![]() கடசான் டூசுன் ஒற்றுமை மண்டபத்தில் காமாத்தான் 2014 அறுவடைத் திருவிழா | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1,701,285 (2020) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() ![]() ![]() தீபகற்ப மலேசியா ![]() | |
மொழி(கள்) | |
கடசான் மொழி, டூசுன் மொழி, ஆங்கிலம், மலாய் மொழி | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் (74.8%), இசுலாம் (22.6%), மோமோலியனிசம் (Momolianism) | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
டூசுன் மக்கள், ருங்குசு மக்கள், கடசான் மக்கள், ஓராங் சுங்கை மக்கள், மூருட் மக்கள், லுன் பாவாங்/லுன் டாயே மக்கள் | |
a Statistical Yearbook: Sabah, 2002, & Statistical Sabah Data 2020 |
கடசான் டூசுன் மக்கள் (மலாய்: Kadazan-Dusun அல்லது Bangsa Kadazan Dusun அல்லது Orang Kadazan Dusun; ஆங்கிலம்: Kadazan-Dusun அல்லது Mamasok Kadazan-Dusun; சீனம்: 卡达山-杜顺人) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியா, வடக்கு போர்னியோ, சபா, லபுவான், புரூணை, நிலப்பகுதிகளில் வாழும் பூர்வீகப் பழங்குடி மக்களாகும்.[1]
கடசான் டூசுன் மக்கள், அவர்களின் நில உரிமைகள், அவர்களின் பழக்க வழக்கங்களைப் பேணுவதற்கும்; அவர்களின் சொந்த சிறப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கும்; அவர்கள் பூமிபுத்திரா குழுவாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.
சபா மாநிலத்தில் மாமசோக் சபா என்றும் அழைக்கப் படுகிறார்கள். "அசல்" அல்லது "பழங்குடி மக்கள்" என்று பொருள்படும். பொதுவாகவே, மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள இரண்டு பழங்குடி மக்களான கடசான் மற்றும் டூசுன் இனக் குழுக்களைக் குறிப்பிடுவதாக அமையும்.
கடசான் டூசுன்கள், சபாவில் உள்ள பூமிபுத்திராக்களில் மிகப் பெரிய பூர்வீகக் குழுவினர் ஆகும். பெரும்பாலான கடசான் டூசுன் பழங்குடியினர், தாங்கள் நுனுக் ரகாங் (Nunuk Ragang) மக்களின் வழித்தோன்றல்கள் என்று நம்புகின்றனர்.
சபாவின் மேற்கு கடற்கரையில் உள்ள பெனாம்பாங் மாவட்டத்தை (Penampang District) சுற்றியுள்ள இடங்கள்; மற்றும் உட்புறத்தில் பல்வேறு இடங்களில் கடசான்-டூசுன்கள் மிகுதியாகக் காணப் படுகின்றனர்.
அண்மைய காலங்களில் சபா மாநிலத்தில் ஏற்பட்டு வரும் அரசியல் தாக்கங்கள் (Political Initiatives) பண்பாட்டுக் கலவைகள்; மொழி ஒருங்கிணைப்புகள் போன்றவற்றினால் டூசுன் - கடசான் ஆகிய இரண்டு குழுக்களும் இடையே நெருக்கமான பிணைப்புக்கள் ஏற்ப்பட்டு வருகின்றன. அதன் பிரதிபலிப்பாக கடசான் டூசுன் (Kadazan-Dusun) எனும் ஒரு புதிய இனச் சொல்லும் உருவாக்கப்பட்டு உள்ளது.
