![]() |
---|
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
இலங்கை அமைச்சரவை (Cabinet of Sri Lanka) என்பது இலங்கை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் பேரவையாகும்.[1] அமைச்சரவைக்கான உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார். அதிகாரபூர்வமாக அரசுத்தலைவரே அமைச்சரவையின் தலைவராக இருப்பார். அரசின் முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கு வாரத்தில் பல முறைகள் அமைச்சரவை கூடுகிறது. அமைச்சரவைக்கு வெளியே பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்கள் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர்.
இலங்கையின் தற்போதைய அமைச்சரவையில் (2019 அக்டோபர்) அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 10 மூத்த அமைச்சர்கள், 54 அமைச்சர்கள், மற்றும் 2 திட்ட அமைச்சர்களும், 39 பிரதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இது அரசு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.[2][3] 2010 பெப்ரவரியில் கலைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரவை உலகின் மிகப் பெரிய அமைச்சரவை என்ற பெயர் கின்னசுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.[4] புதிய அமைச்சரவை 2010 ஏப்ரல் 23 இல் அமைக்கப்பட்டது.
இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை பிரித்தானிய இலங்கையில் பிரித்தானிய குடியேற்ற நிருவாகத்தினால் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இலங்கை சட்டவாக்கப் பேரவையுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட சட்டப் பேரவையாக 1833 மார்ச்சு 13 இல் நிறுவப்பட்டது.
நிறைவேற்றுப் பேரவை அமைக்கப்பட்ட போது ஆளுனர் அதன் தலைவராகவும், ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஐவர் அதன் உறுப்பினர்களாகவும் செயல்பட்டனர். குடியேற்ற செயலர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர், இலங்கையின் கட்டளைத் தளபதி ஆகியோர் இந்த ஐந்து உறுப்பினர்கள ஆவார். இப்பேரவை நிறைவேற்று அதிகாரம் கொண்டதாகவும், அத்துடன் ஆளுனரின் ஆலோசகராகவும் செயல்பட்டது. 1921 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் படி மூன்று அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1947 ஆம் ஆண்டில் இலங்கை மேலாட்சிக்கான புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து நிறைவேற்றுப் பேரவை தேசிய அமைச்சரவையாக மாற்றப்பட்டது.
அரசுத்தலைவர் அமைச்சரவையின் உறுப்பினரும் தலைவரும் ஆவார்.[1] அரசுத்தலைவரே நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடாளுமன்றத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்.[1] பிரதமரின் ஆலோசனைப்படி, அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார்.[5] அரசுத்தலைவர் தனது விருப்பப்படியும் அமைச்சர்களை நியமிக்கலாம்.[5] அமைச்சரவை உறுப்பினரல்லாத அமைச்சர்களையும் (பிரதி அமைச்சர்கள், திட்ட அமைச்சர்கள்) அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கலாம்.[6][7] முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைச்சரவை வாரத்தில் பல தடவைகள் கூடும்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ச குடியரசு தலைவாராக தேர்ந்தெடுக்கபட்டார்.