கி. இராகவன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | இராகவன் மாஸ்டர் |
பிறப்பு | தலச்சேரி, மலபார் மாவட்டம், பிரித்தானிய இந்தியா | 2 திசம்பர் 1913
இறப்பு | 19 அக்டோபர் 2013 தலச்சேரி, கேரளம், இந்தியா | (அகவை 99)
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை, மெல்லிசை, மாப்பிளா பாடல்கள் |
தொழில்(கள்) | இசைக்கலைஞர், இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | கைம்முரசு இணை, விசைப்பலகை, தம்புரா, முரசு, குரலிசை |
இசைத்துறையில் | (1951–2000) (2007–2010) |
வெளியீட்டு நிறுவனங்கள் | எச்எம்வி இந்தியா |
கே. இராகவன் (K. Raghavan) (2 திசம்பர் 1913 - 19 அக்டோபர் 2013), இராகவன் மாஸ்டர் என்றும் அழைக்கப்படும் இவர், மலையாள இசை அமைப்பாளராக இருந்தார். ஜி. தேவராஜன், வெ. தட்சிணாமூர்த்தி, பாபுராஜ் ஆகியோருடன், இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்பட இசையின் மறுமலர்ச்சிக்கு பெருமை பெற்றார். மலையாளத் திரைப்படப் பாடல்களை அதன் சொந்த தாளங்கள் மற்றும் பாணிகளுடன் பங்களிப்பதில் முன்னோடியாக இருந்தார். அதுவரை மலையாளத் திரைப்படப் பாடல்கள் பிரபலமான இந்தி மற்றும் தமிழ் திரைப்படப் பாடல்கள் மற்றும் பழைய பாரம்பரிய கிருதிகளின் அடிப்படையில் இருந்தன. இவர், மலையாளத் திரைப்பட இசைக்கு ஒரு புதிய திசையையும் அடையாளத்தையும் கொடுத்தார். மலையாளத் திரைப்படங்களில் சுமார் 400 பாடல்களுக்கு இசையமைத்த இவர் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக மலையாளத் திரையுலகில் தீவிரமாக இருந்தார்.[1]
இவர், நாட்டுப்புற பாடகர் எம். கிருட்டிணன், நாராயணி ஆகியோருக்கு 1913 திசம்பர் 2 அன்று வடக்கு மலபாரிலுள்ள தலச்சேரியில் பிறந்தார்.[2] (மறைந்த) யசோதாவை மணந்த இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உட்பட ஐந்து குழந்தைகள் இருந்தனர். இவர் தனது 99 வயதில் 19 அக்டோபர் 2013 அன்று தலச்சேரியில் காலமானார்.[3]
இராகவன், சென்னை மாகாணத்தில் (இன்றைய கேரளா) கண்ணூருக்கு அருகிலுள்ள தலச்சேரியில் எம். கிருட்டிணன், நாராயணிக்கு 1913 இல் பிறந்தார். இவர், தனது சிறுவயதிலிருந்தே பாரம்பரிய இசையைப் படிக்கத் தொடங்கினார். மேலும் ஒரு நல்ல கால்பந்து வீரராகவும் இருந்தார். சென்னை, அனைத்திந்திய வானொலியில் தம்புராக் கலைஞராக இவரது தொழில் வாழ்க்கை தொடங்கியது. 1950ஆம் ஆண்டில் இவர் கோழிக்கோடு வானொலிக்கு மாற்றப்பட்டார். அங்கு இவர் திரைப்படக் கலைஞர்களுடன் தொடர்பு கொண்டார்.[4]
இராகவன் 1954ஆம் ஆண்டு நீலக்குயில் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட இசையில் ஒரு புதிய போக்கை அமைத்தார். புகழ்பெற்ற பாடலாசிரியரும், இவரது நண்பருமான பு. பாஸ்கரன் படத்தின் பாடல்களை எழுதினார். ஒரு பாடலுக்காக இராகவனே குரல் கொடுத்துள்ளார். கயலரிகாத்து வலயெரின்ஜாப்போல் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது.[5]
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், அறுபதுக்கும் மேற்பட்ட மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இவரது பல இசையமைப்புகள் மலையாளத்தில் எப்போதும் இரசிக்கப்படும் பாடல்களாக இருந்தது.[6] இவர், நாட்டுப்புறக் கூறுகளை மலையாளத் திரைப்பட இசையில் செலுத்தினார். மேலும் இவரது பழமையான மெல்லிசைகள் அன்றைய பிரபலமான இந்தி தாளங்களை பின்பற்றும் போக்கை மாற்றியமைத்தன. கேரள மக்கள் கலைக் கழகம், அனைத்திந்திய வானொலி போன்றவற்றில் ஒலிப்பரப்பட்ட நாடகங்களுக்கும் பாடல்களை இயற்றினார். மலையாளத் திரைப்பட இசைக்கு பலவிதமான குரல்களை முயற்சிக்க இவர் துணிந்தார். அவர்களில் பலர் புதியவர்கள். கே. ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன், மெகபூப், கே. பி. பிரம்மானந்தன், பாலமுரளிகிருஷ்ணா, எம். எல். வசந்தகுமாரி, ஏ. பி. கோமலா, காயத்ரி சிறீகிருட்டிணன், சாந்தா பி நாயர், ஏ. எம். ராஜா, கேபி உதயபானு, எம். ஜி. இராதாகிருட்டிணன், பி. பி. ஸ்ரீனிவாஸ், வாணி ஜெயராம், ஜிக்கி, வி. டி. முரளி, எம். ஜி. ஸ்ரீகுமார், சித்ரா, சுஜாதா மோகன் போன்ற அனைவரும் இவரது இசையில் பாடியுள்ளனர்.