இந்திய அரசு காசாலை, கொல்கத்தா (India Government Mint, Kolkata) 1757 ஆம் ஆண்டில் முதன்முதலில் நிறுவப்பட்டது,[1] இது பழைய கோட்டையில் உள்ள பிளாக் ஹோலை அடுத்த கட்டடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்த அஞ்சல் அலுவலகம் இன்றும் உள்ளது.[2] இது கல்கத்தா மின்ட் என்று அழைக்கப்பட்டது. இந்த ஆலையில் இருந்து வந்த நாணயங்கள், முர்ஷிதாபாத் என்ற பெயரைக் கொண்டிருந்தன.
1790 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நவீன இயந்திரங்களைக் கொண்டு இரண்டாவது காசாலை நிறுவப்பட்டது. இது ஜில்லெட் கப்பல் கட்டிட தளத்தில் அமைக்கப்பட்டது, இந்த ஆலையில் இருந்து வந்த நாணயங்களும், முர்ஷிதாபாத் என்ற பெயரையே கொண்டிருந்தன.
1824 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கல்கத்தாவின் மூன்றாவது காசாலை ஸ்ட்ராண்ட் சாலையில் அமைக்கப்பட்டது. இது 1829 ஆகத்து 1 முதல் உற்பத்தியைத் தொடங்கியது. 1835 ஆம் ஆண்டு வரை முத்துஷிதாபாத் என்ற பெயரிலேயே இங்கு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த மூன்றாவது காசாலைக் கட்டிடத்தின் வடிவமானது கிரீஸின் ஏதென்ஸில் உள்ள அதீனா ஆலயத்தின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது, இது பொதுவாக பார்த்தினன் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆலைகளின் நாணய உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு 300,000 முதல் 600,000 வரை ஆகும். 1860 ஆம் ஆண்டில், செப்பு நாணயங்கள் உற்பத்திக்கு என தனியாக வெள்ளி நாணய உற்பத்தி ஆலைக்கு வடக்கே கட்டடம் கட்டப்பட்டது இது "காப்பர் மின்ட்" எனப்பட்டது.[சான்று தேவை]