ஆள்கூறுகள்: 3°53′N 100°56′E / 3.883°N 100.933°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி.1850 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
ஊத்தான் மெலிந்தாங் (மலாய்:Hutan Melintang; ஆங்கிலம்:Hutan Melintang; சீனம்:半港) என்பது மலேசியா, பேராக், பாகன் டத்தோ மாவட்டத்தில், உள்ள ஒரு நகரம். மலாக்கா நீரிணை கடல் பகுதிக்கு மிக அருகில் உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
ஊத்தான் மெலிந்தாங் ஒரு துறைமுகப் பட்டினம் ஆகும். இங்கு பல படகுத் துறைகள் உள்ளன. அந்தப் படகுத் துறைகளில் எப்போதும் மீன்பிடிப் படகுகளைக் காணலாம்.[1] கடலில் புதிதாகப் பிடித்து வந்த மீன்களைப் பேரம் பேசி இங்கு விற்பார்கள்.
ஊத்தான் மெலிந்தாங் துறைமுகப் பட்டினம் ஈக்கான் பாக்கார் எனும் வறுக்கப்பட்ட மீன்களுக்கு மிகவும் பிரபலமாகி வருகிறது. வறுத்த மீன்கள் வளாகம் எனும் ஓர் உணவு வளாகத்தையே இங்கு அமைத்து இருக்கிறார்கள். ஊத்தான் மெலிந்தாங் துறைமுகப் பட்டினத்திற்கு அருகிலேயே பெர்ணம் ஆறு ஒடுகிறது.[2]
1846-ஆம் ஆண்டில் மலாயாவுக்கு 1800 தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் தெலுகான்சன் பகுதிகளுக்கு 200 தொழிலாளர்கள். பாகன் டத்தோ தோட்டத்திற்கு 80 தொழிலாளர்கள். தவிர அருகாமையில் இருந்த ஜெண்ட்ராட்டா; பெர்னாம்; ஊத்தான் மெலிந்தாங்; ருங்குப்; சங்காட் ஜோங் போன்ற இடங்களுக்கும் தொழிலாளர்கள் கொண்டு செல்லப் பட்டனர்.[3]
1840-ஆம் ஆண்டுகளில் லைபீரியா காபி மலாயாவில் பயிர் செய்யப்பட்டு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. மலாயாவில் முதன்முதலில் லைபீரியா காபி தான் பயிர் செய்யப்பட்டது. அந்த வகையில் லைபீரியா காபிக்கு தெலுகான்சன் முன்னோடியாக விளங்கியது.[4]
அந்தக் காலக் கட்டத்தில் ஊத்தான் மெலிந்தாங் பகுதிகளில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான காபி, தென்னைத் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவியது. அதை நிவர்த்தி செய்ய ஆந்திராவில் இருந்து 1000 தமிழர்களும் ஆந்திர வம்சாவளியினரும் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களில் ஆந்திர வம்சாவளியினரே அதிகம்.[5]