ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் Hartal Doktor Kontrak | |||
---|---|---|---|
அரசு ஒப்பந்த மருத்துவக் குழுவினர் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காலை 11 மணிக்கு அமைதிப் போராட்டத்தைத் தொடங்கினர். மேல்படிப்பை மேற்கொள்வதைத் தடுக்கும் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுப்பது; வேலைப் பாதுகாப்பிற்கு உறுதி வழங்குவது என்பது அவர்களின் இலக்கு. | |||
தேதி | 26 சூலை 2021 (மலேசிய நேரம் +8) | ||
அமைவிடம் | மலேசிய மருத்துவமனைகள் | ||
காரணம் | மலேசிய ஒப்பந்த மருத்துவர்களின் நியமனக் கொள்கைக்கு எதிர்ப்பு | ||
இலக்குகள் | |||
முறைகள் |
| ||
தரப்புகள் | |||
| |||
எண்ணிக்கை | |||
|
ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் அல்லது ஒப்பந்த மருத்துவர்களின் அர்த்தால் (மலாய்: Hartal Doktor Kontrak; ஆங்கிலம்: Hartal Doktor Kontrak) (HDK) என்பது 2021 சூலை 26-ஆம் தேதி மலேசிய மருத்துவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடு தழுவிய அமைதிப் போராட்டம் ஆகும்.
2016-ஆம் ஆண்டின் இறுதியில், மலேசிய அரசாங்கம் கொண்டு வந்த மருத்துவர் ஒப்பந்த முறைக்கு (Malaysia Government’s Contract System) எதிர்ப்புத் தெரிவிப்பதே அந்த அமைதிக் கண்டனம் அல்லது அமைதிப் போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
2021 சூலை 26-ஆம் தேதி, மலேசியாவில் உள்ள பல அரசாங்க மருத்துவமனைகளிலும்; அரசாங்கம் சார்ந்த மருத்துவ அமைப்புகளிலும் பணிபுரிந்த ஒப்பந்த மருத்துவர்கள் (Malaysian Contract Medical Officers) பலர், ஒரு மணிநேரம் கண்டன வேலை நிறுத்தம் செய்தார்கள்.
ஒப்பந்த மருத்துவர்கள் நியமனக் கொள்கை என்பது, டிசம்பர் 2016 முதல் மலேசிய அரசாங்கத்தால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு கொள்கை (The Malaysian Contract Medical Officers Appointment Policy); அதாவது மலேசிய நாட்டின் சுகாதார அமைப்பில் புதிய மருத்துவ அதிகாரிகளை நியமிப்பதற்கான ஒரு செயல்பாட்டுக் கொள்கை ஆகும்.[3]
2010-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள், குறிப்பாக தனியார்க் கல்வி நிறுவனங்கள் அதிகமாகத் திறக்கப் பட்டதால் மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் கூடியது. அதிகமான மருத்துவர்கள் எண்ணிக்கையைச் சமாளிக்கும் முயற்சியில் ஒப்பந்த மருத்துவர்கள் நியமனக் கொள்கை உருவாக்கப்பட்டது.
2016-ஆம் ஆண்டுக்குப் பின்னர், புதிதாக வரும் மருத்துவ மாணவர்கள், முதலில் ஒப்பந்த மருத்துவர்களாகப் பணியில் அமர்த்தப் படுவார்கள் எனும் நடவடிக்கை அமலுக்கு வந்தது. புதிதாக வரும் மருத்துவ மாணவர்கள் மூன்றாண்டு கட்டாயச் சேவைக்குப் பின்னர், தற்காலிகப் பணியாளர்கள் எனும் பிரிவிற்குள் சேர்க்கப் பட்டார்கள். தற்காலிகப் பணி என்றால் ஒப்பந்தப் பணி; அதாவது ஒப்பந்த மருத்துவர்கள் பணி.
