எச். ஆர். பரத்வாஜ் | |
---|---|
![]() | |
16வது கர்நாடக ஆளுநர் | |
பதவியில் 25 ஜூன் 2009 – 28 ஜூன் 2014 | |
முன்னையவர் | இராமேசுவர் தாக்கூர் |
பின்னவர் | வாஜுபாய் வாலா |
கேரள ஆளுநர்களின் பட்டியல் | |
கூடுதல் பொறுப்பு | |
பதவியில் 1 மார்ச் 2012 – 9 மார்ச் 2013 | |
முன்னையவர் | பாரூக் மரைக்காயர் |
பின்னவர் | நிகில் குமார் |
27வது சட்ட அமைச்சர் | |
பதவியில் 22 மே 2004 – 28 மே 2009 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | அருண் ஜெட்லி |
பின்னவர் | வீரப்ப மொய்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 மே 1937 கடி சாம்ப்லா கிலோய், ரோத்தக் மாவட்டம், பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய அரியானா, இந்தியா) |
இறப்பு | 8 மார்ச் 2020 (வயது 82)[1] புது தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் (Hansraj Bhardwaj) (17 மே 1937 - 8 மார்ச் 2020) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009 முதல் 2014 வரை கர்நாடக ஆளுநராகவும், 2012 முதல் 2013 வரை கேரள ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். அஷோக் குமார் சென்னுக்குப் பிறகு, சுதந்திரத்திற்குப் பிறகு சட்ட அமைச்சகத்தில் இரண்டாவது நீண்ட பதவிக் காலம் வகித்த சாதனையை இவர் கொண்டுள்ளார். இவர் ஒன்பது ஆண்டுகள் மாநில அமைச்சராகவும், ஐந்து ஆண்டுகள் சட்டம், நீதி அமைச்சரவையாகவும் இருந்தார். தமிழக ஆளுநராகவும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த கொனியேட்டி ரோசையா இவருக்குப் பின் 2014இல் கர்நாடக ஆளுநரானார்.[2]
16 ஜனவரி 2012 அன்று, இவருக்கு கேரள ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.[3] இவர் 9 மார்ச் 2013 வரை பணியாற்றினார்.
பரத்வாஜ் முதன்முதலில் ஏப்ரல் 1982 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் 31 திசம்பர் 1984 முதல் நவம்பர் 1989 வரை மாநில அமைச்சராக பணியாற்றினார். மேலும், ஏப்ரல் 1988 இல் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 ஜூன் 21 முதல் 1992 ஜூலை 2 வரை திட்டமிடல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் மாநில அமைச்சராகவும் (தனி பொறுப்பு) இருந்தார். 3 ஜூலை 1992 முதல் மே 1996 வரை சட்டம், நீதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சராகவும் இருந்தார். ஏப்ரல் 1994 மற்றும் ஏப்ரல் 2000 இல் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 22 மே 2004 முதல் 28 மே 2009 வரை இவர் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சரவை அமைச்சராக பணியாற்றினார்.
முன்னதாக மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பரத்வாஜ் பின்னர், [4] அரியானாவிலிருந்து மாநிலங்கவைக்கு 20 மார்ச் 2006 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
மார்ச் 2009 இல், போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒத்தோவியோ குவாத்ரோச்சியின் முடங்கிய இரண்டு வங்கிக் கணக்குகளை மீண்டும் தொடங்குவதற்கு இவர் முன்முயற்சி எடுத்தார். குறிப்பாக, கணக்குகளை முடக்கிய நடுவண் புலனாய்வுச் செயலகதை இவர் ஆலோசிக்கவில்லை என்று தெரிகிறது. [6]
ஜூலை 2010 இல், பி. எஸ். எடியூரப்பா அரசாங்கத்தின் அமைச்சர்களான சக்திவாய்ந்த பெல்லாரி சகோதரர்கள்,, குறிப்பாக சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி இவர் கூறிய கருத்துக்கள் தேசிய விவாதத்தை உருவாக்கியது.