கம்போடிய இராசலட்சுமி Kambuja Raja Lakshmi កំបុជរាចាឡាកស្មី | |
---|---|
Queen Kambuja Raja Lakshmi | |
கம்போடியாவின் முடியாட்சி பூனான் மகாராணியார் | |
ஆட்சிக்காலம் | கி.பி. 575 – 580 |
முன்னையவர் | வீர வர்மன் (Vira Varman) |
பின்னையவர் | முதலாம் பவவர்மன் (Bhavavarman I) |
பிறப்பு | சிரேத்தபுரம் (Shreshthapura) |
துணைவர் | முதலாம் பவவர்மன் (Bhavavarman I) |
குழந்தைகளின் பெயர்கள் | இரண்டாம் பவவர்மன் (Bhavavarman II) |
மரபு | கம்புஜம் (House of Kambuj) |
அரசமரபு | கெமர் பேரரசின் வர்மன் வம்சாவளி சென்லா சோழர் |
தந்தை | சிரேத்தவர்மன் (Shreshthavarman) |
மதம் | இந்து சமயம் |
கம்போடிய இராசலட்சுமி அல்லது கம்போஜ இராஜலட்சுமி எனும் மகாராணி இராசலட்சுமி (ஆங்கிலம்: Kambuja Raja Lakshmi அல்லது Queen Kambuja Raja Lakshmi; கெமர்: កំបុជរាចាឡាកស្មី; தாய் மொழி: กัมพุชราชลักษมี) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) சிரேத்தபுரம் (Shreshthapura) எனும் நிலப்பகுதியை ஆட்சி செய்த ஒரு புகழ்பெற்ற இராணி ஆவார்.[1]
மகாராணி கம்போடிய இராசலட்சுமி, கி.பி. 575 முதல் கி.பி. 580 வரை சென்லா இராச்சியத்தை ஆட்சி செய்தவர். இவரின் ஆட்சிக் காலத்தின் பெருமைகள் கம்போடியாவின் புராணக் கதைகளிலும் சித்தரிக்கப் படுகின்றன.[2]
சென்லா இராச்சியத்தின் மன்னன் சிரேத்தவர்மனின் (King Sreshthavarman) மகளான கம்போடிய இராசலட்சுமி ஓர் இளவரசி ஆவார். மன்னன் சிரேத்தவர்மன் சிரேத்தபுரத்தின் (Shreshthapura) மன்னனாகவும் அறியப் படுகிறார்.[3]
கம்போடிய இராசலட்சுமி, அவரின் தாயாரின் வழியாக சென்லா அரச வம்சத்தின் பழைமையான வம்சாவளியைச் சேர்ந்தவர். 575-ஆம் ஆண்டில் கம்போடிய இராசலட்சுமி வீர வர்மன் மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்.[2][4]
கம்போடிய இராசலட்சுமிக்குப் பிறகு அவரின் கணவர் முதலாம் பவவர்மன் (Bhavavarman I) அரியணை ஏறினார். இருப்பினும், கம்போடிய இராசலட்சுமியின் ஆட்சிக்கான சமகால சான்றுகள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.[4]