கன்கால், தட்சேசுவரர் மகாதேவர் கோயில், மா ஆனந்தமாயி ஆசிரமம், 19ஆம் நூற்றாண்டில் இந்து யாத்ரீகர்களால் கட்டப்பட்ட நேர்த்தியான சுவர் ஓவியங்களைக் கொண்ட பல ஆசிரமங்கள், பழைய வீடுகளுக்கு இந்த ஊர் மிகவும் பிரபலமானது.[1]
மகாபாரதத்தில் கன்கால் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதோ, அரசே, முனிவர்களின் விருப்பமான வசிப்பிடமன கனகலா மலைத்தொடர் உங்களுக்கு முன்னால் உள்ளது. 'அங்கே வலிமைமிக்க கங்கை நதி இருக்கிறது. இங்கே, பண்டைய காலத்தில், புனிதமான சனத்குமார முனிவர் வெற்றியை அடைந்தார். அஜாமிதா இனத்தின் வாரிசுகளே, இந்த நதியில் நீராடுவதின் மூலம், உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.
— மகாபாரதம், நூல் 3: வனபருவம்: தீர்த்தயாத்திரை பருவம்: பகுதி CXXXV.[6]
"கங்காதுவாரா (அரித்துவார்), குசவர்தா, கன்கலா ஆகிய இடங்களில் நீராடினால், ஒருவன் தன் பாவங்கள் அனைத்தையும் நீங்கி, பிறகு சொர்க்கத்திற்குச் செல்வது உறுதி.."
— மகாபாரதம், நூல் 13: அனுசானிக்க பருவம்: பகுதி XXV, p. 130.[3]
பாரம்பரியமாக, கன்கால் சிவனின் கோடைகால தலைநகராகவும், குருசேத்திரம் குளிர்கால தலைநகராகவும் கருதப்படுகிறது. சிவபெருமான் அரியணை ஏறிய பிறகு சமவெளிப் பகுதிகளான தற்போதைய அரித்துவாருக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.
மகாபாரதத்தின் வனபருவத்தில், தௌம்ய முனிவர் தருமனிடம் இந்தியாவின் தீர்த்தங்களைப் பற்றிக் கூறும் இடத்தில், கங்காதுவார், அதாவது அரித்துவார் பற்றியும், கன்காலைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.[7] கி.பி. 3ஆம் நூற்றாண்டின் சமசுகிருதக் கவிஞரும் நாடக ஆசிரியருமான காளிதாசனின்மேகதூதத்திலும் கன்கால் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
முதல் சீக்கிய குருவான, குரு நானக் (1469-1539), கி.பி 1504இல் அரித்துவாருக்குச் சென்றபோது, வைசாக்கி தினத்தன்று, அவர் கார்வாலிலுள்ள கோத்வாரா செல்லும் வழியில் கன்காலுக்குச் சென்றார். விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதையின் (1867-1911) பயணக் கணக்குகளிலும் கன்கால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அரித்துவார் பிரபலமடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கன்கால் கல்விக்கும், யாத்திரைக்குமான மையமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார் [8]
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இது அரித்துவார் மற்றும் மாயாபூர் பகுதிகளில் இருந்து ஒரு தனி நகரமாக இருந்தது.[9] நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக இது இப்போது அரித்துவார் நகர எல்லைக்குள் வருகிறது.
ஏப்ரல் 1842 இல் அரித்துவாருக்கும் கன்காலுக்கும் இடையே மேல் கங்கை கால்வாயின் பணி தொடங்கியது.[10] பல்வேறு கோவில்கள், பல்வேறு பிரிவுகளின் ஆசிரமங்களைத் தவிர, கன்கால் பல பழைய அவேலிகள், மாளிகைகள், பெரும்பாலும் முந்தைய நூற்றாண்டில் கட்டப்பட்ட இப்போது பார்வையாளர்களை ஈர்க்கும், குறிப்பாக பாரம்பரிய சுற்றுலாக்களையும் கொண்டுள்ளது. அவை சுவர் ஓவியங்களுக்கும், அவேலி கட்டிடக்கலைக்கும் பெயர் பெற்றவை. மேலும் கோடைக் காலங்களில் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் நகரத்தில் தங்குவதற்காக சமஸ்தானங்களாலும், ஜமீன்தார்களாலும் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் அமைந்துள்ளது.
