ஆயர் ஈத்தாம் | |
---|---|
Ayer Hitam | |
ஆயர் ஈத்தாம் அருகில் கூட்டரசு சாலை 1 (மலேசியா) - கூட்டரசு சாலை 50 (மலேசியா) வழித்தடங்களுக்கு இடையிலான சந்திப்பு | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°55′6″N 103°10′49″E / 1.91833°N 103.18028°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
நகராண்மை | யோங் பெங் நகராண்மைக் கழகம் (Yong Peng Municipal Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் |
மலேசிய அஞ்சல் குறியீடு | 86100 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-07 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
இணையதளம் | www |
ஆயர் ஈத்தாம் (மலாய்: Ayer Hitam அல்லது Bandar Seramik; ஆங்கிலம்: Ayer Hitam; சீனம்:亚依淡; ஜாவி: يير هيتم) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஒரு நகரம் ஆகும்.
இந்த நகருக்கு வெண் களிமண் நகரம் (Ceramic Town) எனும் பெயரும் உண்டு. மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கூட்டரசு சாலை 1 (மலேசியா) ; கூட்டரசு சாலை 50 (மலேசியா)
வழித் தடங்களின் சந்திப்பில் இந்த நகரம் உள்ளது.
அத்துடன் மலேசிய வடக்கு-தெற்கு விரைவுசாலையின் தென்பகுதி வழித் தடமும் இந்த நகரைக் கடந்துதான் செல்கிறது. இந்த நகரம் மட்பாண்டங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்களுக்குப் பெயர் பெற்றது.[1]
மலாய் மொழியில் ஆயர் (Ayer) என்றால் நீர்; ஈத்தாம் (Hitam) என்றால் கறுமை நிறம்; கருங்கல் நீர் என்று பொருள்படும். 1990-ஆம் ஆண்டுகளில், இந்த நகரம் வடக்கு மற்றும் தெற்கு நோக்கி பயணிக்கும் மக்களாலும் வாகனங்களாலும் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
சிங்கப்பூர் மற்றும் தீபகற்ப மலேசியாவின் பிற மாநிலங்களில் இருந்து பேருந்துகள் மூலம் வரும் பயணிகளின் தேவைகள் நிறைவு செய்வதற்காக ஆயர் ஈத்தாம் நகரில் கடைகள் 24 மணி நேரமும் திறந்து இருக்கும்.
அண்மைய காலங்களில், ஆயர் ஈத்தாம் - ஜொகூர் பாரு பிரதான சாலைக்கு அருகில் உள்ள கடைகள் இரவு 8 மணிக்குள் மூடப்பட்டு விடுகின்றன. ஏனெனில் இரவில் அதிக வாடிக்கையாளர்கள் வருவது இல்லை.
1993 ஆகஸ்டு 12-ஆம் தேதி வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் மாச்சாப் பாதை (Machap Exit) திறக்கப் பட்டதும், கிட்டத்தட்ட 50% வணிகம் குறைந்து விட்டது.[1]
வடக்கே மலாக்கா; கோலாலம்பூர் நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கும்; தெற்கே ஜொகூர் பாரு; சிங்கப்பூர் நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கும்; கிழக்கே குளுவாங்; மெர்சிங் நகரங்களை நோக்கி செல்லும் பயணிகளுக்கும்; ஆயர் ஈத்தாம் நகரம் ஒரு பெரிய ஓய்விடமாக இருந்தது.
மாச்சாப் பாதை திறக்கப் படுவதற்கு முன், ஆயர் ஈத்தாம் நகரம் ஒரு பெரிய சந்திப்பு மையமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை பெரிது மாறிவிட்டது. ஆயர் ஈத்தாம் நகருக்குப் பயணிகள் வருவது குறைந்து விட்டது.
மலேசியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் (Datuk Seri Dr Wee Ka Siong), மலேசிய நாடாளுமன்றத்தில் ஆயர் ஈத்தாம் தொகுதியைப் பிரதிநிதிக்கிறார்.[2]