எட்வர்ட் ஜென்ட் Sir Edward Gent | |
---|---|
மலாயாவின் உயர் ஆணையர் | |
பதவியில் 1 பிப்ரவரி 1948 – 4 சூலை 1948 | |
பின்னவர் | சர் என்றி கர்னி (Sir Henry Gurney) |
மலாயா ஒன்றிய ஆளுநர் | |
பதவியில் 1 ஏப்ரல் 1946 – 30 சனவரி 1948 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 அக்டோபர் 1895 கிங்ஸ்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 4 சூலை 1948 (வயது 52) மிடில்செக்ஸ், |
துணைவர் | குண்டோலன் மேரி வைத் |
முன்னாள் கல்லூரி | டிரினிட்டி கல்லூரி, ஆக்ஸ்போர்டு, ஐக்கிய இராச்சியம் |
சர் எட்வர்ட் ஜென்ட் (மலாய்; ஆங்கிலம்: Sir Edward James Gent) (28 அக்டோபர் 1895 - 4 ஜூலை 1948) என்பவர் 1946 இல் மலாயா ஒன்றியத்தின் முதல் ஆணையர்; மலாயா ஐக்கிய இராச்சியத்தின் முதல் உயர் ஆணையர் ஆவார். அத்துடன் மலாயாவில் இரு வகையான ஆணையர் பதவிகளை வகித்த முதலும் கடைசியுமான ஆணையரும் இவரே ஆவார்.[1]
மலாயாவில் முதன்முதலில் உருவான மலாயா விடுதலை எழுச்சியைத் தடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இவர் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். அந்த விடுதலை எழுச்சியானது மலாயா அவசர காலத்தில், மலாயா பொதுவுடைமை கட்சியின் தலைமையில் நடந்தது. இருப்பினும் அந்த விடுதலை எழுச்சியின் முதல் ஆண்டில் இவர் ஓர் விமான விபத்தில் காலமானார்.[2]
இத்தாலியில், முதலாம் உலகப் போரில் ஐக்கிய இராச்சியத்தின் தரைப்படையில் பணியாற்றினார். அந்தப் போரில் அவர் இரண்டு முறை காயமடைந்தார். அவரின் சிறப்பான போர்க் காலப் பங்களிப்புகளுக்காக அவருக்கு 1917-இல் இராணுவ விருதும்; 1919-இல் சிற்ப்பு இராணுவ விருதும் வழங்கப்பட்டன.
இவர் மலாயா ஒன்றியத்தில் நியமிக்கப்பட்ட முதல் ஆணையர் ஆவார். 1 ஏப்ரல் 1946-இல் கோலாலம்பூரில், மலாயா ஒன்றியம் அமைக்கப்படுவதில் இவர் ஒரு முக்கிய நபராக விளங்கினார்.
மலாயா கூட்டமைப்புக்குப் பதிலாக மலாயா ஒன்றியம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர், எட்வர்ட் ஜென்ட் மலாயாவுக்கான உயர் ஆணையராகப் பதவி உயர்த்தப்பட்டார். ஆனால் அவர் நீண்ட காலம் அந்தப் பதவியை வகிக்கவில்லை.
அவர் இலண்டனில் இருந்த தலைமை அலுவலகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்; மற்றும் மலாயா அவசர காலத் தொடக்கத்தில், 29 சூன் 1948-இல், அவர் இலண்டனுக்கு திரும்ப அழைக்கப்பட்டார். தென்கிழக்கு ஆசியாவிற்கான பிரித்தானிய தலைமை ஆணையர் மால்கம் மெக்டொனால்டு (Malcolm MacDonald), தலைமை அலுவலகத்திற்கு கொடுத்த நெருக்குதல்களினால் எட்வர்ட் ஜென்ட் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
மலாயா அவசர கால நிலை அமல்படுத்துவதற்கு முன், மலாயாவின் மலாயா பொதுவுடைமை கட்சியினால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று எட்வர்ட் ஜென்ட் நம்பினார். அந்த வகையில், மலாயா பொதுவுடைமை கட்சிக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட மறுத்துவிட்டார்.
மலாயா பொதுவுடைமை ஆதரவாளர்கள், முதன்முதலாக மலாயா ரப்பர் தோட்டங்கள் மீது தாக்குதல்களை நடத்தியபோது, 1948 ஜூன் 16 அன்று பேராக் மற்றும் ஜொகூர் பகுதிகளில் மட்டும் மலாயா அவசரகால நிலையை அறிவித்தார். எட்வர்ட் ஜென்டின் இந்தச் செய்லபாடு மலாயாவின் ரப்பர் தோட்டக்காரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதைத் தொடர்ந்து மறுநாள், மலாயாவின் ஆங்கில நாளேடான 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' (Straits Times) தனது முதல் பக்கச் செய்தியில் "ஆட்சி செய்; இல்லையென்றால் வெளியேறு" (Govern or Get Out) என்று எழுதியது. மறுநாள் மலாயா முழுமைக்கும் மலாயா அவசரகால நிலையை விரிவுபடுத்த ஜென்ட் கட்டாயப் படுத்தப்பட்டார்.
இலண்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜென்ட், அரச பிரித்தானிய வான்படையின் அவ்ரோ யார்க் போக்குவரத்து வானூர்தியில் ஐக்கிய இராச்சியத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, வடக்கு இலண்டனின் நார்த்வுட் அருகே இசுகாண்டிநேவியன் வானூர்திச் சேவையின் டக்ளஸ் டிசி-6 ரக வானூர்தியுடன் ஜென்ட் பயணம் செய்த வானூர்தி மோதியது. [3] அந்த விபத்தில் அவருடன் மற்றும் 39 பேர் உயிரிழந்தனர்.[4]