தட்சேசுவரர் மகாதேவர் கோயில் - என்பது தெற்கு கன்கால் நகரத்தில் அமைந்துள்ள [12] பழமையான கோயிலாகும். தற்போதைய கோவில் கி.பி.1810இல் [13] இராணி தன்கவுர் என்பவரால் கட்டப்பட்டது. 1962இல் இது புணரமைக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது.[2][14][15] கோவிலுக்கு அடுத்ததாக கங்கையில் 'தட்சன் படித்துறை' உள்ளது. அதன் அருகில் நீலேசுவரர் மகாதேவர் கோவில் உள்ளது. தட்சனின் புகழ்பெற்ற அசுவமேத யாகத்தின் பெரும்பாலான விவரங்கள் வாயு புராணத்தில் கிடைக்கின்றன [2]
சதி குண்டம்- கன்கால் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நன்கு அறியப்பட்ட புராண பாரம்பரியத் தளமாகும். இந்த குண்டத்தில் சதி தன் உயிரை விட்டதாக புராணம் கூறுகிறது. [5]
ராமகிருஷ்ணா மிஷன் சேவாசிரமம்[16] - இது அரித்துவார் நகரில் அமைந்துள்ளது. மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுவாமி விவேகானந்தரின் உத்தரவின் பேரில் 1901 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 150 படுக்கைகள் கொண்ட பல சிறப்புத் தொண்டு மருத்துவமனையாகும்.
ஆனந்தமாயி மா ஆசிரமம் - இந்த வினோதமான ஆசிரமம் இந்த இந்து துறவியான ஆனந்தமாயி மா (1896-1982) என்பவரின் வசிப்பிடமாக இருந்தது, மேலும் அவரது சமாதி ஆலயமும், அருகிலேயே அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகமும் உள்ளது. [17]
அபேத கங்கா மய்யா ஆசிரமம்- அபேத கங்கா மய்யா அறக்கட்டளையின் கீழ் இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது .
தேரா பாபா தர்கா சிங் ஜி, குருத்வாரா - இந்த குருத்வாரா மூன்றாவது சீக்கிய குருவான குரு அமர் தாஸுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்நாளில் இந்த இடத்திற்கு பல முறை வந்து சென்றுள்ளார். [18][19] கன்காலில் உள்ள சதி படித்துறை அருகே அமைந்துள்ளது. இது நிர்மலா சீக்கியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது சீக்கியர்களின் ஒரு புலமைப் பிரிவினரால் நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் 1705இல் பஞ்சாபின் ஆனந்த்பூரில் இருந்து வெளியேறி இதைத் தங்கள் தலைமையகமாக [20] ஆக்கிக் கொண்டனர்.
குருகுல காங்கிரி பல்கலைக்கழகம் - அரித்துவார்-சுவாலாபூர் வெளிவட்டச் சாலையில், கங்கை நதிக்கரையில் உள்ள கன்காலில் அமைந்துள்ள இது, இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 1902ஆம் ஆண்டில் சுவாமி சிரத்தானந்தா என்பவரால் (1856-1926) நிறுவப்பட்டது. ஆர்ய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரசுவதி, பிரித்தானிய தொழிற்சங்கத் தலைவர் சார்லஸ் பிரீர் ஆண்ட்ரூஸ், பிரித்தானிய பிரதம மந்திரி சேம்சு இராம்சே மெக்டொனால்டு[21] போன்றோர் குருகுல அடிப்படையிலான தனித்துவமான கல்வி முறையை ஆய்வு செய்ய வருகை தந்தனர். மகாத்மா காந்தி இதன் வளாகத்திற்கு மூன்று முறை வந்து சென்றுள்ளார். [21] மேலும், இதன் பரந்த, அமைதியான வளாகத்தில் நீண்ட காலத்திற்கு தங்கினார். குறிப்பாக 1916இல், மார்ச் 20 அன்று, குருகுல ஆண்டு விழாவில் அவர் பேசினார். [22]
↑ 2.02.12.22.3Vishnu Purana Sacrifice of Daksha (From the Vayu Purana.) The Vishnu Purana, translated by Horace Hayman Wilson, 1840. p. 62, "In former times, Daksha commenced a holy sacrifice on the side of Himaván, at the sacred spot Gangadwara, frequented by the Rishis. The gods, desirous of assisting at this solemn rite, came, with Indra at their head, to Mahadeva, and intimated their purpose; and having received his permission, departed in their splendid chariots to Gangadwára, as tradition eports.” 62:2Gangadwára, the place where the Ganges descends to the plains--or Haridwar, as it is more usually termed--is usually specified as the scene of action, The Linga (Purana) is more precise, calling it Kanakhala, which is the village still called Kankhal, near Haridwar.(Megha Dúta, p. 63 p. 59). p. 68 I am called Virabhadra, the issue of the wrath of Rudra. Bhadrakálí also, who has sprung from the anger of Devi…
↑the Horse-sacrifice of the Prajapati DakshaThe Mahabharata translated by Kisari Mohan Ganguli (1883 -1896], Book 12: Santi Parva: Mokshadharma Parva: Section CCLXXXIV. p. 317. "I am known by the name of Virabhadra’’ and I have sprung from the wrath of Rudra. This lady (who is my companion), and who is called Bhadrakali, hath sprung from the wrath of the goddess."