அருட்தந்தை என்றி பவர் (Reverend Henry Bower, 18 திசம்பர் 1812 – 2 செப்டம்பர் 1885) என்பவர் தமிழ் மொழி மீதான புலமைக்காக அறியப்பட்ட, நற்செய்தியின் பிரச்சார சங்கத்தின் ஆங்கிலோ-இந்திய மதப்பரப்புனர் ஆவார். கிறித்துவர்களின் வேதநூலான விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர். கிறித்தவ ஆன்மிகப் பணிகளுடன், சில தமிழ் இலக்கியப் படைப்புகளையும் செய்தவர்.[1][1]
தமிழ் கிறித்தவ வேதாகம மொழிபெயர்ப்புகளில் “சீகன்பால்க் மொழிபெயர்ப்பு”, ”பப்ரிசியுசின் மொழிபெயர்ப்பு”, ”இரேனியுஸ் மொழிபெயர்ப்பு”, ”பெர்சிவல்” அல்லது ”பரீட்சை மொழி பெயர்ப்பு” என பல இருக்கின்றன. சீகன்பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும், பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும் குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ் மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயர் என்பவரைத் தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு. முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஹென்றி பவரின் மொழிபெயர்ப்புதான். இது ”பவர் மொழிபெயர்ப்பு”, அல்லது ”ஐக்கிய மொழிபெயர்ப்பு” என்று அழைக்கப்படுகிறது.
பிரான்சுவா பூவியர் ஒரு பிரஞ்சுப் போர் வீரர். இந்தியாவில் நடைபெற்ற சண்டையில் கைதியானவர். இந்தியப் பெண்ணான யஸ்ட்டீனாவைத் திருமணம் செய்து இந்தியாவிலேயே வாழ்ந்து மறைந்தவர். இத்தம்பதியர்களுக்கு, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் சீயோன் ஆலயத்தை அடுத்துள்ள இல்லத்தில் என்றி பவர் ஐயர் பிறந்தார். (அருட்திரு.ஹென்றி பவர், 1813 சனவரி 17-ஆம் தேதி பிறந்ததாக ஜார்ஜ் கோட்டையில் உள்ள தூய மேரி ஆலயப் பதிவேடு கூறுகிறது. ஆனால் பவர் குடும்பத்தார், 1812 திசம்பர் 18-ஆம் தேதியையே பவரின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். பவர் ஐயரின் கல்லறையில், 18-12-1812ல் பிறந்ததாகவும், 2-9-1885ல் இறந்ததாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.) இவர் பட்டாளத்தார் அனாதையர் ஆண்கள் ஆசிரமத்தில் (Military Male Orphan Asylum) கல்வி பயின்றார். சென்னை ஆளுநரின் காரியதரிசி கர்னல். ஜான் கார்பிறே, இளைஞரான பவரை நேசித்ததால், பவருக்கு அநேக உதவிகளைச் செய்தார். மேலும், பேருபகாரியான கர்னல். ஜான் கார்பிறே, 1832ஆம் ஆண்டு, பவரை இங்கிலாந்துக்குத் தன்னோடு கூட்டிச் சென்றார். 1833ஆம் ஆண்டு, லண்டன் மிசனரி சங்கம் (LMS) நடத்தும் ஊழியரைப் பயிற்றுவிக்கும் கலாசாலையில் பவர் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்பு, 1837ஆம் ஆண்டு, இந்தியா திரும்பினார்.
அருட்திரு. ஹென்றி பவர் எம்மா டெய்லர் என்ற பெண்ணை 1839 மே 9 அன்று திருமணம் செய்தார். இவர்களுக்கு, அனா பவர் (18-09-1839 – 19-12-1857), ஜான் பவர் 29-09-1841 – 12-05-1913 என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். பவரின் மனைவி எம்மா 1844-ஆம் ஆண்டு இறந்ததால், எலிசா ஜெஸி பிளக்கர் என்ற பெண்ணை 1847 மே 10 அன்று மறுமணம் செய்தார். இவர்களுக்கு, என்றி பிரான்சிஸ் பவர் (11-02-1848 – 01-09-1895), வில்லியம் லோன் பவர் (04-02-1849 - 08-05-1900), பிரெடெரிக் கார்டான் பவர் (07-04-1852 – 03-04-1853), அலெக்சாந்தர் ஜார்ஜ் பவர் (02-02-1854), எம்மா எலிசா பவர் (02-10-1855 – 17-04-1856), இராபர்ட் ஸ்டீபன் பவர் (15-03-1857) என ஆறு பிள்ளைகள் என மொத்தம் எட்டு குழந்தைகள் இருந்தன.
முதலில் திரிப்பசூரில் ஊழிய வேலையைத் துவக்கினார். பின்பு, 1838ஆம் ஆண்டு, புரசைவாக்கத்துக்குக் குடிபெயர்ந்தார்.[2] 1842 ஆம் ஆண்டு, சுவிசேஷப் பிரபல்ய சங்கத்தில் (SPG) சேர்ந்து, 1843 இல் உதவி குருவாகவும், 1845 இல் குருவாகவும் அபிசேகம் பெற்றார். பவர் ஐயர், தஞ்சாவூருக்கு அருகாமையில் கிறிஸ்தவ சமய ஊழியரைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதற்கு ‘வேதியர்புரம்’ என்றும் பெயரிட்டார். 1858 ஆம் ஆண்டு, வேதியர்புரத்தை விட்டு நீங்கி, வேதாகம மொழிபெயர்ப்பில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1864 ஆம் ஆண்டு, மொழிபெயர்ப்பு வேலையோடு வேப்பேரியிலுள்ள பரி. பவுல் ஆலயக் குருவாகவும் நியமனம் பெற்றார். 1871 இல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு உறுப்பினர் பதவியை ஏற்றார். ஆங்கிலத் திருச்சபையின், ஜெபப்புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட குழுவிலும் ஓர் அங்கத்தினர் ஆனார். இந்த வேலை இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. ஜெபப்புத்தக மொழிபெயர்ப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில், அதாவது, 1872ஆம் ஆண்டு, திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டு, பின்பு திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து மீண்டும் வேப்பேரி ஆலயத்திற்கு வந்தார். 1877ஆம் ஆண்டு, கான்டர்பெரி பேராயர், பவர் ஐயருக்கு ‘இறையியற் கலைஞர்’ (Doctor of Divinity), என்னும் பட்டத்தை வழங்கினார். பவர் ஐயர் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில் ஊழியம் (ஆன்மிகப் பணி) செய்வதையே பெரிதும் விரும்பினார்.
- மேலும் ஹென்றி பவர் நன்னூலிடத்தும், திருக்குறளிடத்தும் அதிக ஈடுபாடு உடையவராயிருந்ததால், “தமிழ் இலக்கணம் என்றால் அது பவணந்தியாரின் நன்னூலே! தமிழ் முதல்தர இலக்கியம் என்றால் அது திருவள்ளுவரின் திருக்குறளே”, என்ற கருத்தினை குறித்து வைத்துள்ளார்.
1884ஆம் ஆண்டு ஓய்விற்கு பின்னர் பவர், உடல் நலக் குறைவுக்குள்ளானார். இறுதி காலத்தில் குற்றாலத்திற்கு வந்து, சிறிது காலம் வசித்தார். அதன் பின்பு 1885ஆம் ஆண்டு இறந்தார்.