எம்.ஆர்.ராமகிருட்டிண பணிக்கர் (22 மார்ச் 1935 - 31 மார்ச் 2008) [1] கடம்மனிட்டா இராமகிருட்டிணன் அல்லது கடம்மனிட்டா என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் ஒரு இந்தியக் கவிஞராவர். இவர் கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் கடம்மனிட்டா என்ற பகுதியில் பிறந்தார். இவரது குழந்தை பருவ அனுபவங்கள், குறிப்பாக படயணி பாடல்கள் இவரது இலக்கியப் பணிகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின.[2]
இராமகிருட்டிணன் 1935 மார்ச் 22 அன்று மேலதரயில் ராமன் நாயர், குட்டியம்மா ஆகியோருக்கு பிறந்தார். இவர் தனது சொந்த கிராமமான கடம்மனிட்டாவிலும், அருகிலுள்ள நகரமான பத்தனம்திட்டாவிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.[1] சிறுவயதிலிருந்தே படயணியின் பாரம்பரிய கலை வடிவத்தால் இவர் செல்வாக்கு பெற்றுள்ளார்.[2] தனது பட்டப்படிப்புக்குப் பிறகு, இவர் கொல்கத்தா சென்றார். பின்னர் சென்னை திரும்பினார். இவர் 1959 இல் அஞ்சல் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் பணியாற்றினார். இவர் 1967 முதல் கடைசியாக திருவனந்தபுரத்தில் 1992 இல் ஓய்வு பெறும் வரை இத்துறையில் பணியாற்றினார்.
இராமகிருஷ்ணனின் "நிஜன்" என்ற கவிதைகள் 1965 இல் எம்.கோவிந்தனின் சமீக்சா என்ற இதழில் வெளியிடப்பட்டது.[3] 1970களிலும் 80களிலும் கேரளாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆயிரக்கணக்கான கவிதை வாசிப்பு அமர்வுகளை நடத்தியதன் மூலம் கவிதை மீதான ஆர்வத்தை புதுப்பிப்பதில் கடம்மனிட்டா ஒரு பங்கைக் கொண்டிருந்தார்.[1] இவரது படைப்பு அதன் சக்தி, ஆற்றல், நாட்டுப்புறத் தொடர்பு ஆகியவற்றால் பரவலாகப் பாராட்டப்பட்டதுடன், வெகுசன வரவேற்பையும் பிரபலத்தையும் கொடுத்தது. கவிதைகளை சாதாரண மக்களுக்குக் கூட சுவாரஸ்யமாக்கியது.[2]
எம். கோவிந்தன், அய்யப்ப பணிக்கர், எம்.வி.தேவன், பி.கே. பாலகிருஷ்ணன், ஓ. என். வி. குறுப்பு, காவலம் நாராயண பணிக்கர், டி.வினயச்சந்திரன், கே. வி. தம்பி ஆகியோர் வரிசையில், பண்பாடு சார்ந்த இலக்கியத்தில் இராமகிருஷ்ணனின் நெருங்கிய தொடர்பு மலையாள கவிதை வாசிப்புக்கு பிரபலமான தோற்றத்தை வழங்குவதற்கான முயற்சியில் இவருக்கு உதவியது. இவர் தனது தீவிரமான படைப்புகளை மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் வாசித்ததை தவிர கேரள கவிதா என்ற கவிதை இதழின் ஆசிரியராக இருந்து, கவிதை சாரத்தை கல்விக் கலைஞர்களிடமிருந்து அன்றாட வாழ்க்கையின் அரங்கிற்கு எடுத்துச் செல்ல முயன்றார்.
ஒரு பொதுவுடமைவாதியான, இவர் தனது கல்லூரி நாட்களில் மாணவர் கூட்டமைப்பு, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார்.[3] 1992 ஆம் ஆண்டில் இவர் சிபிஐ-எம் கட்சியின் கலாச்சார பிரிவான புரோகமன கலா சாகித்ய சங்கத்தின் (கலை மற்றும் கடிதங்களுக்கான முற்போக்கு சங்கம்) துணைத் தலைவராகவும், 2002 இல் அதன் தலைவராகவும் ஆனார்.[4] 1996 ஆம் ஆண்டில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறன்முளா தொகுதியில் இருந்து கேரள மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
மூன்று மாதங்களாக மைலோயிட் லுகேமியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இராமகிருட்டிணன் 2008 மார்ச் 31 அன்று பத்தனம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், கீதா தேவி என்ற மகளும், கீதகிருட்டிணன் என்ற மகனும் உள்ளனர்.[1] இவர் பிறந்த கிராமத்தில் உள்ள இவரது வீட்டின் வளாகத்தில் முழு மாநில மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டார் . இவர் மேலும் இன்றளவும் அனைவராலும் நினைவுக் கூறப்படுகிறார்.