இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டி 2015 அல்லது இந்திய சூப்பர் லீக் 2015 என்பது இரண்டாம் வருடமாக நடைபெற்ற இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஆகும். இந்தப் போட்டித் தொடர் அக்டோபர் 3, 2015 முதல் டிசம்பர் 20, 2015 வரை நடைபெற்றது.[1] இறுதிப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 61 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோதின. லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, கோவா, தில்லி, சென்னை ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இரண்டு கட்டங்களாக நடந்தது அரையிறுதிப் போட்டி. சென்னையின் எப்.சி அணி இந்தப் போட்டித் தொடரின் வாகையாளர் ஆகும். இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.சி, எஃப்.சி கோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது [2][3]
இப்போட்டிகளின் தொடக்கவிழா சென்னையின் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினி, ஐஎஸ்எல் நிர்வாகி நீட்டா அம்பானி, சென்னையின் எஃப்.சி. அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றார்கள்.
இந்தத் தொடரில் எட்டு அணிகள் பங்கு பெற்றன.