இரைசினாக் குன்று(Raisina Hill) புது தில்லியில் லூட்யன்சு வடிவமைத்த நகர்ப்பகுதியில் ராஷ்டிரபதி பவன் உள்ளிட்ட இந்திய அரசின் மிக முதன்மையான அரசுக் கட்டிடங்களைக் கொண்டுள்ள நிலப்பரப்பு ஆகும்; இந்திய அரசின் அதிகாரபீடத்திற்கான ஆகுபெயராகவும் குறிப்பிடப்படுகின்றது.[1] இங்கு குடியரசுத் தலைவரின் அலுவல்முறை வாழிடம், பிரதமரின் அலுவலகம், நடுவண் தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அமைச்சகங்கள் இடம்பெற்றுள்ள தலைமைச் செயலக கட்டிடங்கள் அமைந்துள்ளன. இதனைச் சூழ்ந்து முதன்மையானக் கட்டிடங்களும் சாலைகளும் உள்ளன: இந்திய நாடாளுமன்றம், ராஜ்பத், இந்தியாவின் வாயில். உள்ளக சிற்றூர்களில் இருந்த 300 குடும்பத்தினரிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு "இரைசினாக் குன்று" எனப் பெயரிடப்பட்டது. 1894ஆம் ஆண்டு நிலக் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அரசப்பிரதிநிதியின் மாளிகை கட்டுவதற்காக இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்தக் குன்று 226 மீட்டர்கள் (741 அடி) உயரமாக, சுற்றுப்புறத்தை விட ஏறத்தாழ 18 மீட்டர்கள் (59 அடி) ஏற்றத்தில் அமைந்துள்ளது.