947[1] மும்பை |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய நாடகப் பள்ளி |
பணி | நாடக இயக்குநர், நாடகக் கற்பிப்பாளர்.[2] |
செயற்பாட்டுக் காலம் | 1970–தற்போது வரை |
அமல் அல்லானா (Amal Allana) (பிறப்பு:1947 செப்டம்பர் 14) இந்தியாவைச் சேர்ந்த நாடக இயக்குனரும், மேடை வடிவமைப்பாளரும், ஆடை வடிவமைப்பாளரும் ஆவார். தற்போது இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக புது தில்லி, தேசிய நாடகப் பள்ளியின் தலைவராக இருக்கிறார். இந்தியாவின் முதன்மை நாடக பயிற்சி நிறுவனமான "நாடகக் கலை மற்றும் வடிவமைப்பு அகாதமி"யை தனது கணவர் நிசார் அல்லானாவுடன் இணைந்து புது தில்லியில் 2000ஆம் ஆண்டில் நிறுவினர். [3] [4] [5]
ஒரு நாடக இயக்குநராக, இந்தியில் 55 நாடகங்களை இயக்கியுள்ளார். இதில் ஆதே ஆதுரே (மோகன் ராகேஷ்), கமோஷ், அதாலத் ஜாரி ஹை (விஜய் டெண்டுல்கரின் 1956 சிறுகதையின் தழுவல்), ஆஷாத் கா ஏக் தின் (மோகன் ராகேஷ்), துக்ளக் மற்றும் ஹயவதானா (இரண்டும் கிரீஷ் கர்னாட்), மகாபோஜ் (மனு பண்டாரி) (1982), கிங் லியர், ஹிம்மத் மாய், நாட்டி பினோதினி (2006) மற்றும் பேகம் பார்வ் (சதீஷ் அலேகர்) போன்றவை. அவற்றில் பல இந்திய நாடகங்களில் புதிய பாணிகளை அமைத்திருப்பதாக அறியப்படுகிறது. [6] [7]
இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியான [8] சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாடமி விருதினை 1998 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது
1947 ஆம் ஆண்டில் மும்பையில் பிரபல நாடக இயக்குநரும், தேசிய நாடக பள்ளியின் முதல் இயக்குநருமான இப்ராஹிம் அல்காசிக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர். [9] இவரது தாயார் ரோஷன் அல்காசி, குஜராத்தி இஸ்மாயில் கோஜா சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் அல்காசியின் அனைத்து நாடகங்களுக்கும் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தார். [10] 1947ஆம் ஆண்டில், அமலின் தந்தைவழி உறவினர்கள் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தனர். ஆனால் இவரது தந்தை இந்தியாவிலே தங்கியிருந்தார். [11]
அமல் நாடகக் கலைஞர்களால் சூழப்பட்ட ஒரு வீட்டில் வளர்ந்தார். மேலும், இவரது பாட்டி, ஒரு தீவிரமான காந்தியவாதியாவார். கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நாடகப் பிரமுகர்களால் அடிக்கடி இவர் கவனிக்கப்பட்டார், மேலும் இவரது தந்தையும் தனது நாடக ஒத்திகைகளில் பெரும்பாலானவற்றில் இவரை நடிக்கச் செய்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும், கல்லூரியைத் தவிர்த்துவிட்டு, தில்லி தேசிய நாடகப் பள்ளியில் தனது தந்தையின் கீழ் பயின்று, 1968இல் நாடக இயக்குநராகப் பட்டம் பெற்றார். மேலும் சிறந்த இயக்குனருக்கான கிரிஷ் கோஷ் விருதையும், சிறந்த மாணவருக்கான பாரத் புரஸ்கார் விருதையும் வென்றார். [3][12]
இவர் நிசார் அல்லானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரை தனது 15 வயதில் தந்தையின் நாடகக் குழுவில் சந்தித்தார். நிசார் அல்லானா தொழில் ரீதியாக ஒரு மருத்துவராக இருந்தாலும், மேடை வடிவமைப்பு மற்றும் ஒலி வடிவமைப்பில் பயிற்சி பெற்றிருந்தார். மேலும், இவரது பெரும்பாலான நாடகங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர்கள் 2000 ஆம் ஆண்டில் தில்லியில் நிறுவிய நாடக கலை மற்றும் வடிவமைப்பு அகாதமியின் (டாடா) இயக்குநராகவும் உள்ளார். இவர்களது மகள் ஜூலைகா சௌத்ரியும் நாடக இயக்குநராக உள்ளார். [3]
இவரது தாயார், ரோஷன் அல்காசி 2007 இல் இறந்தார். ஒரு வருடம் கழித்து ஏன்சியன்ட் இன்டியன் காஸ்டியூம் அன்ட் மெடிவல் இன்டியன் காஸ்டியூம் என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்கள், வரலாற்றின் மூலம் இந்திய ஆடை பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படையில் இவரும் இவரது தந்தை இப்ராஹிம் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இவரது பெற்றோரால் நிறுவப்பட்ட கலை பாரம்பரியக் கலைகூடத்தில் வெளியிடப்பட்டது . [13]