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், ஒப்பந்த மருத்துவர்களை அரசாங்கம் எந்த நேரத்திலும் பதவியில் இருந்து நீக்கலாம்; அத்துடன் தேவைப் பட்டால் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். 2016-ஆம் ஆண்டுக்கு முன்னர், ஈராண்டு காலக் கட்டாயச் சேவையாக இருந்த முறைமை; மூன்றாண்டு காலக் கட்டாயச் சேவையாக மாற்றம் செய்யப்பட்டது.[4]
'ஹர்தால்' (Hartal) என்பது ஒரு குஜராத்தி சொல். பொதுமக்களின் எதிர்ப்பு அல்லது வேலைநிறுத்தம் என்பதைக் குறிக்கும் சொல். மலேசியாவில் ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற குழுவினர் அவர்களின் பேஸ்புக் அகப் பக்கத்தில் 'ஒப்பந்தம்' எனும் நிலையை 'நிரந்தரம்' என்று மாற்றவும் (Change 'contract' doctors status to permanent) என்று பதிவு செய்து இருந்தார்கள்.[5]
அண்மைய காலத்தில் மருத்துவம் படித்து சேவைக்கு வந்த மலேசிய மருத்துவர்கள் அதிகமாகி விட்டனர். அவர்களை அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களாக நிரந்தரமாக்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதுதான் மலேசிய அரசாங்கம் எதிர்நோக்கும் முதல் சிக்கல்.
2016-ஆம் ஆண்டுக்கு முன்னர் மலேசியாவின் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவியது. அதனால் மருத்துவம் படித்து வந்தவர்கள் அனைவரையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
ஒப்பந்த மருத்துவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பற்றி நியாயமான வகையில் கோரிக்கை வைத்தார்கள். அரசாங்கம் அமைதியாக இருந்தது. கடைசியில் 2021 ஜுலை 26-ஆம் தேதி ’ஹர்தால்’ எனும் பெயரில் மலேசிய ஒப்பந்த மருத்துவர்கள், நேரடியாகவே அமைதிக் கண்டனத்தில் இறங்கினார்கள்.
கண்டன வேலை நிறுத்தம் என்பதின் கொத்துக்குறி #HartalDoktorKontrak. நாடு முழுமைக்கும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் சேவை செய்து வரும் ஒப்பந்த மருத்துவர்கள், ஒரு மணிநேரம் கண்டன வேலை நிறுத்தம் செய்தார்கள்.
இருப்பினும், இந்த ஒப்பந்த நியமன முறைக்கு பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன. இந்தக் கொள்கை தொடர்பாக எழுப்பப்படும் முக்கிய பிரச்சனை என்னவென்றால், மருத்துவ அதிகாரிகளை நிரந்தர பதவிகளில் உள்வாங்குவதற்கான தெளிவான கொள்கை இல்லாததுதான்.[6]
ஐந்தாண்டு கால ஒப்பந்தம் (Five-year Contract) முடிவடைந்த பிறகு அரசு மருத்துவ அதிகாரிகளின் நிலைமை என்னவாகும் என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்தது. மே 2021-இல் மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா (Dr Adham Baba) வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், 32,000 ஒப்பந்த மருத்துவர்களில் 3% (789 பேர்) மட்டுமே நிரந்தர மருத்துவர்களாக நியமிக்கப்பட்டனர்.[6]
அதுமட்டுமின்றி, ஒப்பந்த மருத்துவர்கள் தொடர்பாக மேலும் பல பிரச்னைகள் எழுப்பப்பட்டன. ஒப்பந்த மருத்துவர்களின் குறைந்த சம்பளம்; பணியாளர் விடுப்பில் சிக்கல்கள்; மேலும் அவர்களின் படிப்பை மேற்கொண்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களாக (Specialised Medical Specialists) தகுதி உயர்வதற்கான வாய்ப்புகள் போன்ற பிரச்னைகள்.[7]
இத்தகைய ஒப்பந்த நியமன முறையினால், மலேசிய நாட்டின் மருத்துவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்பதும் ஒரு முக்கியப் பிரச்சினையாக அறியப்பட்டது.[8]
இந்தக் கொள்கையின் எதிர்வினைகள்; வெளிநாட்டில் படிக்கும் மலேசிய மருத்துவ மாணவர்களிடம் கணிசமாகக் காணப் படுகிறது. அவர்கள் மலேசியாவை விட வெளிநாடுகளில் தங்கள் படிப்பைத் தொடர அதிக உறுதியுடன் இருந்தனர்.
இந்தக் கொள்கையில் இருந்து எழும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக. மலேசியாவில் நிபுணத்துவ மருத்துவர் பற்றாக்குறை (Shortage of Specialist Doctors) பிரச்சினையும் இந்தக் கொள்கைப் பிரச்சினையில் காணப்படும் மற்றும் ஓர் அச்சுறுத்தலாகும்.[9]
ஒப்பந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் சுகாதார அமைப்பில் ஒப்பந்த முறை மருத்துவ அதிகாரிகளை உள்வாங்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்; ஒப்பந்த முறை கொள்கையை நிறுத்த வேண்டும்; என 2021 சூலை 26-ஆம் தேதி முதல் மலேசியா முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தப் படும் என்று ஒப்பந்த முறை மருத்துவர்க் குழு அறிவித்தது.
மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து ஒப்பந்த முறை மருத்துவர்க் குழுவின் அறிவிப்பு வெளிவந்தது. மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா; ஓர் அறிக்கையில்; ஒப்பந்த மருத்துவர் கொள்கையை ஆதரிப்பதாகவும்; பூமிபுத்ரா சார்பு (Pro-Bumiputera) நியமனத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பாரபட்சமானது என்று ஒப்பந்த முறை மருத்துவர்க் குழு எதிர்ப்பு தெரிவித்தது.[10]
இதையடுத்து, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்பந்தக் கொள்கை பற்றிய விவாதம் மீண்டும் எழுப்பப்பட்டது. இதன் விளைவாக ஒரு வருடத்திற்கான ஒரு சிறப்பு ஒப்பந்தத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. 5 டிசம்பர் 2021 முதல் 4 டிசம்பர் 2022 வரை அந்தச் சிறப்பு ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்றும் அறிவித்தது.[11][12][13]
வேலைநிறுத்தத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் பலர் தங்களின் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்து தங்களின் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்தத் தொடங்கினர்.[14]
இதைக் கவனித்த அரசாங்கம், ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளிடையே மன அழுத்தத்தைக் குறைக்க, 22 ஜூலை 2021-இல், மலேசிய அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. கட்டாய வேலை காலத்தை 24 மாதங்களில் இருந்து 18 மாதங்களாகக் குறைத்தது; அதாவது 18 மாத கடின உழைப்புக்குப் பிறகு ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஓய்வு அளிக்கும் திட்டம்.[15]
2021 சூலை மாதம் முழுவதும், ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சினை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஒப்பந்த மருத்துவர்கள் இணையம் வழியாகச் செய்திகளைப் பரவல் செய்தனர். சமூக ஊடகங்களில் (#HartalDoktorKontrak) எனும் கொத்துக் குறியை (Hashtag) அறிமுகம் செய்தனர். கறுப்புக் கொடியை அசைப்பது மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக அனைவரும் கருப்பு நிறத்தை அணிவது (Code Black) ஆகியவை அதில் அடங்கும்.[16]
2021 சூலை 12-ஆம் தேதி, ஒற்றுமையின் அடையாளமாக கருப்புத் திங்கள் (Black Monday) என்ற புதிய பிரசாரத்திற்கும் ஒப்பந்த மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர்.[17][18]
2021 சூலை 26-ஆம் தேதி, உச்சக்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஒப்பந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு தழுவிய நிலையில், ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட அரசு பொது மருத்துவமனைகளில் பணிபுரிந்த ஒப்பந்த மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.[19]
மருத்துவர்களுக்கான வழக்கமான காலை 11 மணி ஓய்வு நேரத்தில் வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. மலேசியா முழுவதும் ஒரே நேரத்தில் வேலை நிறுத்தம். இருப்பினும் காலை 11 மணி ஓய்வு இடைவேளைக்குப் பிறகு போராட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அவரவர் பணிகளுக்குத் திரும்பினர்.[20][21]
மருத்துவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறியதுதான் வேலை நிறுத்தப் போராட்டத்தின் தலையாய அடையாளமாகக் கருதப்பட்டது. இருப்பினும் சில அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை.[22][23]
வேலைநிறுத்தம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, போராட்ட இயக்கத்தின் பிரதிநிதி ஒருவர், 2021 தேசிய வரவு செலவுத் திட்டத்தில் (2021 National Budget) தங்கள் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும்; மறுக்கப்பட்டால் இதேபோன்ற வேலைநிறுத்தம் மீண்டும் நடத்தப் படலாம் என்றும் கூறினார்.[2]
பொதுவாக, இந்தப் போராட்டம் அரச மலேசிய காவல்துறையினரால் (Royal Malaysia Police) கட்டுப்படுத்தப்பட்டது. வேலைநிறுத்த நாளில், நாட்டின் மலேசிய இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை (Malaysian Movement Control Order) மீறிய பின்னணியில், காவல்துறையினர் வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களை விசாரித்தனர்.[24][25]
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஒப்பந்த மருத்துவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.[25]
2021 சூலை 27-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ம்லேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா உறுதி அளித்தார். இந்த முடிவை முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் (Dzulkefly Ahmad) உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தனர்.[26]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)