இந்திய அரசு காசாலை, நொய்டா (India Government Mint, Noida), என்பது இந்தியாவில் உள்ள நான்கு காசாலைகளில் ஒன்றாகும். இது உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 1988 சூலை 1 முதல் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1947 இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் துவக்கப்பட்ட ஒரே காசாலை இது ஆகும். இது இந்தியாவில் முதல் துருவேறா எஃகு நாணயங்களை தயாரித்து, அதன் சொந்த நாட்டிற்கான நாணயங்களை உற்பத்தி செய்வதல்லாமல், மற்ற நாடுகளுக்கும் நாணயங்களை தயாரிக்கிறது.
இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு காசாலையை நிறுவ இந்திய அரசு 1984 ஆம் ஆண்டு, முடிவு செய்தது. இந்தியாவில் அதிகரித்து வரும் நாணயங்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆண்டுக்கு 2,000 மில்லியன் நாண உற்பத்தி திறன் கொண்டதாக இந்த புதிய காசாலை நிறுவப்பட்டது. இந்த ஆலை 1988 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் தேதி தன் உற்பத்தியைத் துவங்கி, இந்தியாவின் முதல் துருவேறா எஃகு நாணயங்களை தயாரித்தது.[1]
நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் நாணயங்களில் தயாரித்த ஆண்டுக்குக் கீழே ஒரு தனித்த குறியீடாக ஒரு சிறிய அல்லது பெரிய புள்ளி (° or o) இடப்படுகிறது.[2]
இந்த ஆலையில் இந்தியாவிற்கான நாணயங்களை தயாரிப்பது தவிர, தாய்லாந்து மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றுக்கான நாணயங்களையும் தயாரித்துள்ளது. 2012 ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆலையில் இரவுப் பணியிலும் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.[3]