அமிர்தா பட்டேல் | |
---|---|
கொல்கத்தாவில் அமிர்தா பட்டேல், 2016 | |
பிறப்பு | 13 நவம்பர் 1943 புது தில்லி, பிரித்தானிய இந்தியா |
பணி | தொழிலதிபர் |
விருதுகள் | பத்ம பூசண் (2001) |
அமிர்தா பட்டேல் (Amrita Patel) ஓர் இந்தியத் தொழில் அதிபரும், கூட்டுறவு பால் துறையுடன் தொடர்புடையவரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1998 முதல் 2014 வரை இந்தியாவின் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தார். இது உலகின் மிகப்பெரிய பால் மேம்பாட்டுத் திட்டமான வெண்மைப் புரட்சியை முன்னெடுத்தது. இவர் பல நிறுவனங்களுக்கு தலைமை தாங்கினார். இவர் பல வங்கிகளின் வாரிய உறுப்பினராகவும் இருந்தார். இந்திய அரசு இவருக்கு 2001இல் பத்ம பூசண் விருது வழங்கியது.
அமிர்தா பட்டேல் 13 நவம்பர் 1943 அன்று புது தில்லியின் எண் 1 சப்தர்ஜங் சாலையில் குசராத்தி குடும்பத்தில் பிறந்தார். அரசு ஊழியரும், அரசியல்வாதியுமான ஹிருபாய் எம். பட்டேல்- சவிதாபென் ஆகியோரின் ஐந்து மகள்களில் இளையவர். இவரது தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது, இவரது குடும்பம் 1959இல் குசராத்தில் உள்ள ஆனந்திற்கு திரும்பியது. இவர் மும்பையில் இருந்து தனது உயர் கல்வியைப் பெற்றார். பின்னர், கால்நடை அறிவியலிலும், கால்நடை பராமரிப்பிலும் இளங்கலை படிப்பை முடித்தார். 1965ஆம் ஆண்டில், இவர் பால் கூட்டுறவு அமைப்பான அமுலில் சேர்ந்து பின்னர் வர்கீஸ் குரியனின் கீழ் பயிற்சி பெற்றார். [1] [2]
அமுலில் நாற்பதாண்டு காலப் பணிக்குப் பிறகு, 1998 முதல் 2014 வரை தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக பணியாற்றினார். பின்னர், இதன் நிர்வாக இயக்குநராக, இவர் உலகின் மிகப்பெரிய பால் மேம்பாட்டுத் திட்டமான வெண்மைப் புரட்சியை முன்னெடுத்தார்.[3]
இவர் தில்லியில் உள்ள மதர் டெய்ரி என்ற பால் பண்ணையின் தலைவராகவும் ஆனார். சர்வதேச பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இந்திய தேசியக் குழுவின் தலைவரும் பின்னர் இமாச்சலப் பிரதேச அரசின் திட்டக் குழுவின் உறுப்பினரும் ஆவார்.[4] இவர் இந்திய ரிசர்வ் வங்கி, வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி (நபார்டு) ஆகியவற்றின் வாரியங்களின் உறுப்பினராக உள்ளார்.[3]
இவர் சுற்றுச்சூழலையும், சூழலியல் பாதுகாப்பையும் ஆதரிக்கிறார். இவர் சூழலியல் துறையில் பணிபுரியும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அறக்கட்டளையின் தலைவராக இருந்தார்.[1] இவர் ஆனந்தின் சர்தார் படேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம், சாருதார் ஆரோக்ய மண்டல் ஆகியவற்றின் தலைவர் ஆவார்.[3]
பால் துறை மேம்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் இவரது பங்களிப்பிற்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய கட்டமைப்பிற்கான ஜவகர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது (1999-2000), உலக பால் கண்காட்சியின் சர்வதேச ஆண்டின் சிறந்த நபர் (1997), இந்திய பால் சங்கத்தின் கூட்டுறவு, கிரிஷிமித்ரா விருது, எரிபொருள் பொறியியல் நிறுவனத்திடமிருந்து அறக்கட்டளை தேசிய விருது, சஹகரிதா பந்து விருது, போர்லாக் விருது (1991), இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கர் (2005),[3] மஹிந்திரா சம்ரிதி கிருஷி சிரோமணி சம்மன் (வாழ்நாள் சாதனை விருது, 2016) ஆகியவை அடங்கும். [5]
இந்திய அரசாங்கம் 2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண்விருதை இவருக்கு வழங்கியது.[4][1][6][3]