கங்காதர் பிரதான் | |
---|---|
பிறப்பு | பரிகுலா, பூரி மாவட்டம், ஒடிசா | 10 சூலை 1948
இறப்பு | 10 அக்டோபர் 2010 | (அகவை 62)
பணி | பாரம்பரிய நடனக் கலைஞர் |
பிள்ளைகள் | 4 |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி, பத்மசிறீ |
வலைத்தளம் | |
konarkfestival |
கங்காதர் பிரதான் (Gangadhar Pradhan) (10 ஜூலை 1948 - 10 அக்டோபர் 2010) ஓர் இந்திய ஒடிசி நடனக் கலைஞர் ஆவார்.
கங்காதர் பிரதான் ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பரிகுலா என்ற கிராமத்தில் பிறந்தவர்.[1][2] ஒரு விவசாயியான முரளிதர் பிரதான் மற்றும் அவரது மனைவி திவித்திகா தேவிக்கும் மகனாக பிறந்தார். பிறக்கும்போதே இவர் நோய்வாய்பட்டிருந்தார். தங்களது முந்தைய குழந்தைகள் இறந்துவிட்ட காரணத்தினால் கங்காதரை அருகிலுள்ள கிராமமான திமிரிசேனாவில் உள்ள கோவிலின் பிரதான தெய்வமான பாலுங்கேசுவருக்கு அர்ப்பணித்தனர்.[3] கங்காதருக்கு ஆறு வயதாக இருந்தபோது, கோவிலில் கோட்டிபுவா நடனக் கலைஞரானார். மேலும் அதை ஒரு தொழிலாலத் தொடர்ந்தார். பின்னர் உத்கல் சங்கீத் மகாவித்யாலயாவில் சேர்ந்து ஒடிசியையும் [3] பின்னர் மர்தலா வாசிப்பதிலும் பயிற்சி பெற்றார். மேலும் சஞ்சுக்தா பனிகிரகியுடன் சேர்ந்து இணை நடனக் கலைஞர் மற்றும் தாள வாத்தியக்காரராக இருந்தார்.[4] கங்காதர் ஒரு சிறந்த நடன இயக்குனராகவும் இருந்தார்.[4][3]
கங்காதர் பிரதான் 1975 இல் புவனேசுவரத்தில் ஒரிசா நடன அகாடமியையும், 1986 இல் கொனார்க் நாட்டிய மண்டபத்தையும் நிறுவினார். மேலும் கோனார்க் நடனம் மற்றும் இசை விழா (1986 இல்) மற்றும் தௌலி நடன விழா (2001 இல்), ஆகிய இரண்டையும் நடத்தினார். அத்துடன் பல சிறிய நடன விழாக்கள், கனடாவில் சித்ரலேகா நடன அகாடமி விழாவை நடத்தினார்.[3] இவர் ஒரிசா சங்கீத நாடக அகாடமியின் முன்னாள் தலைவராக இருந்தார். இவரது பிற்காலங்களில், மாநிலத்தின் நாட்டுப்புற நடன பாணிகளை ஆவணப்படுத்த ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்தார்.[4]
கங்காதர் பிரதானுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். 2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில், புவனேசுவரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் குருதிக்குழாய்ச் சீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் கங்காதர் அக்டோபர் 10 அன்று தனது 62 வயதில் பெருமூளை இரத்தக்கசிவு காரணமாக இறந்தார்.[5]
கங்காதர் பிரதான் உத்கல் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.[6] இவருக்கு 1998 இல் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.[7] 2008 இல் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[8] .