சென்னை அரசு அருங்காட்சியகம் (Government Museum) சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத் தொகுதி இன்று, 16.25 ஏக்கர் (66,000 சதுர மீட்டர்) பரப்பளவுள்ள நிலத்தில் அமைந்த ஆறு கட்டிடங்களுடனும் அவற்றில் அடங்கிய 46 காட்சிக்கூடங்களுடனும் விளங்குகிறது. தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1][2][3]
1846 ஆம் ஆண்டில் மதராசு கல்விக் கழகம் (Madras Literary Society), சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அப்போது சென்னை மாகாணத்தின் பிரித்தானிய அரச ஆளுனராக இருந்த சர் ஹென்றி பாட்டிங்கர் (Sir Henry Pottinger), இலண்டனில் இருந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் நெறியாளர் குழுவிடமிருந்து இதற்கான அனுமதியைப் பெற்றார். இந்த அருங்காட்சியகத்தின் முதல் பொறுப்பாளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர் (Edward Balfour) என்பவரை ஆளுனர் நியமித்தார். 1851 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அரசு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படுவது பற்றிய அரசு ஆணை முதன்முதலாக வெளியிடப்பட்டது. மதராசு கல்விக் கழகத்தின் 1100 நிலவியல் மாதிரிகளுடன், கல்லூரிச் சாலையில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை கல்லூரியின் முதலாம் மாடியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அருங்காட்சியகம் விரிவடைந்து வந்த நிலையில், அதன் கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், 1854 ஆம் ஆண்டில் இது பந்தியன் (Pantheon) என அழைக்கப்பட்ட இன்னொரு கட்டிடத்துக்கு இடம் மாற்றப்பட்டது.[4]
1853 ஆம் ஆண்டில் இங்கே பொது நூலகம் ஒன்றும் தொடங்கப்பட்டது. 1862ஆம் ஆண்டில் இது பொது மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டது. 1873ஆம் ஆண்டில் நூலகம், விரிவுரை மண்டபம் ஆகியவற்றுக்காகப் புதிய கட்டிடம் ஒன்றின் கட்டிட வேலைகள் தொடங்கின. 1875 ஆம் ஆண்டில் இக் கட்டிடம் முறைப்படி அப்போதைய ஆளுனரால் திறந்துவைக்கப்பட்டது. கண்காணிப்பாளர் கப்டன் மிச்சேல் நூலகத்தை உறுதிப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்தார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி நூலகம் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் "கன்னமாரா நூலகம்" என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்டது. இந் நூலகம் பின்னர் பொதுக் கற்பித்தல் நெறியாளரின் (Director of Public Instruction) நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1854 ஆம் ஆண்டில் ஒரு புலியும் சீத்தாக் குட்டியும் மக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இதனால் அருங்காட்சியகத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மருத்துவர் பல்ஃபர், கர்நாடக நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுப் பெற்றுக்கொண்டார். 1856 ஆம் ஆண்டு முதல் அரைப்பகுதியளவில் அருங்காட்சியகத்தில் விலங்கினக் காட்சிச்சாலையில் 360 விலங்குகள் இருந்தன. 1863 ஆம் ஆண்டில் மாநகரசபை விலங்கினக் காட்சிச்சாலையைப் பொறுப்பேற்று வேறிடத்துக்கு மாற்றியது.
1909 ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு நீர்வாழ்விலங்குகள் காட்சியகமும் (Aquarium) அரசு அருங்காட்சியகத்தின் கீழ் திறந்துவைக்கப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இக் காட்சியகத்தை 1910 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீன்வளத்துறை பொறுப்பேற்றுக் கொண்டது. 1942 ஆம் ஆண்டில் யப்பானியத் தாக்குதலுக்குப் பயந்து நகரத்திலிருந்து நிறுவனங்கள் அகற்றப்பட்டபோது நீர்வாழ்விலங்குகள் காட்சியகத்திலிருந்த விலங்குகள் அனைத்தும் கைவிடப்பட்டன. இதனை மீண்டும் அமைப்பதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.
1984 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி சமகால ஓவியங்களுக்கான புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பனவற்றுள் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களும் அடங்கும். 1988 ஆம் ஆண்டில் ஒரு சிறுவர் அருங்காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது.
அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள ஆறு தனித்தனியான கட்டிடங்களில் காட்சிக்கூடங்கள் அமைந்துள்ளன. இவை:
என்பனவாகும்.