இலுண்டு மாவட்டம் Lundu District Daerah Lundu | |
---|---|
ஆள்கூறுகள்: 1°40′0″N 109°50′0″E / 1.66667°N 109.83333°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | கூச்சிங் பிரிவு |
மாவட்டம் | இலுண்டு மாவட்டம் |
நகரம் | இலுண்டு நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,812 km2 (700 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 33,413 |
• அடர்த்தி | 18/km2 (48/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | lundudc |
இலுண்டு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Lundu; ஆங்கிலம்: Lundu District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவில்; உள்ள ஒரு மாவட்டம்.[1][2]
சரவாக் மாநிலத்தின் மேற்குத் திசையில் உள்ள இலுண்டு மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,812.3 சதுர கி.மீ. இந்த மாவட்டம் வடக்கில் தென் சீனக் கடலை எதிர்கொள்கிறது. மேற்குப் பகுதியில் தஞ்சோங் டத்து கடற்கரை நகரம் உள்ளது.
இலுண்டு மாவட்டத்தின் வடக்குப் பகுதியில், தொடர்ச்சியான கடற்கரை பகுதிகள் உள்ளன. மேலும் பல தீவுகளும் உள்ளன. இதன் பின்னனியில் அந்தத் தீவுகளுக்கு உள்ளூர்ச் சுற்றுலா பயணிகள் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வது வழக்கம்.
இந்த மாவட்டத்தில் புகழ்பெற்ற காயான் ஆறு ஓடுகிறது. அதன் நீளம் 125 கி.மீ. ஆற்று வடிகால் பரப்பளவு 1,711 சதுர கி.மீ. நெல் சாகுபடி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இலுண்டு (Lundu) எனும் பெயர் ஒருவகை மீனைச் சேர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில் காடிங் மலையில் (Gunung Gading) இருந்து கீழே பாயும் இலுண்டு ஆற்றில் (Sungai Lundu) சிறிய வகை கெளுத்தி மீன்கள் (Catfish) நிறைந்திருக்கும். அந்த வகையில் இந்த இடத்திற்கு இலுண்டு என்று பெயர் வந்தது.
இலுண்டு மாவட்டத்தின் தென்கிழக்கு எல்லையில் உள்ள கந்தாய் மலையில் (Kandai Mountain) காயான் ஆறு உருவாகிறது. இந்த ஆற்றை தங்களின் தாய் ஆறு என்று இலுண்டு மாவட்டத்தில் வாழும் மக்கள் பெருமையாகப் போற்றிச் சொல்வது வழக்கம்.
இலுண்டு மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதி தொடர்ச்சியான மலைகளால் சூழப்பட்டு உள்ளது. அதே வேளையில் கடற்கரைக்கும் உயரமான மலைகளுக்கும் இடையில் பெரிய ஒரு பெரிய வண்டல் சமவெளி உள்ளது.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கங்கார் ஆறு இந்தத் தாழ்வான சதுப்பு நிலத்தின் மீது வண்டலைக் கொண்டு வந்தது. அதனால் அங்கே ஒரு பரந்த சமவெளி உருவாகி உள்ளது என்பது புவியியலாளர்களின் கணிப்பு..
18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிடாயூ (Bidayuh) பழங்குடியினர் கங்கார் ஆற்றின் கிழக்குக் கரைக்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் இந்தப் பழங்குடியினர் தங்களை தயாக்கு இலுண்டு (Dayak Lundu) என்று அழைத்துக் கொண்டனர். இந்தப் பெயரே இன்று வரை நிலைத்து விட்டது.[3]
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், செரி அமான் மாவட்டத்தின் (Sri Aman District) லுப்பார் ஆற்றின் (Lupar River) மேற்குக் கரையில் உள்ள பலாவ் (Balau) பகுதியில் வாழ்ந்த இபான் மக்கள் கூட்டாக செபுயாவ் (Sebuyau) பகுதிக்கு குடிபெயர்ந்தனர். பலாவ் பகுதியில் சுற்றி இருந்த இதர பழங்குடியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அந்தக் குடிபெயர்வுக்கு காரணமாக அமைந்தது.[3]
குடிபெயர்ந்த இபான் மக்கள் சிலரும்; அவர்களின் தலைவரான நியாம்போங் (Nyambong) என்பவரும்; சமரகான் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கும், கூச்சிங் மாவட்டத்தில் உள்ள கம்போங் குவாப் (Kampong Kuap) பகுதிகளுக்கும்; தொடர்ந்து மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர்.
பின்னர், குடிபெயர்ந்த இபான் மக்களில் சிலர், யாமெங் (Yameng) என்பவரின் தலைமையில், கங்கார் ஆற்றின் முகத்துவாரத்திற்கு வந்து, மேற்குக் கரையில் உள்ள கம்போங் சுதுங்காங் தயாக் (Kampong Stunggang Dayak) கிராமத்திற்கு அருகே குடியேறினர்.
அதைத் தொடர்ந்து, அங்கிருந்த இபான் நீளவீடுகளின் தலைவரான சூகா (Jugah) என்பவர், 1839-இல் ஜேம்சு புரூக்கைச் சந்திக்க கூச்சிங்கிற்குச் சென்றார். பின்னர், சரவாக்கின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த கிளர்ச்சிகளுக்கு எதிராக போராடி வந்த ஜேம்சு புரூக்கின் இராணுவத்திற்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்கினார்.
இராணுவ நடவடிக்கைகளுக்கும் உதவிகள் செய்தார், அதனால் அவருக்கு ஓராங் கயா பெமஞ்சா (Orang Kaya Pemancha) எனும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.[3]