கன்னட கல்வெட்டுகள் (Kannada inscriptions) சுமார் 25000 கல்வெட்டுகள் கன்னட மொழியில் உள்ளன.[1] இவைகள் கதம்பர்கள் , மேலைக் கங்கர்கள், இராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், போசளர்கள், விஜயநகரப் பேரரசு போன்ற ஆட்சியாளர்களால் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகளில் பௌத்த மற்றும் சைன மதங்கள் தொடர்பான கல்வெட்டுகளே அதிகமாக உள்ளன. பெரும்பாலும் எழுத்து பொறிப்புகள் கல்லிலோ (சிலாசாசனம்) அல்லது செப்பு தகடுகளில் (தாமிரசாசனம்) உள்ளன. கன்னட கல்வெட்டுகள் (பழைய கன்னடம், கதம்ப எழுத்துகள்) வரலாற்று நடுகற்கள், நாணயம் , தூண்கள், பாறைகள் மற்றும் கோவில் சுவர்களில் காணப்படுகிறது. கல்வெட்டுகள் அந்த காலகட்டத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை சித்தரிக்கிறது. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை இந்த கல்வெட்டுகளால் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வருகின்றன. ஹசாரா ராமர் கோவில் மற்றும் ஆரன்முலா பார்த்தசாரதி கோவில் ஆகியவை இதற்கு சிறந்த உதாரணம்.
கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் பதிவு அசோகரின் பிரம்மகிரி ஆணை சுமார் கிமு 250 க்கு முந்தையது. தகர்த்தி கல்வெட்டு கிபி 350 க்கு முந்தையது.[2][3] 2013-14ல் இந்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியின் போது இங்குள்ள சிராலகொப்பாவிற்கு அருகிலுள்ள தலகுண்டாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு (கி.பி. 370) ஆரம்பகால கன்னட கல்வெட்டு என்று கூறப்படுகிறது..[4][5][6] சந்திரகிரி மலையின் கி.பி 400 இன் நிஷாதி கல்வெட்டு ( சரவணபெலகுளா ), கிபி 5 ஆம் நூற்றாண்டின் ஹால்மிடி கல்வெட்டு, அய்கொளெ கல்வெட்டுகள், 5 ஆம் நூற்றாண்டு சித்ரதுர்காவின் தமடேகல்லு கல்வெட்டு மற்றும் கி.பி 500 சிக்கமகளூரு கல்வெட்டுகள் கன்னட மற்றும் கர்நாடக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை.[7][8] சிறீபுருசனின் ஆட்சிக்காலம் என அறியப்பட்ட பெங்களூரு பகுதியில் உள்ள கன்னட கல்வெட்டு 2018 ஆம் ஆண்டு ஹெப்பாலில் கண்டுபிடிக்கப்பட்டது.[9] எகிப்து வரையிலான இடங்களில் கிறித்தவ சகாப்தத்திற்கு முந்தைய அரசாணைகள் மற்றும் கல்வெட்டுகளில் சில கன்னட சொற்கள் காணப்படுகின்றன.[10]