ஏக்நாத் ஷிண்டே | |
---|---|
20 வது மகாராட்டிர முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 சூன் 2022 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
Deputy | தேவேந்திர பத்னாவிசு அஜித் பவார் |
முன்னையவர் | உத்தவ் தாக்கரே |
தொகுதி | கோப்ரி-பச்பக்கடி சட்டமன்றத் தொகுதி |
மகாராட்டிரா அமைச்சர் | |
பதவியில் 28 நவம்பர் 2019 – 29 சூன் 2022 | |
அமைச்சர் | நகர்புற மேம்பாட்டுத் துறை மற்றும் பொதுப்பணித் துறை |
ஆளுநர் | |
முதலமைச்சர் | உத்தவ் தாக்கரே |
முன்னையவர் | தேவேந்திர பத்னாவிசு
|
பதவியில் 5 டிசம்பர் 2014 – 12 நவம்பர் 2019 | |
அமைச்சர் | பொதுப்பணித் துறை மற்றும் பொது சுகாதாரம் & குடும்பநலத் துறை |
முதலமைச்சர் | தேவேந்திர பத்னாவிசு |
முன்னையவர் | - |
பின்னவர் | இராஜேஷ் தோப்
|
தானே மாவட்ட பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 09 சனவரி 2020 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முதலமைச்சர் | உத்தவ் தாக்கரே அவரே |
தொகுதி | கோப்ரி-பச்பக்கடி சட்டமன்றத் தொகுதி |
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் | |
பதவியில் 12 நவம்பர் 2014 – 5 டிசம்பர் 2014 | |
ஆளுநர் | |
முதலமைச்சர் | தேவேந்திர பத்னாவிசு |
முன்னையவர் | ஏக்நாத் காட்சே |
பின்னவர் | இராமகிருஷ்ண விக்கே பாட்டீல் |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏக்நாத் சம்பாஜி ஷிண்டே 9 பிப்ரவரி 1964 மகாராட்டிரா, இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
பிள்ளைகள் | சிறீகாந்த் ஷிண்டே |
பெற்றோர் | சம்பாஜி ஷிண்டே |
வேலை | அரசியல்வாதி |
ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சிவ சேனா கட்சியின் மூத்த அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மகாராட்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார்.
இவர் 2004, 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தானே மாவட்டத்தில் உள்ள கோப்ரி-பச்பக்கடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1][2] சிண்டே சிவ சேனா கட்சியின் சட்டமன்ற முன்னவராக உள்ளார்.[3]
சிண்டே, முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிசு மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் அமைச்சரவைகளில் பொதுப் பணித்துறை, நகர்புற மேம்பாடு, பொதுச் சுகாதராம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.
21 சூன் 2022 அன்று, சிவ சேனாவின் முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஏக்நாத் ஷிண்டே குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தின் ஒரு விடுதியில் தங்கினார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு நெருக்கடி முற்றியது. நெருக்கடியைத் தொடர்ந்து, மகாராட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, கூட்டணித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
2019 மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளான சிவ சேனா 56 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரசு கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு, சிவ சேனா கட்சி பாஜகவுடனான கூட்டணியை கைவிட்டு இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசுடன் மகா விகாஸ் அகாடி எனும் பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்தது.[2]
10 சூன் 2022 அன்று மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் எதிர்பாராத வகையில் 6ல் 4 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதன் மூலம் கட்சியில் உள்ள உட்கட்சி பூசல் முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்தது. 20 சூன் 2022 அன்று, சிவ சேனா உறுப்பினர் பலரின் குறுக்கு வாக்களிப்பின் காரணமாக, மகாராட்டிரா சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து (5) இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
சட்ட மேலவைத் தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே, சிவ சேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் சிண்டேவை அணுக முடியாத நிலை ஏற்பட்டது.[4] 21 சூன் 2022 அன்று, உத்தவ் தாக்கரே சிவ சேனாவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார், ஆனால் 10-12 சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள இயலாத நிலை காணப்பட்டது. ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவ சேனாவின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத்தில் உள்ள சூரத் நகரத்தின் ஒரு விடுதியில் தங்கினர். பின்னர் ஏக்நாத் சிண்டே தனக்கு 40 சிவ சேனா சட்டமன்ற உறுப்பின்ர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார்.[5]
மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து விலகி சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேருமாறு தாக்கரேவிடம் சிண்டே கோரினார்.[6][7] சூன் 22 அன்று, சிண்டே 40 சட்டமன்ற உறுப்பினர்களை அசாமின் குவஹாத்திக்கு மாற்றியதாகக் கூறினார்.[8]
சிண்டே மற்றும் அவருடன் இருக்கும் சிவ சேனா உறுப்பினர்களை மும்பைக்குத் திரும்பும்படி சம்மதிக்க வைக்கத் தவறியதால், சூன் 22 அன்று, மகாராட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தான் கூட்டணித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக அறிவித்தார். இந்நாளின் பிற்பகுதியில், உத்தவ் தாக்கரே முதல்வர் அரசு இல்லத்திலிருந்து அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு குடிபெயர்ந்தார்.[9][10][11] ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு அதிருப்தின் சிவசேனா மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில் தாம் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயார் என்று மகாராட்டிரா முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். [12]
இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மகாராஷ்டிர முதலமைச்சராக 30 சூன் 2022 அன்று பதவியேற்றார்.[13][14] 4 சூலை 2022 அன்று ஏக்நாத் சிண்டே மகாராட்டிரா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கான பெரும்பான்மையை நிருபித்துக் காட்டினார்.[15][16]
சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடிகளை பயன்படுத்தும் உரிமையை ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியின் பிரிவுக்கு மட்டுமே உரியது என இந்தியத் தேர்தல் ஆணையம் 17 பிப்ரவரி 2023 அன்று உத்தரவிட்டது.[17][18][19][20]