கடசான் டூசுன் எனும் இந்த இரு குழுக்களும் ஒன்றாக இணைந்து, தற்சமயம் சபாவில் மிகப் பெரிய இனக் குழுவாக மாற்றம் கண்டு வருகின்றன. அதே வேளையில், கடசான் டூசுன் இனக் குழுக்களை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO); போர்னியோவில் ஒரு பாரம்பரியப் பழங்குடி இனக் குழுக்களாகவும் அங்கீகரித்து உள்ளது. இந்த அங்கீகாரம் 2004-ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றது.[2]
மலேசியாவில் கடசான் டூசுன் சிறப்புரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பல அமைப்புகள் நிறுவப்பட்டு உள்ளன. அவற்றில் கடசான் டூசுன் மூருட் அமைப்பு (Pertubuhan Kadazan-Dusun Murut) முதன்மையானது. சபா, பெனாம்பாங், டோங்கோங்கான் எனும் இடத்தில் தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
1950-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கடசான் எனும் சொல் பயன்பாட்டில் இருப்பதாகச் சான்றுகள் உள்ளன. 'கடசான்' (Kadazan) என்ற சொல்லுக்கு 'நாட்டின் மக்கள்' என்று பொருள். நிலத்தின் உண்மையான மக்களை விவரிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
கடசான் மக்களின் வரலாற்றில் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, புரூணை சுல்தானகத்தால் (Brunei Sultanate) ஆளப்பட்டு உள்ளனர். கடசான் (Kadazan) அல்லது கடயான் (Kadayan) என்பவர்கள் 'ஓராங் டூசுன்' (Orang Dusun) என்று புரூணை சுல்தானகத்தால் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப் பட்டனர். 'பழத்தோட்டத்தின் மக்கள்' என்று பொருள்படும்.
1881-ஆம் ஆண்டு பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் (North Borneo Company) மேற்கொள்ளப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் கடசான் மக்களைப் பற்றிய சில உண்மைகள் தெரிய வந்தன.[3]
சபா பாப்பார் (Papar) பகுதியில் வசித்த பூர்வீக மக்கள் தங்களை கடசான்கள் என்று அழைக்கப் படுவதற்கு விரும்புவதாக 1927-இல் ஓவன் ரட்டர் (Owen Rutter) எனும் பிரித்தானியர் எழுதி உள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம், அனைத்து கடசான்களும் டூசுன்கள் என வகைப்படுத்தப் பட்டனர்.
1980-ஆம் ஆண்டுகளில் கடசான் என்பவர்கள் உண்மையிலேயே கடசான் மக்களா அல்லது டூசுன் மக்களா எனும் பிரச்சினை தலைதூக்கியது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, 1985-ஆம் ஆண்டில், கடசான்-டூசுன் (Kadazandusun) எனும் பெயர்ச் சொல் அமல் படுத்தப்பட்டது.[4]
அந்தச் சொல் 'ஓராங் டூசுன்' மக்களுக்கும் கடசான் மக்களுக்கும் பொருத்தமாக அமையும் அதிகாரச் சொல்லாக அமைந்தது. தற்சமயம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரண்டு நாடுகளும் கடசான்-டூசுன் எனும் இனக்குழுவினரின் பெயரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றன.
2018-ஆம் ஆண்டு மலேசியா சபா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மனித மரபியல் ஆய்வுக் குழுவால் மரபணு வகை தரவு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் இருந்து, வடக்கு போர்னியோவில் உள்ள டூசுன் மக்கள்; சோன்சோகன் (Sonsogon), ருங்குசு (Rungus), லிங்கபாவ் (Lingkabau), மூருட் (Murut) இனக்குழுவினர்; தைவான் பூர்வீகவாசிகளான அமி மற்றும் அடயல் (Taiwan Natives of Ami and Atayal) குழுவினருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்று கண்டு அறியப்பட்டது.
அத்துடன் போர்னியோ டூசுன் மக்கள்; ஆஸ்ட்ரோ-மெலனேசியர் (Austro-Melanesian) அல்லாத பிலிப்பீன்சு நாட்டின் விசயன் மக்கள் (Visayan), தகலாகு மக்கள் (Tagalog), இலோகானோ மக்கள் (Ilocan), மினனுபு (Minanubu) பிலிப்பினோ மக்களுடன் தொடர்பு உடையவர்கள் என்றும் கண்டு அறியப்பட்டு உள்ளது.[5]
கடசான் கலாசாரம் நெல் விவசாயத்தைப் பெரிதும் சார்ந்து உள்ளது. பல்வேறு சுவையான உணவுகளுக்கும் கடசான் கலாசாரம் பெயர் பெற்றது. கடசான் வீடுகளில் மது பானங்கள் நொதித்தல் செயல்முறைகள் மூலம் தயாரிக்கப் படுகின்றன.
