![]() | |
வகை | அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | செப்டம்பர் 2011 |
தலைமையகம் | புக்கிட் டாமன்சாரா, கோலாலம்பூர், மலேசியா |
சேவை வழங்கும் பகுதி | கிள்ளான் பள்ளத்தாக்கு |
முதன்மை நபர்கள் | முகமது சரிப் அசிம் (தலைமை நிர்வாக அதிகாரி) |
தொழில்துறை | பொது போக்குவரத்து |
உற்பத்திகள் | கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து |
சேவைகள் | ![]() ![]() ![]() |
உரிமையாளர்கள் | மலேசிய நிதி அமைச்சு |
எம்ஆர்டி நிறுவனம் (ஆங்கிலம்: MRT Corp அல்லது Mass Rapid Transit Corporation (MRT Corp) (MRTC); மலாய்: Mass Rapid Transit Corporation Sdn Bhd) என்பது மலேசிய நிதி அமைச்சின் கீழ் இயங்கும்; மலேசிய அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் மலேசிய நிதி அமைச்சு (ஒருங்கிணைத்தல்) சட்டம் 1957-இன் (Ministry of Finance Incorporation Act 1957) கீழ் நிறுவப்பட்டது.[1]
இந்த நிறுவனம் கோலாலம்பூரில் பொது விரைவு போக்குவரத்து திட்டத்தின் மேம்பாட்டு நிறுவனமாக அமைக்கப்பட்டது. அத்துடன், கோலாலம்பூர் மாநகரின் பொது போக்குவரத்து அமைப்பை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையின் கீழ் மலேசிய அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.[2]
எம்ஆர்டி நிறுவனம் செப்டம்பர் 2011-இல் நிறுவப்பட்டது. மற்றும் அக்டோபர் 2011-இல் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து திட்டத்தை (Klang Valley Mass Rapid Transit Project) (KVMRT) செயல்படுத்துவதற்கான உரிமை இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஏற்கனவே பிரசரானா மலேசியா (Prasarana Malaysia) நிறுவனத்திடம் வழங்கப்பட்டு இருந்தது. பிரசரானா மலேசியா நிறுவனம் வேறு பல போக்குவரத்து தொடர்பான மேம்பாட்டு திட்டங்களில் ஈடுபட்டு இருந்ததால் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து எம்ஆர்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
பொது போக்குவரத்து திட்டத்தின் அனைத்து உயரமான கட்டமைப்புகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் தொடருந்துகளைப் பழுதுபார்க்கும் அல்லது செப்பனிடும் கிடங்ககங்களின் கட்டுமானத்தை கண்காணித்தல் போன்றவை இந்த நிறுவனத்தின் தலையாய பொறுப்புகளாகும். சுரங்கப் பாதைகள் மற்றும் மெட்ரோ நிலத்தடி நிலையங்களின் கட்டுமானங்கள் உள்ளடக்கிய நிலத்தடி வேலைகள் அனைத்தையும் இந்த நிறுவனம் கண்காணிக்கின்றது.