தூமிசு (To'omis) மற்றும் லினுதாவு (Linutau) ஆகிய மதுபானங்கள்; கடசான் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரிமாறப்படும் முக்கிய அரிசி மதுபான வகையாகும். கடசான் சமூகக் கூட்டங்கள் மற்றும் கடசான் விழாக்களில் இந்த மதுபானம் முக்கியமான பானமாகக் கருதப் படுகிறது.
கடசான்களின் மிக முக்கியமான திருவிழா காமத்தான் (Kaamatan) அல்லது அறுவடை திருவிழா ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக்குப் பிறகு நெல் தெய்வங்களைச் சிறப்பு செய்வதற்காக அறுவடை திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். மே மாதத்தில் நடைபெறுகிறது. அத்துடன் மே மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் சபா முழுவதும் பொது விடுமுறை நாட்களாகும்.[6]
அறுவடை திருவிழா கொண்டாட்டத்தின் போது, அறுவடை திருவிழா அழகு ராணி (Unduk Ngadau) போட்டியும் நடைபெறும். ஓர் இளம் பெண், அறுவடை திருவிழா அழகு ராணியாக முடிசூட்டுவது வழக்கமான நிகழ்வு ஆகும். சபா மாநிலத்தின் சில மாவட்டங்களில் இருந்து கடசான், டூசுன், மூருட் அல்லது ருங்குசு வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண்கள் இந்தப் பட்டத்திற்காகப் போட்டியிடுவதும் வழக்கம்.[6]
போர்னியோவின் வடக்கு உள்நாட்டுப் பகுதிகளில் வசிக்கும் 29 துணை இனக் குழுக்களில் (Sub-ethnic Groups) மூருட் மக்களும் ஒரு குழுவினர் ஆகும். மூருட் மக்கள் பேசும் மூருட் பேச்சு மொழிகள் (Murutic Languages) என்பது ஆசுத்திரோனேசிய மொழிகளுக்குள் (Austronesian Languages) வகைப்படுத்தப் பட்டுள்ளன. மூருட் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு ’மலை மக்கள்’ என்பதாகும்.
மூருட் சமூகங்களில் பெரும் பகுதியினர் சபா, கிழக்கு மலேசியாவின் தென்மேற்கு உள்பகுதியில் உள்ளனர். குறிப்பாக சபுலுட் ஆறு (Sapulut) மற்றும் படாஸ் ஆறு (Padas) ஆகியவற்றின் கரையோர மாவட்டங்களான கெனிங்காவ் மாவட்டம் (Keningau District), தெனோம் மாவட்டம் (Tenom District), நாபாவான் மாவட்டம் (Nabawan District) மற்றும் பியூபோர்ட் மாவட்டம் (Beaufort District) ஆகிய மாவட்டங்களில் உள்ளனர்.[7]
சரவாக் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக லாவாஸ் மாவட்டம் (Lawas District) மற்றும் லிம்பாங் பிரிவு (Limbang Division) பகுதிகளைச் சுற்றிலும் வாழும் மூருட் மக்கள்; தாகல் மக்கள் (Tagal People) என்றும் அழைக்கப் படுகின்றனர்.
புருணையில் உள்ள மூருட் மக்கள் தெம்புராங் மாவட்டத்தில் (Temburong District) அதிகமாகக் காணப் படுகின்றனர். அவர்கள் அங்கு லுன் பாவாங் (Lun Bawang) என்று அழைக்கப் படுகிறார்கள். அண்மைய ஆண்டுகளில் இவர்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது.